ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

தேடலின் ஓசை.

தேடலின் ஓசை.
எனது கண்களைக் கட்டி விட்டுக் 
காட்டில் அலைய விட்டுள்ளாய்
புத்தகங்களுக்குள் புதைந்திருக்கும் 

பெரும் பூச்சியான நீ.

என் வாய்களை மூடி வைத்து 
உண்ண மட்டுமே அனுமதித்து 
புத்தகங்களுள் மூழ்கி 
தத்துவம் பேசுகிறாய் நீ.

என் காதுகளை அடைத்து விட்டு 
சைகையில் அசைய விட்டு 
இன்னும் 
புத்தகங்களுள் அமிழ்ந்து 
அறிவு தேடுகின்றாய் நீ.

என் பட்டங்களைப் பறக்க விட்டு 
பைத்தியமாய் அலைய விட்டு 
புத்தகங்களுடன் பேசி 
புதுயுகம் படைக்கும் 
மேன்மை பேசுகிறாய் நீ.

என் ஆத்மா தொலைந்து 
அலைவதை உணராது 
புத்தகக் குவியலுக்குள் 
முகம் புதைத்துக் கிடக்கிறாய் நீ.

இதோ!
உன்னால் உன்னைத் தேட முடியாத 
உனக்காயும் 
உன்னைத் திருப்பித் தர முடியாத 
நூல்களுக்காகவும் 
பரிதாபப்பட்டு நடக்கிறேன் 
தனியே 
பழக்கப்பட்ட விதத்தில்

நீயோ இன்னும் 
அதே இடத்தில் 
முகம் புதைத்தபடி.



வி. அல்விற்.
24.08.2014.

கருத்துகள் இல்லை: