திங்கள், 26 அக்டோபர், 2015

ஓ! என் பிரிய சிசுவே!

பாரதியின் வரிகள் என்நாவில் புரள
அன்று ஆழுறக்கம் உன்னை 
அமைதியில் நிறைத்திருக்க
பெருமிதம் மிக்க அன்னையாயிருந்தேன்.

முறைகள் தவறிப் போயின
இடைச் செருகல்களின் நெருடல்களில்.
தூக்கமிழந்த உன் இரவுகள்
என்னையும் உன்னையும் உடைத்துப் போட்டன.

தறிக்கப்பட்ட மரங்களின் 
வேதனையை ஒத்திருந்தது 
வீழ்ந்திருந்த என் மனதும்
சோர்ந்திருந்த எனதுடலும்.

ஓ! என் பிரிய சிசுவே!

நானறிந்த விழிப்புற்ற இரவுகளும்
ஒட்டவெண்ணா மனதுமான
இப்பெருங்காலங்கள் கடந்து போகட்டும் 
எழுந்தடங்கும் புயல்போல.

நின்னைச் சரணடையும் 
பாரதியின் வரிகளோடு இன்னும் 
அருகே காத்திருக்கிறேன் 
உனது ஆழ் தூக்கத்திற்காய்.

வி. அல்விற்.

25.10.2015.
என்மேல் வந்தமரும்
நீர்த்துளிகளை சுமந்தபடி
நிறைந்திருக்கிறேன்.
யாரிடம் கேட்டிவை
எனை நனைத்தன?

இருக்கட்டுமே!

என்னுயிர்த்துளிகளே!

நானுங்களை 
உதறிவிடப் போவதில்லை
மனிதரைப்போல.

வி. அல்விற்.

24.10.2015.

தீரா வழக்குகள்.

ஆயிரம் கதைகளை 
அன்றைய மதி 
இரகசியமாகப் புன்னகைத்தபடியும்
அவள் தூங்கும் வேளை
ஆதவன் வியர்த்தபடியும்
முறைதவறாமல் கேட்டிருக்கின்றன
பின்னாட்களில் 
சாட்சியம் கூறும்படி.

ஆழிரவின் அனர்த்தங்களையும்
இருள் குடித்த விழிகளையும்
குறுக்கறுத்த பாதைகளில் 
புதையுண்ட சொற்களையும் 
சுமந்தலைகிறாள் இன்றைக்கும் 
நிம்மதியற்ற நிலாக்கன்னி.

ஒளிக்கற்றையால் மூடிக் கொண்டு
விழி சிவந்து 
இன்றைக்கும்
இறங்கிக்கொண்டேயிருக்கின்றான் பகலவன்
விஞ்சும் அதிகாரத்தோடு
வியர்வை குடித்த குருதியையும்
நிலமதிர்ந்த கொடுமைகளையும்
கூட்டி விழுங்கியபடி.

இன்னும் எத்தனை நாட்கள் 
இக்கொடு நிலத்தில் 
தீர்க்கப்படாத வழக்குகளுடன்

மௌனமாக ஊர்ந்தபடி....

வி. அல்விற்.

24.10.2015.

கனவுகளுடனான யுத்தம்.

தென்றலும் இதமும்
மலரும் அழகும் 
மழையும் சிலிர்ப்பும்
மங்கையும் மலர்வுமாக
பக்கங்களெல்லாம்

யாராலோ
நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன
இன்றைய பொழுதில்.

நான் மட்டும்....

கனவுகளுடன் 
யுத்தம் செய்து கொண்டிருக்கிறேன் நான் 
யாருமறியாத தனிமையில்.

அதுவேதான்!

தோற்கக் கூடாத யுத்தமிது

அழிச்சாட்டியம் பண்ணியபடி
உள்ளமர்ந்து எகத்தாளமிடுபவற்றை
அழித்துவிட வேண்டும் 

நானும்
எனக்குண்டானவையும்
அழியாதிருக்க.

வி. அல்விற்.
20.10.2015.


காலம் நழுவிஉள்ளது.

பெரு மரமாயிருக்கிறேன் இக்கணம் 
வேர்களைப் பற்றியிருக்கும் எனதடியில்
நிழல்தரும் குளிர்மையில்
நீ இளைப்பாறும்படி
களைப்புறும் வேளைகளில்.

உற்றுப் பார்த்துக் கொள்!

என்னில் துளிர்க்கும்
உனக்கான சிந்தனைகளையும் 
பின்னொரு பொழுதில்
பசுமையாய் அசைந்தாடும் 
உனக்கான முதிர் கனவுகளையும்.

ஓ! என் பிரிய சிசுவே!

இங்கே
எனக்கானது என்று ஏதுமில்லை
பழுப்பேறி உன் காலடியில் வீழும் 
ஒட்டுவிட்ட இலைகளாய்
ஏதுமுனக்குத் தென்படுகின்றனவா?

ஓ!

காலம் நழுவிக் கிடக்கிறது
என் நிழல் போல.

வி. அல்விற்.

15.10.2015.

வெள்ளி, 9 அக்டோபர், 2015

என் பிரிய சிசுவே!

எனது தாலாட்டில் நிரம்பியுள்ளது 
உனக்கான எனதன்பு 

பெருவிருப்புற்று நிலமேவி
நடனமிடும் மழைபோல
எல்லையற்ற மகிழ்வில் 
அது திளைத்திருக்கிறது

அதையேந்தி செழிக்கும்
பெருவெளிகளின் பெருமிதம் போல
தலைநிமிர்த்துகிறது
உனக்கான என் பேரன்பு.

ஓ! என் பிரிய சிசுவே!

இந்தக் குளிர்மை குறையாதிருக்கட்டும்
பசுமை போர்த்த காலங்கள் 
விடைபெறாதிருக்கட்டும்

சாளரத்தின் வழியே உட்புகும் மென்காற்று 
உன்காதில் காதிலூதி
மறவாதிருக்கும்படி
என் தாலாட்டை 
மீட்டுக் கொண்டிருக்கட்டும்.

வி.அல்விற்.

08.10.2015.

திங்கள், 5 அக்டோபர், 2015

என் பிரிய சிசுவே!

காற்றலைகளற்ற இரவுப் பொழுதில்  
முழுநிலவின் ஒளி தெறிக்க 
அமைதியாய் அலையும் 
ஆழியாயிருக்கிறேன்.

உன்மீதான எனது பேரன்பை 
அங்கே அரவமற்ற கற்பாறைகளுக்குள்
ஒளித்து வைத்திருக்கிறேன் 
யாரும் கண்டுகொள்ளாதபடி.

என் பிரிய சிசுவே!

இதோ! வானம் நிறம் மாறுகிறது
மானிடனின் அலைச்சல் போல
காற்றும் அசைக்கின்றது
ஒளிப்பிடத்தை உடைக்கும்படி.

காலம் முகிழ்த்துள்ளது
உன்னை நீ கண்டடையும்படி.
எனதுலகனைத்தையும் 
உன்வசமாக்கியுள்ளேன்

உன் கற்பனைக்குள் அடங்காத
எனது ஆசைகளை 
உனது கரங்களுக்குள் பொத்திக்கொள்
நீ மட்டுமே அறியும்படி.

வி. அல்விற்.

03.10.2015.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

என் பிரிய சிசுவே!

ஓ! என் பிரிய சிசுவே!

சேமித்து வைக்கப்பட்ட
நினைவுக் களஞ்சியம் 
இதோ
தன் வாயகலத்
திறந்து கொள்ளுகிறது.

கீழே குதிக்கின்றன
புயல்காற்றின்
பயங்கர ஓசையுடன்,

பாம்பாய் நெளிந்தும்
பூச்சிகளாய் ஊர்ந்தும்
பூதங்களாய் நெருங்கியும்
பாதாளக் கிணற்றுள் வீழ்த்தியும்
ஓடமுயன்ற கால்களைக் 
கட்டிப் போட்டும் 
கனவுகளாய் வந்தென்னை
ஆட்டி வைக்கின்றன.

ஓ! என் பிரிய சிசுவே!

என் கனவுகளை
உன்னால் பிரித்தறிய முடியுமா?
அல்லது மொழிபெயர்க்கத்தான்
முடியுமா?

பேய்களாய்க் காதிலிரையும்
இந்தச் சத்தங்களை
உன் அணைப்பால்
நிறுத்திவிட முடியுமா?

ஓ! என் பிரிய சிசுவே!

உனது நிமித்தம் 
எனது ஆயுளை நீட்டுவிக்க முயல்கின்றேன்.

என்னை நெருக்கியிரு!

உண்மையாகவே என்னை
ஆட்கொண்டிருக்கிறது
இந்தப் பயம் என்பதை 
எனது மௌனத்திலிருந்து
மொழிபெயர்த்துக்கொள்!

ஆனால் இவையேதும்
உன்னை அண்ட விடாமல் 
எனதுயிர் உன்னோடிருக்கும்.

வி. அல்விற்.

02.10.2015.

என் பிரிய சிசுவே!

வழிந்தோடுகிறன ஞாபகப் பிளம்புகள்
எப்போதுமே செந்நிறமாய்

பிரித்தெடுக்க முனைகிறேன்
எனக்கானவற்றைத்
தனியே அசைபோட
இயலாதெனினும்.

பெருவெள்ளத்தில்
அள்ளுண்டு போகும் 
மரத்தைப்போல
என் வேரறுத்துப் போட
நினைக்கின்றன
எழுதி வைக்கப்பட்டவை.

என் பிரிய சிசுவே!

இந்தப் பாத்திரம் 
என்னைவிட்டு அகல விரும்புகின்றேன் 
உனது நிமித்தம் 

எனது பார்வைகளை 
மொழிபெயர்த்துக் கொள்
உனக்கொருநாள்
அது உதவக்கூடும்.

எனது வார்த்தைகளைப் 
பத்திரப்படுத்திக் கொள்
அவையுனக்கு நூல்களாகக் கூடும்
என்றோ ஒருநாள்.

எனது வாழ்க்கையின் 
ஒவ்வொரு பக்கங்களும் 
உனக்கு அன்பை நிறைக்கட்டும்
என்னுடையதைப் போலன்றி.

வி. அல்விற்.

01.09.2015.

குழந்தைகளே!

நாங்கள் நினைக்கின்றோம்
உங்களது சிரிப்புக்களை
சிதறடிக்கவில்லை என்று

நாங்கள் நினைக்கிறோம் 
உங்கள் கனவுகளை
கலைக்கவில்லை என்று

நாங்கள் நினைக்கிறோம்
உங்கள் சுதந்திரத்தைப் 
பறிக்கவில்லை என்று

நாங்கள் நினைக்கிறோம்
உங்கள் சிந்தனைகளை 
மறுக்கவில்லை என்று

நாங்கள் நினைக்கிறோம்
உங்களது குரல்களை 
நசிக்கவில்லை என்று

ஆனாலும் 

தெரிந்தும் தெரியாமலுமாக
நாங்கள் இவற்றைச்
செய்ய மறப்பதில்லை

உரத்துப் பேசுங்கள் 
குழந்தைகளே!

முன்னால் பிறந்த எங்களுக்கு
உங்கள் வார்த்தைகளின் 
கனம் புரிய
காலமெடுக்கிறது.

வி. அல்விற்.

01.09.2015.

பேசட்டும்.

பேச வேண்டுமா?
பேசட்டும்!

விரல்கள் முறிக்கப்படாதவர்கள் பேசட்டும் 
கால்கள் துண்டிக்கப்படாதவர்கள் பேசட்டும் 
மூளைக் கலக்கம் ஏற்றபடாதவர்கள் பேசட்டும் 
வாய் வீச்சுள்ளவர்கள் பேசட்டும் 
முடிந்தவர்கள் பேசட்டும் 
தகைமையுடையவர்கள் பேசட்டும்

மௌனமாயிருத்தல் போதுமாயிருக்கிறது
இப்போது

பேசிய பொழுதுகளில் 
கிடைத்த பொற்காசுகளில்
இன்னும் மிச்சமாகவுள்ளவை
சிரித்துக்கொண்டே இருக்கின்றன

நகைப்புக்களுக்கிடையில் என்ன பேசுவது?
எப்படிப் பேசுவது?

கருத்தோடு பேசியவர்களைக்
காலம் கலைத்துப் போட்டுள்ளது 
கருணையின்றி.

எனக்காக மட்டுமே பேசி
வாழ்ந்துவிட்டுப் போகிறேன்

மீந்திருக்கும் பொற்காசுகள்
என் அமைதியைக் குலைப்பதில் 
வெற்றி கண்டுள்ளன

இனிப் பேசியென்ன?

வி. அல்விற்.

26.09.2015.

விருப்பு.

விரும்புகின்றேன்.

நான் சத்தமிட்டுச் சொல்ல விரும்புகிறேன் 
இந்த மழையில் ஊறி 
தன் பிடி தளர்த்தி 
காற்றிலே அலையுண்டு
நிலத்திலே வீழும் 
இந்தப் பசுமையிழந்த இலைகளுக்கு 

நான் அவற்றை விரும்புவதாக

குளிர் வந்தேறி 
கால்களுள் உறைந்து கொள்ளும் 
இப்பனிப் பிரதேசம்
இன்னும் என்னை மூடிக் கொள்ளவில்லை
என் மூச்சுக் காற்றின் வேகத்தோடு
இரைந்து சொல்லுகின்றேன் 
நான் இவ்வாழ்க்கையை 

மிகவும் விரும்புவதாக

பேச அமராத இருக்கைகள் 
ஏமாற்றத்துடன் வீற்றிருக்கின்றன
உடைபடாத வார்த்தைகள் 
கற்பனை உருக்கொண்டு நடமாடுகின்றன

இன்னும் அதிகமாக விரும்புகின்றேன் 
காற்று சுமந்து கொண்டுவந்து 
உதறிவிட்டுப் போன 
இந்த வாழ்க்கையை.

வி. அல்விற்.

23.09.2015.

கனம்.

கனம்.

நான் திடமாயிருக்கிறேன்
என்கின்ற அறிவு
எனக்கு உதவுவதாயில்லை

எனது தேடல்களும்
முடிவதாயில்லை

இரவுகள் கொன்று தின்கின்றன 
எனது தூக்கங்களை

பகல்களும் அமைதியைக் 
கிழித்துக் கொல்லுகின்றன

எனதிருப்பே என் நிழலாய்
எனக்கச்சமூட்டுகிறது

பயமொன்றை அறியாதிருந்தேன்
முன்னொரு பொழுதில் 

அதுவே எனக்குள் இப்போது 
பெரும் பூதமாய் எழுந்தாடுகின்றது

இப்போது நான் தனிமையிலில்லை

விரட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்

ஏதோவொன்றால்.

வி. அல்விற்.

19.09.2015.

செல்லமே!

செல்லமே!

அன்னையென்றெனை நினைந்து
அழுது கொண்டழைத்தாயோ
ஆராரோ பாடவோ கண்ணே
ஆவிதன்னைத் தரவோ மணியே

அள்ளியெடுக்கவோ உன்னை
அமுதமெடுத்து ஊட்டிடவோ
சிற்பமென நின்றென்னை
சிந்தை நிறைய வைத்தாயே

முத்தமிடக் குனிகையில் உன் 
மெத்துக் கன்னம் தந்தாய்
பிஞ்சுவிரலால் கால்கோர்த்து
விஞ்சுமழகு காட்டியும் நீ

பொங்கிச் சிரிக்கையில்
பூமியே நின்று போச்சு
மொத்தமாய் மறந்தேனே 
இன்னொன்றைப் பெற்றதாய்.

வி. அல்விற்.
18.09.2015.


( ஒஸ்லோவிலுள்ள Frognerparken எனப்படும் பூங்காவிலுள்ள சிற்பங்களுள் ஒன்று இது).

விட்டு விடு!

இது உனது சிம்மாசனமாகவிருப்பதில்
எனக்கேதும் இடையூறில்லை

நீ அரசனாகவே இருந்து கொள் 

உனது கண்ணசைவுக்கு
சேவகர்கள் காலடியில் இருக்கட்டும் 

உனது புன்னகைக்காக
புனையட்டும் புலவர்கள் புகழ்ப்பா

உனது பட்டாடையோடு
அணைந்து கொள்ள
தேவதைகள் தவமிருக்கட்டும்

என்னை விட்டுவிடு!

உன் தங்க மாளிகையில் 
சிறையிருக்க எனக்கிசைவில்லை

உனது அகங்கார உபசரிப்பில்
உவப்பில்லை எனக்கு

உலகம்
எனது கண்களுக்குள் நிறைய
நான் உலாவர வேண்டும் 
கட்டப்படாமல்

விட்டுவிடு என்னை! 

கண்டு கொள்ளவும் 
கற்றுக்கொள்ளவும்
இங்கே குவிந்து கிடக்கிறன
ஏராளமாய்.

வி. அல்விற்.

14.09.2015.

பேசிப் பயனென்ன?

பேச வேண்டுமா?
பேசட்டும்!

விரல்கள் முறிக்கப்படாதவர்கள் பேசட்டும் 
கால்கள் துண்டிக்கப்படாதவர்கள் பேசட்டும் 
மூளைக் கலக்கம் ஏற்றபடாதவர்கள் பேசட்டும் 
வாய் வீச்சுள்ளவர்கள் பேசட்டும் 
முடிந்தவர்கள் பேசட்டும் 
தகைமையுடையவர்கள் பேசட்டும்

மௌனமாயிருத்தல் போதுமாயிருக்கிறது
இப்போது

பேசிய பொழுதுகளில் 
கிடைத்த பொற்காசுகளில்
இன்னும் மிச்சமாகவுள்ளவை
சிரித்துக்கொண்டே இருக்கின்றன

நகைப்புக்களுக்கிடையில் என்ன பேசுவது?
எப்படிப் பேசுவது?

கருத்தோடு பேசியவர்களைக்
காலம் கலைத்துப் போட்டுள்ளது 
கருணையின்றி.

எனக்காக மட்டுமே பேசி
வாழ்ந்துவிட்டுப் போகிறேன்

மீந்திருக்கும் பொற்காசுகள்
என் அமைதியைக் குலைப்பதில் 
வெற்றி கண்டுள்ளன

இனிப் பேசியென்ன?

வி. அல்விற்.

26.09.2015.