வெள்ளி, 30 நவம்பர், 2012

அழிந்து போகட்டும்!

படு பாவி உன்னைப் பெற்றவள்
மலடாயிருந்திருக்கலாம்!!
பூமித்தாய் மகிழ்ந்திருப்பாள்
உன் கால் பட்ட இடமெல்லாம்
கருகிக் கிடக்கும்
உன் வாய் அழுகிப் போகட்டும்
உன் நா பேச்செழாமல்
செத்துக் கிடக்கட்டும்
உன் காதுகள் அடைத்துப் போகட்டும்
கண்ணிரண்டும் குருடாகி

இருட்டிலே கிடக்கட்டும்
கையிரண்டு இழந்து நீ
அலைந்து திரிய வேண்டும்
காலிரண்டும் இழந்து
வெறும் சதைப் பிண்டமாய்
உருள வேண்டும்
நீ சாகும் நேரம்
தாகத்தால் தவித்துச் சாவாய்
தனியே யாருமின்றி
ஏங்கிச் சாவாய்
உன் உடல் விலங்கும் வேண்டாது
உருக்குலைந்து போகட்டும்
உன் சந்ததி இத்தோடு
வேரறு படட்டும்!
உன்னைச் சார்ந்த அனைத்தும்
அழிந்து போகட்டும்!
வயிறெரிந்து சொல்லுகிறேன்
உன் சந்ததி இத்தோடு நிற்கும்!

குருதி படிந்த முகங்கள்

வீரத்திலும், பொருளாண்மையிலும்
வெற்றிக் கொடி பறக்க வாழ்ந்தவோர் இனம்
உலகப் பந்தின் ஓர் இருண்ட மூலையில்
வலி தாங்கி நிற்கும்
ஓர் அவலப்பட்ட இனம்

விடுதலைக்காய் எதையும் விடாது
வீழ்ந்தும் மீண்டும்
மிடுக்குடன் எழும் இனம்
உலக முறைமைக்குள்

சுழன்றிடாததால்
அடித்து வீழ்த்தப் பட்டும்
அசையா நம்பிக்கைத் தூண்
பற்றி நிற்கும் இனம்

மீதித் தூரம் கொஞ்சமெனும்
ஆசை பற்றிக் கொண்ட இனம்
ஒவ்வொன்றாய்க் கொடுத்தும்
கொத்துக் கொத்தாய்க் கொடுத்தும்
இடிதாங்கியாய் ஏற்று
நகரும் இனம்

எத்தனை தாங்கியும்
மாறா வினம்
இன்று...
தனக்குள் மறுதலித்து மருகுவதேன்?
வேரோடு பிடுங்க இடமளிப்பதேன்?
குருடராய் தடுமாறி வீழ்வதேன்?

கண்மூடிக் கேளுங்கள்!
உங்கள் இதயத் துடிப்பை
அங்கே...
எங்களுக்காய்....
கண்மூடிய
குருதி படிந்த முகங்கள்
கண்ணீருடன் கேள்விகள் கேட்கும்.

எண்ணியது என்ன?

எண்ணியது என்ன?
நீங்கள் எண்ணியது என்ன?

என்னைத் தேட வேண்டாம் என்ற
ஒற்றைத் துண்டுக் குறிப்புடன்
உறவுகள் இழந்து
பாசங்கள் துறந்து
தேச நேசம் தேடிப் போன
கணங்களில் நீங்கள் எண்ணியது என்ன?

நோயினில் அம்மா நினைவு வந்ததா?
சோற்றினில் அக்கா நினைவு வந்ததா?
முதற் களத்தினில் அப்பா முகம் தெரிந்ததா?
கள விழுப்புண்ணில்
தலைவன் நெறி தெரிந்ததா?

களம் தந்த வாகை பெருமை தந்ததா?
பலம் தந்த கைகள் உறவு தந்ததா?
விரைந்திங்கு முடியும் எனவெண்ணி னீரா?
இல்லை முடிவோடு
மீழுவோம் எனவெண்ணி னீரா?

பாய்ந்தன்று தலை சாய்த்த நண்பன்
முகம் தோன்றி தூக்கம் இழந்தாயா?
தனிமையில் இரவோடு கரைந்தழுதாயா?
இல்லை வெறியோடு
மீண்டெழ உரம் கொண்டாயா?

விழி மூடும் தருணம் உங்கள்
எண்ணங்கள் தான் என்ன?
உறவுகள் இதயம் வருடிச் சென்றனரா?
இல்லை கண்களில் தாய்மண் முன்னின்றதா?
இல்லை உம்மை விதைக்கிறீர்கள்
என்பதை
எண்ணிக் கொண்டீரா?

மலர் வைத்து
உம்மை மனதேற்றும் நேரம்
மனம் கனக்க
கேட்கின்றோம்
எதை எண்ணிச் சென்றீர் எம் செல்வங்களே?
வெறுமை.......
பார்வையில்
செய்கையில்
சிந்தனையில்
நீழும் கணங்கள் ஒவ்வொன்றும்
நிசப்த வேதனை...
பேசினால் நன்றாயிருக்கும்
பேச்சு குளறலாயில்லாதவரை..
அதைவிட
மௌனம் சிறந்தது
என்னை இறுக்கிக்
கொல்லாதவரை...

வெள்ளி, 16 நவம்பர், 2012

மீழுதல்

மீழுதல் எத்துணை கடினமானது?
ஆசையிலிருந்து மீழுதல்
அன்பிலிருந்து மீழுதல்
பாசத்திலிருந்து மீழுதல்
பிடித்தாட்டும் அத்தனை
கண்காணும் கண்காணா அத்தனை
வதைகளிலு மிருந்து மீழ்வதை விட
அழுத்தி அலைக்கழிக்கும்
நினைவுச் சுமைகளிலிருந்து மீண்டெழுவது
எத்தனை கொடியது!

என்னினமே!

தேகம் பற்றி எரிகிறது
அனல் காற்று பேயாய் வந்து
சூழ்ந்து கொழுத்துகின்றது
பிணந்தின்னிகள் எழுந்து
கைநீட்டி இளிக்கின்றன

ஒ! என்னினமே!
சபிக்கப்பட்ட இனமாய்
ஈனப்பட்டு நிற்கின்றாயே!
இரக்கமில்லா அரக்கத்தனம்

எப்படி உன்னுள் புகுந்து கொண்டது?

நிம்மதி உனக்கில்லை
வாழ்வு உனக்கில்லை
விடிவு முனக்கில்லை
இரத்தவாடை முகர்ந்தபடி
காட்டுமிராண்டியாய்
இப்படியே நீ இருந்து விடு!

அறிவாளி என்று கூறாதே!
அதற்கும் உனக்கும் வெகுதூரம்
காட்டுமிராண்டித்தனம்
மிக நன்றாகப் பொருந்துகின்றது
அதையே போர்வையாக்கிக் கொள்!

ஞாயிறு, 4 நவம்பர், 2012

வேடம்

மரணத்தை நேசித்த
மண்ணை நேசித்தவர்
விட்ட குறைகள்
காலைச் சுற்ற பாம்பாய்
உயிர் மூச்சுக்காய்
ஏங்கும் நேரம்.......
மனிதமிழந்த மானிடம்
மௌனமாய் விரல்களால்
குறி வைத்து
வேடமிட்டு
சிதிலமாக்கி
வெருட்ட முனைகின்றது

உள்ளபடி வாழவிடு!

நாற்புறமும் வெந்த
பிணங்களின் வாடை
நாசிக்குள்ளின்னும் அடைத்திருக்க
நலிந்தொடிந்து நாயாய்
நடுத்ததெருவில் அலையும் நேரம்
ஆழப் புதைந்திருக்கும்
உடலங்களை தோண்டி எடுத்து
குதறாதே!
உயிரோடிருக்கும் பிணங்களை
உள்ளபடி வாழவிடு!
ஆத்மாக்கள் ஆசி கூறும்.