எனது தாலாட்டில் நிரம்பியுள்ளது
உனக்கான எனதன்பு
பெருவிருப்புற்று நிலமேவி
நடனமிடும் மழைபோல
எல்லையற்ற மகிழ்வில்
அது திளைத்திருக்கிறது
அதையேந்தி செழிக்கும்
பெருவெளிகளின் பெருமிதம் போல
தலைநிமிர்த்துகிறது
உனக்கான என் பேரன்பு.
ஓ! என் பிரிய சிசுவே!
இந்தக் குளிர்மை குறையாதிருக்கட்டும்
பசுமை போர்த்த காலங்கள்
விடைபெறாதிருக்கட்டும்
சாளரத்தின் வழியே உட்புகும் மென்காற்று
உன்காதில் காதிலூதி
மறவாதிருக்கும்படி
என் தாலாட்டை
மீட்டுக் கொண்டிருக்கட்டும்.
வி.அல்விற்.
08.10.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக