வெள்ளி, 2 அக்டோபர், 2015

பேசிப் பயனென்ன?

பேச வேண்டுமா?
பேசட்டும்!

விரல்கள் முறிக்கப்படாதவர்கள் பேசட்டும் 
கால்கள் துண்டிக்கப்படாதவர்கள் பேசட்டும் 
மூளைக் கலக்கம் ஏற்றபடாதவர்கள் பேசட்டும் 
வாய் வீச்சுள்ளவர்கள் பேசட்டும் 
முடிந்தவர்கள் பேசட்டும் 
தகைமையுடையவர்கள் பேசட்டும்

மௌனமாயிருத்தல் போதுமாயிருக்கிறது
இப்போது

பேசிய பொழுதுகளில் 
கிடைத்த பொற்காசுகளில்
இன்னும் மிச்சமாகவுள்ளவை
சிரித்துக்கொண்டே இருக்கின்றன

நகைப்புக்களுக்கிடையில் என்ன பேசுவது?
எப்படிப் பேசுவது?

கருத்தோடு பேசியவர்களைக்
காலம் கலைத்துப் போட்டுள்ளது 
கருணையின்றி.

எனக்காக மட்டுமே பேசி
வாழ்ந்துவிட்டுப் போகிறேன்

மீந்திருக்கும் பொற்காசுகள்
என் அமைதியைக் குலைப்பதில் 
வெற்றி கண்டுள்ளன

இனிப் பேசியென்ன?

வி. அல்விற்.

26.09.2015.

கருத்துகள் இல்லை: