ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

சிதைவுகள்.

அண்மைக் காலமாக புலிகளை வன்மையாகவும் மென்மையாகவும் விமரிசிப்பவர்கள் பெருகி வருகிறார்கள். சொல்கைம்மிலிருந்து இவர்கள்வரை யார் எப்படி  விமர்சனம் செய்தாலும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஓடியகுதிரைகளில் புலிகள்தான் முதலாவது என்பது உலகறிந்த உண்மை. மற்றப்  போராட்டக் குழுக்களை வடகரும், ஏனைய பலநாடுகளும் கரைத்தார்கள்; புலிகளை அழித்தார்கள். பின்னர் பல இலக்கியவாதிகள் புலிகளை இழிவுபடுத்துவதே இலக்கியம்போல் புலி எதிர்ப்பு இலக்கியம்  எழுதுகிறார்கள்.
இவர்கள் யார்? இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள் என்பதை, ஓர் வரலாற்றை விளக்கி இவர்கள் பின்னால் மறைந்து இருப்பவர்களை வெளிக்கொண்டு வருவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம்.
கொஞ்சநாட்களுக்கு முன்பு என் நண்பரின் சகோதரர் மறைந்து போனது அறிந்து, துக்கம் விசாரிக்கச் சென்றிருந்தேன். அங்கு இன்னொரு பெண்மணியும் வந்திருந்தாள். அவளுடன் உரையாடும்போது ஓர் விடயத்தை விளங்கப்படுத்தினாள். தங்கள் ஊரில் சுமங்கலிப்பெண்களைச் சுடுகாட்டிற்குக் கொண்டு செல்லும்போது கூறைப்புடவை உடுத்தித்தான் கொண்டு செல்வார்கள் என்றும் அவ்வுடலை எரிப்பதற்கு
முன்னர் புடவையை எடுத்து  கட்டாடியாருக்கு கொடுப்பது வழக்கு என்றார். இவ்விடையம் என் சிந்தனையை தூண்டிவிட்டது.
நாவிதர், கட்டாடியார், பறையர் என்று பகுக்கப்பட்டிருக்கும் சாதியம் நீண்டு செல்லும் இவர்கள் யார்?
இவர்களைப் பற்றி ஆராய முற்படுகையில், சொல்லடை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.
“பார்ப்பனர் குலத்திலும் பறைக்குலம் மேற்குலம்
கேட்போர் இல்லாமல் கீழ்குலமானது”
இச்சொல்லடைக்கும் அவர்கள் வாழ்வியலுக்கும் தொடர்பு இல்லையே!
பறையர் என்றால், பறைபவர்கள், பேசுபவர்கள் என்றுதானே பொருள்படும்! ஆனால் சமூகம் அவர்களுக்குக்  கொடுக்கும் பெயர் துப்பரவுத்தொழிலார்கள்! எங்கோ இடிக்கிறது.
மேற்சொன்ன கோணத்தில் பார்த்தால் பாரிசிலுள்ள அத்தனை பேரும் பறையராகத்தான் இருக்க வேண்டும்.
திருவள்ளுவர் எழுதிய  திருக்குறளைப் படித்துப் பார்த்தால் இதைத் தனியொருவரால் எழுதியிருக்க முடியுமா என்ற கேள்வி எழும். இதை எழுதிய வள்ளுவரும்  ஓர் பறையர் குலத்தைச் சேர்ந்தவர் என்று கூறுபவர்களுமுண்டு. யார் இந்த  வள்ளுவர் என்று கேள்வி கேட்டால் இவர் ஒரு கணியர் என்றுதான் பதில் கூறலாம். அதாவது வள்ளுவக்கணியர் எனப்பட்டவரே இவர்.
வள்ளுவக்கணியர்கள் என்போர்,வேளான் தொழிலைச் சார்ந்த மருதவாழ்க்கைக்கு வேண்டிய பருவங்களின் வருகையை நாள், கோள்  பார்த்துச் சொன்னவர்கள். கடல்வணிகம் பெருகவும், நிலைபெறவும், நல்வழி பெறவும், நல்வழிகாட்டிகளாகவும் இருந்தனர். வானியலை கணிப்பவர்கள்
இவர்கள். இயற்கையை நம்புவதால் பிற்காலத்தில் வந்த பார்ப்பனியர் இவர்களை ‘ஆசிவகர்’ என்று அழைத்தனர். இவர்கள் காலத்தில் இவர்கள் இயற்றித்தந்தவை ஏராளம் எனலாம். இவர்கள் வாழ்ந்த
காலம் தொல்காப்பியத்திற்கு முற்பட்டது. பக்குடுக்கை கணியர், மார்க்கலி, பூரணர் போன்றோர்
அணுக்கொள்கையையும், மருத்துவ அறிவின் அடிப்படையையும், பொருண்மியத்தையும், மெய்யியலையும், இயங்கியலையும் ஆக்கித்தந்த பெருமைகளுக்குரியவர்கள்.
‘வள்’ என்ற வேர்ச்சொல்லுக்கு கூர்மை, பெருமை, வலிமை, வன்மை என்றெல்லாம் பொருளுண்டு.
கூர்மதியன், அமைச்சன், உள்படுகருமத்தலைவன், வள்ளியோன் என்றெல்லாம் ‘வள்ளுவன்’ என்னும்
பெயர்ச்சொல்லுக்குப் பொருள்படும். வள்ளுவன் அறிவன் என்பதையே அவை யாவும் காட்டுகின்றன.
இப்படியான அறிவுநிலையில் இருந்தவர்கள் கீழ்நிலைக்கு வரக்காரணமானவர்கள் பார்ப்பனர்கள் என்று அழைக்கப்படும் ஆரியரே.
வள்ளுவம் எப்படி வீழ்த்தப்பட்டது என்றால் பக்திக்கோள்பாடுகளில் ஏற்பட்ட முரண்பாடுதான் காரணம் எனலாம்.
உதாரணமாக பார்ப்பனர்கள், ஆசிவகரையும் சைனரையும் பாகண்டர் என்றோ, பாசாண்டர் என்றோ தூற்றி வந்தனர். இதற்குக் காரணம் பார்ப்பனியத்தையும் வர்ணமுறையையும் அவர்கள் எதிர்த்து வந்தமையே.  வாயுபுராணம் என்னும் நூல் ஆசிவகர் எல்லாம் உழைப்பவர்களாகவும், கைவினைஞர்களாகவும் இருந்து வந்திருக்கின்றனர் எனக்கூறியுள்ளது.
அடுத்து வர்ணமுறையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்ப்போமானால், தொல்காப்பியத்தின் வழியாக தமிழ் பார்ப்பனர்  முன்மொழிந்த வர்ண மாதிரியானது பார்ப்பார்,(கணிப்பவர்கள்) அரசர், வணிகர், வேளாளர் என்று வரும். அம்மாதிரியில் வேளாளன் சூத்திரனாக பரத்தையின் மகனாக இழிவுபடுத்தப்படவில்லை. இவ்வேளாளன் வருணத்தார்க்குப் படையும், கண்ணியும் கூட உரிமைகளாகவும் தேரும் மாவும் கூட அவர்கள் பெறத்தக்கனவாகவும் வழிசமைத்தான் என தொல்காப்பியம் கூறுகிறது . ஆனால்
ஆரியப்பார்பனியம் வகுத்த வரணமுறையானது பார்ப்பனர், அரசன், வைசியர், சூத்திரர் என்று வரும். இங்கு வேளாளர்களை சூத்திரர்களாக்கி வேளான் தொழிலை இகழ்ந்துரைக்கிறது.
பார்ப்பனராட்சிக்கு முதலடிமைப்பட்டது சேரநாடுதான். அறுபத்தி நான்கு ஊர்களை வைத்துப் பரசுராமன்
சேரநாட்டிலமைத்த பார்ப்பனராட்சியில் கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் பன்னிரண்டு  ஆண்டுகளுக்கு  ஒருமுறை நம்பூதிரி பார்ப்பனர்கள் எல்லோரும் கூடிசேரமான் பெருமானைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அந்தப் பார்ப்பனர் மகாநாடுகளுக்கு, ‘வள்ளுவக்கோன்’ என்னும் வள்ளுவரே தலமைதாங்குவது மரபாம். ஐம்பேராயம் என்னும் குழுவிலிருந்து அதில் அரசனுக்கு மிகவும் நெருக்கமான முதலிடத்தைப் பெற்றிருந்த ஆசான் பெரும்கணி எனும் பட்டத்திற்குரியவனாகவிருந்த வள்ளுவனையே ‘வள்ளுவக்கோன்’ என்றனர்.
அரசர்க்குக் கருமத்தலைவராய் உயர்பதவி வகித்தவர்க்கு வள்ளுவன், சாக்கை என்னும் சிறப்பு பெயர்கள்
இருந்தனவென்பது,

“வள்ளுவன் சாக்கையெனும் பெயர் மன்னர்க்கு
உள்படுகருமத்தலைவர்க்கொன்றும்”

என திவாகர  நூற்பாவால் அறியப்படும்.
அரசர்க்கு கீழ் செயல் தலைமை வகிக்கும் அதிகாரிகளாகவும் , அரசர்களாகவும், படைத்தலைவர்களாகவும் (புறநானூற்றில் வரும் நாஞ்சில்வள்ளுவன் சேரனின் படைத்தலைவன்) சேரநாட்டின் சில சிற்றரசுகளிலும் ஆசான் பெருங்கணிகளாகவும் இருந்தனர். இப்படியாக அரசனுக்கு அடுத்தநிலையை வகித்துவந்த ‘வள்ளுவக்கணியர்’ அந்தநிலையை பார்ப்பனப் பூசாரிகளிடம் இழந்து போயினர்.
பாவலரேறு பெரும்சித்திரனார் விளம்புவார்; பண்டய தமிழ் இலக்கியத்தில் எங்குமில்லாத”சிற்றினம் சேராமை” என்னும் கருத்தும் அதிகாரமும் திருக்குறளில் மட்டும் வருவதை அவர் கோடிட்டு காட்டுவார். தமிழ்மக்கள் தொகையில் அன்று மிகச்சிறுபான்மையினராக இருந்துவரும் ஆரியப்பார்ப்பனராகிய சிற்றினத்தாரிடம் இணங்கியும் அடங்கியும் போகும்போக்கு தமிழினத்திற்கு கேடுபயக்கக்கூடியது என்னும் எச்சரிக்கையே “சிற்றினம் சேராமை” என்னும் திருக்குறள்  அதிகாரமாக இலங்குவதை அவர் சுட்டிக்காட்டுவார்.(இன்றைய அரசியல் நிலையும்இப்படிதான்)

வள்ளுவர்கள் பழந்தமிழில் ஒரு பிரிவினர் தொல்காப்பியத்தின் காலத்தில்  நிகழ்ந்தகாலத்தின் மாற்றம்                                                                      தான் வள்ளுவத்தின் வீழ்ச்சியும், பார்ப்பனர் வளர்ச்சியும் ஆகும்.  ஆசான் பெருங்கணிப் பதவியை
பறித்த பார்ப்பனர், வள்ளுவர்களை அரசகட்டளையை அறிவிப்பவர்களாக ஆக்குகின்றனர். இதன்
பின்னர் தமிழகத்தை பிடித்தாண்ட கன்னடத் தெலுங்கு அரசுக்களோடு சேர்ந்துகொண்ட பார்ப்பனர்கள்,
வள்ளுவர்களை தீண்டப்படாத சாதியினராக்கினர். (இத்தனை காலமும் அரண்மனைக்குள்ளேயே, அரசு செலவிலேயே வாழப்பழகியவருக்கு நிலமும் இல்லை, உழுதுண்ணவும் தெரியாது.   உடையவன்தான் உடையார்; உடமையில்லாதவனை யாரும் மதிப்பதுமில்லை. சமூகம் திரும்பிப்
பார்ப்பதுமில்லை.  இதனால் தீண்டத்தகாதவர்களாகினர்).  தொன்றுதொட்டு வந்த வள்ளுவம் ஆக்கித்தந்த வாழ்வியல் நெறிமுறைகளை மட்டும் ஒழித்துக்கட்டிவிட்டு அவ்வள்ளுவர்களின் கணிய,
கணக்கியல், அறிவியல் புலமையை மட்டும் மெல்லத் தம்மயமாக்கிக்கொண்ட பார்ப்பனியம் வள்ளுவ அறிவுமரபை இருந்த இடம் தெரியாமல் இருட்டடிப்புச் செய்துவிட்டது.

பார்ப்பனர்  (ஆரியர்) என்ற சொல் வடஇந்தியரைக் குறிக்கிறது.
ஆர்+இயர்= ஆரியர்.
‘ஆர்’ என்றால் நிறைந்த என்ற பொருள்படும். இயர் என்றால் இயல்புடையவர்கள் எனப்பொருள்படும்.
எல்லாச் சிறப்பியல்புகளும் நிறைந்தவர்கள். இவர்கள் இரசியாவின் வடபகுதியிலிருந்து கி.மு
மூவாயிரம் ஆண்டளவில் புறப்பட்டு கி.மு. ஆயிரத்து ஐந்நூறளவில் ஆப்கானிஸ்தானின் கைபர் கணவாய்
ஊடாக இந்தியாவினுள் நுழைந்தார்கள். மந்தைகளை மேய்ப்பதற்கான மேச்சல் நிலங்களைத்தேடி நாடோடிகளாகத் திரிந்தவர்கள். எழுத்துமொழி அற்றவர்கள். வடதிராவிடமொழியுடன் தமது பேச்சுவழக்கையும் கலந்து ,பிராகிருதத்தை உருவாக்கினர். காலம் செல்லச்செல்ல சமஸ்கிருதமொழியை உருவாக்கினர். வியாபாரிகளாக, பணம் பட்டுவாடா செய்பவர்களாக தமிழர் இடங்களுக்கு வந்து, அரசிற்கு நெருக்கமாகி சமயத்தைக் கொண்டு அரசர்களின் மனங்களை மாற்றிப், பூசாரிகளாகி அரசிற்கும் மக்களிற்கும் இடையில் நின்று கொண்டு, முன்னர் வள்ளுவர் வகித்த பதவிகளையெல்லாம் பறித்ததுமல்லாமல், அப்பதவிகளில் தாங்களே அமர்ந்துகொண்டு அழகு பார்த்தார்கள். வள்ளுவக்கணியரை முரசறையும் நிலைக்கும், சாதியின்கடைநிலைக்கும் தள்ளி
விட்டனர். காலம் செல்லச்செல்ல சமயத்தை வளர்ப்பதாக அரசிற்கு பூஞ்சாண்டி காட்டிப் பெரிய நிலப்பரப்புகளைக் கையகப்படுத்தி கோயில்களைகட்டி, கோயில் நிர்வாகங்களையும் அதிகாரங்களையும், வருமானங்களையும்  கையில் எடுத்ததுமல்லாமல், கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் புகுந்து புரோக்கர் தொழில் செய்யத்தொடங்கினர். வருணமுறையில் தமிழர்களை சூத்திரர்களாக்கி அடிமைகள்போல் ஆளவும் வழி சமைத்துக்கொண்டார்கள். இதை ஏற்றுக்கொள்ளாத வேளாளர் சமூகத்தாரிடம் சமரசம்பேசி ‘தற்சூத்திரர்’ என்னும் வருணத்தைக் கொடுத்துச் சிக்கலை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்.( ‘தற்சூத்திரர்’ என்பது சூத்திரரில் பெரியவர் என சொல்லப்பட்டனர்).
தற்சூத்திரரில் ஓர் பெரியதலை எப்படி பார்ப்பனர் வசப்பட்டது என்று இங்கே உதாரணத்துக்கு எடுத்துச் சொல்லலாம். இவரதுசாதனைகள் பற்றி நிறையச் சொல்லலாம். இவர் தமிழுக்கும், சைவத்திற்கும் நிறையத் தொண்டாற்றினார். சைவசமயப் பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்தவர். பன்னிரண்டாவது   வயதில் தமிழ், சமஸ்கிரதம் ஆகியமொழிகளில் புலமை பெற்றார். மெதடிஸ் ஆங்கிலபாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார் . நிறைய நூல்களை எழுதினார், சிலவற்றுக்கு உரைநடை எழுதினார்.
இவைகளுக்காக அடிக்கடி மொட்டையும், பட்டையும், மாலையுமாக இந்தியா போய்வந்தார். பின்னர் இந்துவாக மாறிவிட்டார். அவர் வேறுயாருமல்ல,  நமது ஆறுமுக நாவலர்தான். சாதிப்பிரச்சாரங்களையும், வர்ணச்சிரமத்தையும் வலியுறுத்தினார். தாழ்ந்த சாதியரிடம், போசனம் பண்ணலாகாது என்ற தீண்டாமைக் கருத்துக்களை தனது முதலாம்  சைவ்வினா விடை என்னும் நூலில் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பிலிருந்து, புத்தளம்வரையுள்ள கண்ணகி கோயில்களை இடிப்பித்து, அக்கோயில்கள் இருந்த இடத்தில் இந்துக்கோயில்களை கட்டுவித்தார். இந்துக்களின் தெய்வவழிபாடுகளை ஊக்குவித்தார். இப்படியாக இவரின் வரலாறு நீண்டுசெல்கின்றது. சைவசமயத்திலுள்ள எல்லா உயிர்களையும் நேசி என்பதிற்குப் பதிலாக, எதிர்மறையாக இந்துக்கோட்பாட்டிலுள்ள, வரணச்சிரமத்தை வலியுறுத்தியதால் சைவம் என்ற மதக்கோட்பாட்டிலிருந்து சறுக்கினார். தன்சாதிசனத்திற்கும் துரோகமிழைத்தார். பார்ப்பனர் தெய்வங்களைவணங்கி, கொள்கைகளைக் கடைப்பிடித்தமையால் தன்னை ஓர் தமிழர் என்று காட்டுவதைவிட இந்துவாகக்காட்டி இவ்வுலகை விட்டுப்பிரிந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த மெத்தப்படித்த விவேகமுள்ள  இக்கல்விமான் எப்படிப் பார்ப்பனியரிடம் வீழ்ந்தாரோ, அதேபோலத்தான் தற்கால இலக்க்கியவாதிகள், நவகாலணித்துவப் பார்ப்பனிய அரசிடம் பண
கயிற்றால் கட்டுண்டு போயுள்ளார்கள். இவ்விலக்கியவாதிகளில், சிலர் முன்னாள் போராளிகள். இவர்களுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தனிப்பட்ட முரண்பாடுகளுள்ளன. இவர்களை
பார்ப்பனியம் தன்வசப்படுத்தி இவர்களின் ஆக்கங்களான கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றை ஊக்கப்படுத்தி (இவர்கள் எழுதுவதெல்லாம் புலிகளை காட்டுமிராண்டிகள் போல்தான் எழுதுவார்கள்) எழுதுவித்து அச்சேற்றுவதுமல்லாமல், விற்பனைவரையான சரீர,பொருள் உதவிகளை எல்லாம் செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறது.  வன்னியிலிருந்து சிலர் மாதம் ஒரு புத்தம் என்று வெளியிடுகின்றார்கள். இதன் நோக்கம் வருங்கால தமிழ்சந்ததியினரின் மனங்களில் புலிகளைப் பற்றிய நஞ்சுவிதையை விதைத்தல். இன்னொரு பக்கம் புனர்வாழ்வு பெற்று வீடுதிரும்பிய முன்னாள் புலிகளில் வசதிவாய்ப்புகளுள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு வந்துசேந்துள்ளார்கள். வெளிநாட்டு தொடர்புகள் இல்லாத ஒருபகுதியினர் இலங்கைப் புலனாய்வுத் துறையினரோடு சேர்ந்து, கைக்கூலிகளாகி, தமிழ்தேசியத்தைச் சிதைக்கிறார்கள். தமிழ் ஈழத்திற்காக போராடியவர்களே, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், தமிழர்களை அழிப்பவர்களாக மாறியுள்ளார்கள். இன்னொருசாரார் உள்நாட்டிலேயே தொழில்வாய்ப்பின்மை, குடும்பச்சுமை, மனவழுத்தம் எல்லாம் சேர்ந்து வறுமையின் கீழ்நிலைக்கு வந்திருக்கின்றனர். இத்தோடு யாழ்பாணச்சமூகத்தின் சாதிய, சமய, பெண் அடிமைத்தனமும் சேர்ந்து வாழ்வற்றவராக்கி அவர்கள் தற்கொலை செய்யுமளவுக்குக் கொண்டுபோய் விட்டுள்ளது.
வன்னிமண் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டில் இருந்தபோது அங்கு பிச்சைகாரனில்லை, விபச்சாரமில்லை, சாதியமில்லை. எம்மதமும் சம்மதமாக இருந்தது. மேலே கூறியதுபோல வள்ளுவத்தை
வாழ்வொழிக்கும்போது எவையெல்லாம் தமிழருக்கு நடந்ததோ, அதுவெல்லாம்  முள்ளிவாய்க்காலின்
பின்னர் நடந்து கொண்டு இருக்கின்றன. ஒருபக்கத்தில் தாயகத்தில் வாழும் புலி மறவர்கள் உழைக்க வழியற்றவர்களாகி (யாரும்வேலை கொடுப்பதில்லை சிங்கள அரசால் தங்களிற்கு அழுத்தம் வரும் என்பதற்காக)  பிச்சைக்காரர்களாக, விபச்சாரிகளாக, சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுப் பணம் சம்பாதிப்பவர்களாக மாறியுள்ளார்கள்.  இவை பிழை என்று உணர்பவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கான மேம்பாடான திட்டங்களைத் தீட்டவேண்டிய படித்த நிலையிலுள்ளவர்களும், சமூகத்தில் முற்போக்குச்சிந்தனைகளை முன்வைக்க வேண்டிய, இலக்கியவாதிகளும் பார்ப்பனியத்தின் கைகளில் வீழ்ந்து தன் இனத்தையே அழிக்கிற
வேலையைச் செய்துகொண்டு இருக்கின்றனர்.
வள்ளுவத்திற்குப் பின்னர் மிகவும் எழுச்சியோடு வளர்ந்திருந்த படை தமிழர்புலிப்படைஇப்படையுடன் பார்ப்பனியமும், சிங்களமும் மோதமுடியாமல் அமெரிக்காவையும், இரசியாவையும், இன்னும்பல நாடுகளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு புலிகளை அழித்தபின்னர், அடுத்தவேலையாக தமிழர்களின் அடுத்ததலைமுறையின் சிந்தனை, எண்ணங்களில் உள்ள விடுதலை தீயை அணைப்பதற்குப் பிஞ்சு மனங்களில் நச்சுசெடியை வளர்க்கவும், மேலே குறிப்பிட்ட இலக்கியவாதிகளை பார்ப்பனியம் அமர்த்தியுள்ளது.
தூரதிஸ்தவசமாக தமிழினியின் இலக்கியங்களும் இச்சிக்கலுக்குள்  மாட்டிக் கொண்டது மனவேதனைக்குரியது.


நன்றி.
உழவன்.

( ஒரு நண்பரின் தளத்திலிருந்து).