திங்கள், 27 ஆகஸ்ட், 2012

நிலவுக்கொழித்து..........

எது நடக்கக் கூடாது என்று கொஞ்ச நாளாக பாமினி நினைத்துப் பயந்து கொண்டிருந்தாளோ அது நடந்து விட்டது. இறுக்கமான சப்பாத்துக்களை அணிந்து கர்ச்சித்துக் கொண்டு அலைந்தவர்களைப் பார்த்துப் பயந்து லண்டனுக்கு வந்து சேர்ந்திருந்தாள் பாமினி. இங்கே வந்து சேர்ந்ததும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டால் போல் இருந்தது. நாட்டில் இருந்து புறப்படும்போது இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை சிறு வயதிலிருந்தே கற்றுக் கொண்டிருந்தபடியால் இங்கே வந்து வேகமாக முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இங்கே வந்து ஆங்கிலேயருடன் பேசத் தொடங்கியபோது தான் தெரிந்தது தன்னுடைய ஆங்கிலப் புலமையின் அளவீடு. எப்படியும் ஆங்கிலத்தைப் பிடிக்காமல் விடுவதில்லை என்று கங்கணங் கட்டிக் கொண்டு வயது வந்தோருக்கான பள்ளியில் (college ) சேர்ந்து கற்கத் தொடங்கினாள். அது மட்டுமல்ல ஒரு அரச உத்தியோகம் எடுத்து விடுவது என்பதுவும் ஒரு கனவு. கனவுகளைக் கலைக்க திருமணமும் இரண்டு பிள்ளைகளும் வந்து சேர்ந்தார்கள். குழந்தைகளைக் கவனிக்க வீட்டிலேயே இருக்க வேண்டியதாயிற்று. கணவன் மணிவண்ணன் விட்ட குறை தொட்ட குறையாய் சமூகப் பொறுப்புக்களிலே அக்கறை காட்டிக் கொண்டிருந்தான். கிடைக்கும் நேரம் முழுவதுமே நாடு, மக்கள், உதவி என்று போய்க் கொண்டிருந்தது. பாமினி கணவனைத் தடுக்கவில்லை; ஆனால் ஏற்படக் கூடிய விளைவுகளைச் சுட்டிக் காட்டினாள். வாழ்க்கையிலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பேராவல் இருக்கும். சிலருக்கு உணவிலே, சிலருக்குப் பொன்னிலே பணத்திலே, சிலருக்குப் புகழிலே, சிலருக்குப் பதவியிலே, சிலருக்கு அறிவியலிலே (சிலருக்கு அடுத்தவருக்குக் குழி பறிப்பதிலே கூடஒரு சிலருக்கு தன் இனம், சமூகம் சார்ந்த சிந்தனை என்று இந்தப் பட்டியல் நீண்டு போகும்இதிலே கடைசி வகைக்குள் மணிவண்ணன் அடக்கம். இந்தச் சிந்தனை அவனை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. புலம் பெயர்ந்த நாடுகளிலே "ஒழுங்கு முறையாக" (?) இருக்க வேண்டும் என்று நினைப்பவள் பாமினி. அதாவது எதிர்  விளைவுகள் எதுவும்  குடும்பத்தைப் பாதித்து விடக்கூடாது என்று எண்ணுபவள். ஆனால் அவனோ எதிர்மாறான எது நடந்தாலும் நடக்கட்டும் எனும் போர்க் குணம் கொண்டவன்.

அந்த அதிகாலைப் பொழுது உலக நாடுகள் சில ஓர் இன விடுதலைக்கெதிராய் கைகளைக் கோர்த்துக் கொண்டு திட்டமிட்டு நேருக்க ஆரம்பித்த நாட்களின் தொடக்கமாய் இருந்திருக்க வேண்டும். இளவேனிற்காலத் தொடக்க விடியல் நேரம் ஏறக்குறைய ஐந்து மணி.
வீட்டுக் கதவு பட பட வென்று தட்டப்படும் பயங்கரச் சத்தத்துடன் வீடே திடுக்கிட்டெழுந்தது. வீட்டுக் கதவு பட பட வென்று தட்டப்படும் பயங்கரச் சத்தத்துடன் வீடே திடுக்கிட்டெழுந்தது. பிள்ளைகள் அறைக்குள் இருந்து  அம்மா என்று கத்தியபடியே வெளியே ஓடி வந்தார்கள். மணிவண்ணன் நித்திரை கலைந்து முழுமையான  நிதானத்துக்கு வந்தான். என்னவென்று விளங்கியது. பிள்ளைகளைப் பார்த்து "ஒண்டுமில்லை அழாதையுங்கோ" என்றான்.மனைவி பிள்ளைகளை  ஆயத்தப் படுத்துமுன் வெளியே நின்றவர்கள் "நாங்கள் போலீஸ் கதவைத் திறவுங்கள் இல்லாவிடின் உடைப்போம்" என்று குரல் கொடுத்தபடியே கதவை பலமாக தொடர்ந்து தட்டினர். மணிவண்ணன் "நாங்கள் கதவைத் திறக்கிறோம்" என்று கூறியபடியே கதவைத் திறந்தான். அதே இறுக்கமான சப்பாத்துக்கள் ஐந்து சோடி உள்ளே வேகமாகத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைய அதிலொருவன் மணிவண்ணனைப் பிடித்துத் தள்ளி கைகள் இரண்டையும் பின்னால் சேர்த்து விலங்கை மாட்டினார். பாமினியை அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் பயந்து போய் அப்பாவையும் அப்பாவின் கைகளையும் வந்திருந்தவர்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தனர். பாமினி அவர்களை இரண்டு கைகளாலும் சேர்த்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். வந்தவர்கள் ஒரு மொழிபெயர்ப்பாளரையும் அழைத்து வந்திருந்தனர். அவனுடைய முகத்தில் காந்தி சிரித்துக் கொண்டிருப்பதாக பாமினிக்கு ஏனோ பட்டது.

வந்த குழுவுக்குத் தலைமை தாங்கியவன் பாமினியையும் பிள்ளைகளையும் அசையாமல் ஓரிடத்தில் இருக்கும்படி சொல்லி விட்டு வீட்டைக் கவிழ்த்துப் போடத்  தொடங்கினர். மூத்த மகன் கிருஷாந்தனுக்குப் பத்து வயது. அம்மாவின் வலது பக்கத்தில் இருந்து கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.சின்னவன் அனுஷனுக்கு ஆறு வயது. அம்மாவின் இடது பக்கம் அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தான்.கிருஷாந்த இப்படியான சம்பவங்களை சினிமாக்களிலே பார்த்திருக்கிறான். அவைகள் சாகசமாகத் தெரிந்திருந்தன. ஆனால் நேரிலே அவை முரண்பாடாயிருந்தன. இது அப்பாஇவர்கள் அப்பாவை ஏதோ செய்யப் போகிறார்கள் என்ற பயத்திலே அழுகை வந்தது. பயத்தில் அவனுடைய கால்கள் லேசாக நடுங்குவது தெரிய பாமினி அவனுடைய முதுகைத் தடவிக் கொடுத்து "பயப்பிடாதையுங்கோ தம்பி ஒரு பிரச்சனையுமில்லை. அப்பாவை விட்டிடுவினம்" என்றாள்.
அப்பாவுக்கு கைகளில் நோகுமே! அவனுக்கு அப்பாவிலே அதிக மரியாதையுடனான நம்பிக்கை இருக்கிறது. அப்பா எப்போதும் மனிதருக்குப் பயப்படும் ஆள் இல்லை. எதையும் அறிந்து சரியாகச் செய்ய வேண்டும் என்று விரும்பும் மனிதர். அடுத்தவரை மதிக்கத் தெரிந்தவர். அப்படிப் பட்ட அப்பாவின்  கைகளைக் கட்டி வைத்து பேச்சிழக்க வைத்திருப்பது சரியில்லை என்று சொல்ல விரும்பினான். ஆனால் அப்பாவே மௌனமாக இருக்கிறாரே. என்னுடைய அப்பா பிழையாக ஒன்றும் செய்திருக்க மாட்டார் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான். ஆனால் அம்மாவும் அப்பாவும் பேசாமல் இருக்க வந்தவர்கள் ஏதோ தேடிக் கொண்டிருந்தனர். மூலை முடுக்கெல்லாம் தேடித் தேடி ஒவ்வொன்றாக பிரித்துப் போட்டுக் கொண்டிருக்க கிருஷாந்தன் பாடசாலைக்குப் போக வேண்டிய நேரம் நெருங்கியது. அவன் குளியலறையிலிருந்து உடுப்புப் போடும் வரை ஒருவன் பக்கத்திலேயே இருந்தான். (அந்த இடை வெளிக்குள் பாமினியும் பிள்ளைகளும் ஏதாவது செய்து விடுவார்களாம்). அவளுக்கு எரிச்சலாக இருந்தது.
காலை ஏழு மணியளவில் எதுவுமே கிடைக்காமல் ( சமூகப் பணி செய்பவர்களிடமிருந்து வேறு என்ன கிடைக்கும்?) களைத்துப் போய் மணிவண்ணனை தங்களுடைய வாகனத்தில் ஏற்றினார்கள். பாமினி நப்பாசையுடன் "இவரை எப்ப விடுவீங்கள்"? என்று கேட்க நக்கலான சிரிப்புடன்,  "நாட்கள் எடுக்கும் இப்ப வருவார் என்று எதிர் பார்க்க வேண்டாம்" என்று சொல்லி தங்களுக்குள் சிரித்துக் கொண்டே ஏறினார்கள். இவங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் இவங்களின்ர குணங்கள் ஒண்டுதான் என்று மனதுக்குள் எரிச்சலடைந்தாள்.

மணிவண்ணன் போயிட்டு வாறன் என்றான் அவள் தலையாட்டினாள். கிருஷாந்தனுக்குக் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. சின்னாவன் இப்போதுதான் ஏதோ விளங்கின மாதிரி அப்பா என்று கத்தத் தொடங்கினான். பாமினி அக்கம் பக்கம் பார்த்தாள் யாராவது பார்க்கிறார்களா என்று. நல்ல வேலை யாரும் இருக்கவில்லை. அவர்கள் அங்கிருந்து விரைவில் போனால் நல்லது என்றிருந்தது விடுப்புப் பார்க்கும் கூட்டம் சேரும் முன்.

பிள்ளைகள் இருவரையும் இறுகப் பிடித்து வாகனம் போவதைப் பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கே அழுகை வருமாப்போல் இருந்தது. அவனை நினைத்து அல்ல: பிள்ளைகளையும் வரப் போகும் நாட்களையும் நினைத்து.


மணிவண்ணன் கண்ணாடி வழியாகத் திரும்பி பிள்ளைகளைப் பார்த்தான். கிருஷாந்தனிடமிருந்து விம்மல் வெடித்துக் கிளம்பியது. தாயின் கைகளை விடுவித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடிப் போய் தன்னுடைய தோள் பையை எடுத்துக் கொண்டு மீண்டும் தெருவுக்கு வந்து பேருந்து நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். பாமினி சின்னவனைக் கையில் பிடித்து இழுத்துக் கொண்டு அவனுக்குப் பின்னால் ஓடினாள். "தம்பி நான் பள்ளிக் கூடத்துக்கு கொண்டு போய் விடுகிறேன் வாங்கோ, அழுது கொண்டு போகாதயுங்கோஇல்லாவிட்டால் இண்டைக்கு வீட்டை நிண்டு விட்டு நாளைக்குப் போகலாம்" என்றாள். அவனோ "இல்லை நான் தனிய பஸ்சில  போறன்" என்று சொல்லிக் கொண்டு கண்களை இரண்டு கைகளாலும் அழுத்தித் துடைத்தான். அவனுடைய முகத்தில் கோபம், ஏக்கம், ஏமாற்றம், கவலை ஒருங்கிணைந்திருந்தன. பாமினி மகனை நெஞ்சோடு சேர்த்துக் கட்டிக் கொண்டாள். "அப்பா குற்றம் செய்து போகவில்லை, நாட்டுக்காக அவர் செய்த சேவைக்காகப் போயிருக்கிறார்; கெதியிலை வந்திடுவார். நீங்கள் கவலையாக இருப்பது அப்பாவுக்குப் பிடிக்காது எண்டு உங்களுக்குத் தெரியும், அழாமல் நல்லாகப் படிக்கிறதை மட்டும் நினையுங்க".....கதைத்தபடி அவனைத் திருப்பி வீட்டுக்குக் கூட்டி வந்து காரிலே கொண்டு போய் பாடசாலைக்கு விட்டு விட்டு வந்தாள். மகன் உள்ளே போய் சேருமட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எவ்வளவோ சொல்லியும் அவனுடைய முகத்தில் கலவரம் அப்பி இறுகிக் கிடந்தது. அந்தச் சிறுவனால் அப்பாவைப் பார்த்த கோலமும் அவர்கள் நடந்து கொண்ட விதமும் ஏற்றுக் கொள்ள முடியாத தன்மையை உண்டாக்கியிருந்ததை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவனுடைய நாள் மிக நீண்டதாயிருக்கும்; எதிலேயுமே கவனம் செல்லாது; தனியே யோசித்துக் கொண்டிருப்பான்; அழுது காட்டிக் கொடுத்து விடுவானோ என்றெல்லாம் எண்ணிக் குழம்பியே அவளுடைய நாள் யுகமாகியிருந்ததுவீட்டிலே வைத்திருந்திருக்கலாம்; ஆனால் எத்தனை நாட்களுக்குஅனுப்பாமலும் விட்டால் காரணம் சொல்ல வேண்டும். அதை விட அங்கே பிள்ளைகளோடு சேர்ந்து இருந்தாலாவது கொஞ்சம் சிந்தனை மாறுபடும் என்று பாமினி நினைத்தாள். வீட்டில் இருக்க முடியாமல் பாடசாலை முடிவடைவதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னரே வாசலில் போய் நின்று கொண்டாள். பாடசாலை முடிந்து எல்லாப் பிள்ளைகளும் வந்து கொண்டிருக்க கடைசியாக தனியே தலையைக் குனிந்து கொண்டு வந்தான். அவனைப் பார்க்கப் பயமாக இருந்தது. பேசாமல் வந்து காருக்குள் ஏறிக் கொண்டான். வீட்டுக்கு வந்து பேச்சுக் கொடுத்தாள். ஆனால் அவனோ பேச விருப்பமின்றி தன்னுடைய அறைக்குள் போய் இருந்து கொண்டான். அவளுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. யோசித்துக் கொண்டிருந்தவளுக்குத் திடீரென்று தன்னுடைய மருத்துவரின் ஞாபகம் வந்தது. மிக நீண்ட காலத் தொடர்புடையவர்; நம்பிக்கைக்குரியவர்; அன்பாகப் பேசக் கூடியவர். அவரிடம் போய் வந்தால் மகனுக்கு நன்மை ஏற்படும் என்று எண்ணினாள். உடனேயே தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசரம் என்று சொல்லி அடுத்த நாளுக்கே பதிவு செய்து கொண்டு விட்டு மகனைக் கூப்பிட்டாள். அவனைத் தனிமையில் விடவும் பயமாக இருந்தது.
இந்த நிலையில் சின்னவனைப் பாடசாலைக்கு கொஞ்ச நாளைக்கு அனுப்புவதில்லை என்று முடிவெடுத்தாள். கிருஷாந்தையும் அப்பா எப்ப வருவார் என்று ஒரு பதினைந்து தடவையாவது இதுவரை கேட்டு விட்ட சின்னவனையும் தனியே சமாளிக்கும் நிலைக்குத் தன்னை ஆயத்தப் படுத்தத் தொடங்கினாள். அவளையறியாமலே அவளுடைய அம்மாவை அடிக்கடி நீங்கள் இங்கே வாங்கோ அம்மா என்று கூப்பிடும் போதெல்லாம் "நிலவுக்கொழித்துப் பரதேசம் போறதோ" என்று பதில் சொல்லும் அம்மாவின் ஞாபகம் வந்தது.
















திங்கள், 20 ஆகஸ்ட், 2012

கேட்பதும் கொடுப்பதும்
எதிர்பார்ப்பதும் பெறுதலும்
வாழ்வதும் தொடர்வதும்
அன்பின் பிணைப்பில்
தளம்பும் அடிப்படை
சிதறல்கள்
மெதுவாக வெளியேறும்
நம்பிக்கை
உதறல்களில் வார்த்தைகள்
வான வேடிக்கையாய்

மேலேறிக் கிளம்ப
உறவுகள் வெடித்துச் சிதறுகின்றன
அழகிழந்து அசிங்கமாய்
அன்பு கொளுக்கியாய்
மட்டுமே தெரிகிறது
வாழ்வு தாமரையிலையாய்
தேடி மிதக்கிறது
பிடிமானத்தை
தேடி அலைகிறது
மனம் பூமியில்
இருக்கும் ஒரு வாழ்வில்
உண்மை தேடி
நீண்டு திரிந்தும்
ஏமாற்றமெனும் மிச்சத்தை
முண்டி விழுங்கி
மீண்டும் மீண்டும்
தொடங்கும்
ஓர் நம்பிக்கை நாடி
விழுந்து எழுந்தும்
ஓர் நப்பாசையுடன்....

புதன், 15 ஆகஸ்ட், 2012

wales இல் இந்துக் கோவில்.


ஊட்டி மலைப் பாதையினை ஞாபகமூட்டும் இங்கிலாந்திலுள்ள wales மலைப் பகுதியினை அடைந்த போது அதிகாலை நான்கு நாற்பத்தைந்து ஆகியிருந்தது. அடர்ந்த மரங்கள் சூழ்ந்திருக்கும் மிக அமைதியான பிரதேசம்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தைந்திலே இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணியம் என்பவரால் இங்குள்ள கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக அமைந்தது முருகன் கோவில். உள்ளேயும் வெளியேயும் வண்ணப் புடவைகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக ஆனால் ஆடம்பரமின்றிக் கோவில் காணப்படுகின்றது. உட்பகுதியில் திருமுருகனின் உருவச் சிலை நாகபடத்தின் பின்னால் வித்தியாசமான கட்டுமான கர்ப்பக்கிரகத்தில் உள்ளது. கோவிலின் உட்புறச் சுவர்களில் இந்து சமயக் கடவுள்களின் உருவங்களைத் தவிர தேவ மாதா, புனித அந்தோனியார், சாய்பாபா போன்ற பல்வேறு கடவுள்களின் உருவச் சிலைகளும் படங்களும் காணப் படுகின்றன.
முதலாவது பூசை காலை ஆறு மணியளவில் தொடங்குகிறது. மக்கள் நிலத்தில் அமர்ந்து பங்குபற்றும் விதத்தில் சில ஆசனங்களும் நிறைய சிறு அணைகளும் (cousins ) கோவிலின் ஒரு பகுதியில் குவிக்கப்பட்டிருக்கின்றன. நீண்ட மண்ணிற அங்கி அணிந்த பெரும்பன்மையினத்தவரான வெள்ளையர்களே பூசை செய்கிறார்கள். ஆண்களும் பெண்களும் இளையோரும் முதியோருமாய் அனைவரும் அத் தொண்டருள் அடக்கம்.  திருமுருகனை நோக்கி "ஓம் ஷண்முகாய  நமக "வில் தொடக்கி புத்த மதத்தினருக்கு "புத்தம் சரணம் கச்சாமி" என்றும், கிறிஸ்தவ மதத்தினருக்கு "our father in heaven " என்றும் மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட கடவுள்களுக்கு அவரவர் வழியில் பிரார்த்தனைகளச்  செய்து முடிக்கிறார்கள். மதங்களை ஒருங்கிணைத்து சேருமிடத்தை நோக்க வைக்கும் வழிபாடாகப் பட்டது இது. இசைக் கருவிகளுடன் கூடிய பஜனைகள் நெகிழ வைக்கின்றன.
முதலாவது பூசை முடிய அங்கிருந்து ஒற்றையடிப் பாதையால் இன்னும் கொஞ்சம் மேலேறிப் போக அங்கே அமைந்துள்ள காளி கோவிலில் அடுத்த பூசை ஆரம்பமாகிறது.
பெரிய காளி சிலையுடன் கூடிய சிறிய கோவில் இரண்டாவதாகக் கட்டப்பட்டிருக்கிறது. பின்னர் இடப் பற்றாக்குறையால் இரண்டாவது பகுதி ஒன்று அதனுடன் இணைத்துக் கட்டப்பட்டு காளியை மக்கள் தரிசிக்கும் விதமாக ஒரு காட்சிப் பெட்டி வைக்கப் பட்டு பூசை ஒளி பரப்பப்படுகிறது. கோவிலை விட்டு வெளியேறி நீண்ட நேரத்தின் பின்னும் "ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம் " என்ற இசைக் கருவிகளுடன் கூடிய பஜனை தாளம் போட வைக்கின்றன.
அந்தப் பூசை முடிந்ததும் மீண்டும் கீழிறங்க, வந்திருப்பவர்களுக்கு உணவு பரிமாறப் படுகின்றது.பின்னர் மூன்றாவது பூசை ஸ்ரீ ரங்கநாதருக்கு தொடங்குகின்றது. இது 1996 இல் அமைக்கப்பட்டுள்ளது. குளத்தின் நடுவிலே கிருஷ்ண பகவான் மிக அழகாக வீற்றிருக்கின்றார். கோவில் என்று சொல்ல முடியாமல் திறந்த வெளியிலே அமைக்கப்பட்டுள்ளது இதன் விசேடமாகின்றது. கண்ணாடிக் கதவுகளால் சுற்றி வர அடைக்கப்பட்டுள்ளது. பூசை செய்பவர் முழங்கால் அளவு காலணியுடன் குளத்தினுள் இறங்கிச் சென்று கிருஷ்ணனுக்குப் பூசை செய்கின்றார். அதன் அருகில் ஒரு சிறு காளி சிலையும் பக்கத்திலேயே மீன்கள் நிறைந்த குளமும் அழகூட்டுகின்றன.
இயற்கையையும் அமைதியையும் மிக விரும்பும் ஒருவராலேயே இப்படியான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்க முடியும். மலைப் பிரதேசம்; செடிகளும், கொடிகளும், பூக்களும், குளமும் அதைச் சுற்றி  சிறிய அளவிலான வெவ்வேறு மூன்று  கோவில்கள் என்று மிக அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஆரம்பத்திலே வெறும் வயல் நிலங்களாயிருந்த இடத்திலே ஆன்மீகத் தேடல் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியம் என்பவரால் 1975 இல் உருவாக்கப் பட்டு பின்னர் மெதுவாக மாற்றமடைந்துள்ளது. அங்குள்ள தொண்டர்கள் சிறு பயிர் வகைகளைச் செய்கிறார்கள். எமது கற்பனைகளுக்குட்படும் தியானசாலை அல்லது ஞானிகள்  வாழும் இடம் எப்படியோ அப்படி அமைந்துள்ளது அவ்விடம். கோவிலுக்குப்  போக விரும்புபவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னே மாமிசம் தவிர்க்கக்  கேட்டுக் கொள்ளப் படுகின்றது. வேறு கட்டணங்கள் ஏதும் இல்லை. தூர இருந்து செல்பவர்கள் முன்பதிவு செய்தால் அதற்கேற்ப வசதி செய்து கொடுக்கப் படுகின்றது.

இயற்கை, தனிமை,தியானம், அமைதி விரும்புபவர்கள் போய் அனுபவித்து வரக் கூடிய இடம் இது!