வழியெங்கும் பெருகியோடியது உன்
ஒழுக்க முறைமையின் நீரூற்று
கட்டுக்கடங்காது பாய்ந்து வரும் நதிப் பெருக்குன்
எண்ணப் பெருக்கின் முன் தடங்கலுற்று நின்றது
கட்டிட வியலாக் காற்றுப் போல்
ஆவியுள் புகுந்த இலக்கு
சுற்றிச் சுழன்று செயல் வடிவெடுத்தாடியது
கண்ணொளி வீச்சு ஆளணிகளை
கணக்கின்றி வசப்படுத்தி அருகமர்த்தியது
புன்னகைப் பொதிக்குள்
புதைந்திருந்த நட்புப் பூ இயல்பாய்
இலக்கு நோக்கி நகர்த்தியிருந்தது
வார்த்தைகள் வாழ்வின் தொடர்பாய்
வெளி விழுந்து உள்நோக்கி இழுக்கத்
தொடங்கியிருந்த காலமதில்
அசைவு நிறுத்தி உலுப்பி விட்டு
அமைதியாகப் போயிருந்தாய்
நினைவுகளும் கணங்களுமே
மிச்சமாய்த் தொடருவதை அறிந்தபடி...