செவ்வாய், 31 ஜூலை, 2012

நானும் சூரியனும்


எம்மை என்றும் சுற்றிச் சூழ்ந்து ஆக்கிரமித்து சிரிக்கவும் சிந்திக்கவும் கலங்கவும் ஏங்கவும் வைத்துக் கொண்டிருப்பவை எமது கடந்த கால நினைவுகளே! சிலர் பேசத் தொடங்கும்போதே "அது ஒரு காலமப்பா" என்று தொடங்கி விடுவார்கள். இது நிழலைத் தொடர்ந்து வரும்; நில் என்றாலும்  நிற்காது; போ என்றாலும் போகாது. மிகப் பெரிய பாரமாய் அழுத்திக் கொண்டிருந்து அடிக்கடி மேலெழுந்து வலி கொடுக்கும். பிறந்த மண்ணையும் அதன் வளமையையும் புலம் பெயர்ந்து வந்த பின்னரே பலரால் உணர முடிந்திருந்தது. எமது வீட்டையும் அது அமைந்திருந்த அழகையும் எமது வாழ்க்கை முறையையும் நான் அங்கேயே தினமும் இரசித்து மகிழ்ந்திருக்கிறேன்.
எமது வீடு திறந்த விறாந்தையையும் (hall ?)மூன்று படுக்கையறைகளையும் ஒரு சமையலறையையும் ஒரு சாப்பாட்டறையையும் கொண்டதுஒரு பெரிய முற்றத்துடன் கூடிய கிணறு காணியின் முன் வலது பக்கத்தில் வீட்டுக்கு நேரே நீண்டு லேசாக இடதுபுறம் திரும்பினால் கேட். கேட்டுக்கு முன்னால் வரிசையாக  தென்னை மரங்கள். கிணற்றைச் சுற்றி மறைப்புக்கு மதில் எழுப்பத் தேவையின்றி  முன்னால் குரோட்டன்ஸ் நெருக்கமாக வரிசைகட்டி நின்றன. அதனிடையே நின்ற சண்டியிலை மரத்திலிருந்து அடிக்கடி இலைகளை பிடுங்கி வறை செய்து சாப்பிடுவோம். முற்றம் நிறைய பூமரங்கள் எத்தனை விதமான செவ்வரத்தைகள்!! முல்லைப் பந்தல் மல்லிகைப் பந்தல்! பின்னேரங்களில் மல்லிகை மொட்டவிழும் நேரம் மாலை கவியத் தொடங்கியிருக்கும். இருள் இலேசாகக் குவிய நிலவு தன் ஒளியால்  அதை விரட்ட முயற்சிக்கும் அந்நேரம் உண்மையிலேயே மதி மயங்கும்.
நான் படிக்கும் காலத்தில் இரவு எவ்வளவு நேரமானாலும் கண் விழித்துப் படிப்பேன். ஆனால் காலையில்  வேளைக்கு எழும்புவது என்பது முடியாத காரியம். பின் தூங்கி பின் எழும் பெண் நான். (இன்று வரை) காலையில் என்னை வேளைக்கு எழுந்திருக்க வைக்க அம்மா எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டா. எதுவும் சரி வரவில்லை. காலையில் எல்லோருக்கும் தேநீர் கொடுக்கும் போது எனக்கும் வரும் எனக்குத் தேநீரை விட எனது நித்திரை முக்கியமாகப் படும். மிகக் கஷ்டப் பட்டு பல் விளக்கி தேநீரைக் கையில் எடுத்துக் கொண்டு சமையலறையை அண்டியுள்ள சாப்பாட்டறைப் பக்கமாக வந்து விடுவேன்.
கதவைத் திறந்தால் கண்ணில் படுவது எல்லாமே அற்புதம். காதில் கேட்பது எல்லாமே நாதம். நான் தேநீரைக் குடிக்கத் தொடங்கவும் என்னைத்தான்  பார்த்திருந்தது போல நேரே கீழ் வானிலிருந்து இளஞ்சூரியன் செஞ்சிவப்பு என்று சொல்லலாமா? ஒரேஞ்சு நிறம் எனலாமா? என்ன நிறமது!!!!வர்ணிக்க முடியாது.மெதுவாக தகதகத்து மேலேறிவரும். முதலில் கால்வாசி அரைவாசியாகி முக்காலாகி முழுதாகி மேலெழும் போது என் முகமும் சூடாகியிருப்பதை  உணர்வேன்இந்த அலைகளுக்கென்ன வந்தது? நான் கதிரவனைக்  கண்டு மயங்கி நிற்பது பிடிக்காதது போல என் காதில் அறையுமாப்போல் சோ வென்ற இரைச்சலுடன் கரையை அறைந்து செல்லும், ஒவ்வொரு அலையாக வந்து கரையைத்தொட்டு பின் ஒரு கன்னியின் வெட்கத்துடன் திரும்பி மிக லேசான சலசலப்புடன் நெளிந்து ஓடிப் போய்விடும். அதிலிருந்து கண்களைக் கொஞ்சம் சற்றுத் தூர ஓடவிட்டால் சிறு வள்ளங்களில்  மீன் பிடிக்கச் சென்றிருந்தவர்கள் புள்ளி புள்ளியாய்த் திரும்பிக் கொண்டிருக்க அந்த ஆண்களை வரவேற்க ஆயத்தமாகும் பெண்கள்; அந்தப் பொன் வினாடிகள் இருபது வருடங்களாக தொடர்ந்து எனக்குக் கிடைத்த பாக்கியம்; வரம், கொடுப்பனவு எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
எமது கேற்றோடு சேர்ந்து ஒரு ஒழுங்கை காங்கேசன்துறை-பருத்தித்துறை பிரதான வீதியிலிருந்து கடற்கரை வரை அழைத்துச் செல்லும். அதையண்டி எமது வீட்டுக்கு வலது புறம் ஒரு நல்ல தொடர்புடைய ஒரு முக்கியமானவரின் வீடு அமைந்திருந்தது. பிரதான வீதியைக் கடந்தால் எமது ஆலயம் பெரிய "வெட்டை" என்று அழைக்கப்படும் வெளியுடன் அமைந்திருக்கும். மாலையில் காற்பந்து, கைப் பந்து விளையாட எமது அன்றைய இளைஞர்களுக்கு பெரிய பொதுவிடமாக அமைந்திருந்தது. "வெட்டை"யின் வலப்புறத்தில் ஒரு ஆரம்பப் பாடசாலையும் சற்று முன்தள்ளி ஒரு வாசிகசாலை திரு. அண்ணாத்துரை, ஜான் கென்னெடி, எமது ஊர் திரு. ரோமன் மாஸ்டர் அவர்களின் படங்களுடன் உள்ளே தினசரிப் பத்திரிகைகளான ஈழநாடு, வீரகேசரி, தினகரன், மித்திரன் மற்றும் ஒரு சில ஆங்கிலப் பத்திரிகைகளும் கல்கி, கல்கண்டு போன்ற சில சஞ்சிகைகளும் ஆண்களின் அறிவை வளர்க்க உதவின (பெண்கள் போனால் ஒரு மாதிரிப் பார்ப்பார்கள்; ஆனாலும் நான் நேரம் கிடைத்தபோது பயன்படுத்தியிருக்கிறேன்) என்று சொல்லலாம்ஆண்கள் வாசிகசாலையின் உள்ளே இருந்து வாசித்ததை  விட அவர்கள் வெளியே இருந்து விமர்சனங்களில் ஈடுபட்டதையே அதிகம் பார்த்திருக்கின்றோம்.
ஆனாலும் ஊர் சனசமூக நிலையத்தினூடாக கொழும்பிலிருந்து வரும் கப்பலிலிருந்து பொருட்களை இறக்குவதும், பின்னர் சீமேந்துகளை ஏற்றி அனுப்புவதுமான  கனமான பொறுப்புக்களை எடுத்து திறம்படச் செய்து பொருள் ஈட்டியதையும் சீமெந்துத் தொழிற்சாலைக்கு ஆட்களை எடுத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டதையும் அதன் வருமானத்தை ஊர் மேம்பாட்டுக்கே திருப்பியதையும் மறக்க முடியாது.பெண்களும் ஒரு பக்கத்தால் மகளிர் அமைப்பு,வலைப்பந்தாட்டக் கழகம் போன்றவற்றை ஒழுங்குபடுத்தி முன்னேறிக் கொண்டிருந்தனர். இந்தத் துடிப்பும் இந்த உழைப்பும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய ஆலயம் கட்ட வலுச் சேர்த்தது. ஆலயம் மக்களுடைய உழைப்பிலேயே மேலெழும்பத் தொடங்கியது. ஆலயம் மேலெழ மக்கள் அடிக்கடி வெளியேறி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படத் தொடங்கியது. இந்த இடைவெளியில் வெளிநாட்டில் வாழும் எமது சகோதரிக்கு ஒரு வீடு கட்டத் தொடங்கினோம். அப்போது கூட ஊரை விட்டு நிரந்தரமாகப் பிரிவோம் என்று நினைக்க முடியவில்லை. உயர்தரப் பரீட்சை சித்தியடைந்து பல்கலைக் கழகத்துக்கு தெரிவானபோது எனது  காலை நேர காட்சி நேரம் குறைவடையத் தொடங்கியது இருந்தாலும் கிடைத்த நேரத்தைப் பற்றிக் கொள்ளுவேன். எமது வீட்டு வேலிகள் எல்லாம் பிரிக்கப்பட்டு ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்குத் தடங்கலின்றி போகும் பாதைகளை கனமான சப்பாத்துக்கள் பலாலியிலிருந்து காங்கேசன்துறை வரை  உருவாக்கிக் கொண்டன. யாரும் எதுவும் பேசவில்லை. வீடுகளில் சமைப்பதும் சாப்பாட்டை எடுத்துக்  கொண்டு ஓடுவதுமாக மக்கள் அவலப் படத் தொடங்கினர். கொஞ்சம் யோசனை தட்டியது. அக்காவின் வீடு அத்திவாரம் போட்டு கொஞ்சம் உயர்த்தியபடி மிகுதி முடிக்க கல்லறுத்து வைத்திருந்தோம். அந்தக் காணிக்குள் குழாய்க் கிணறும் அடித்திருந்தோம். ஒரு நாள் அதைப் பார்க்கவென்று போய் நின்றபோது சைக்கிளில் இரண்டு பேர் வணக்கம் சொல்லிக் கொண்டு போனார்கள். அறுக்கப்பட்ட கற்கள் அங்கே இருக்காது என்று எண்ணிக் கொண்டேன். அடுத்த நாள் நாங்கள் நினைத்தது போல கற்கள் மாயமாய் மறைந்திருந்தன. பலாலியில் பங்கர் கட்ட என்றறிந்தோம். நாலு நாளில் பலாலியும் கை விடப்பட்டது. இப்போது கல்லுமில்லை பங்கருமில்லை,

ஒரு மாதிரியாக பல்கலைக்கழக வளாகத்துள் நடந்த அயல் நாட்டு வானூர்திகளின் அடிக்கடித் தரையிறங்கல்களுடன் இழுத்துப் பறித்து இறுதியாண்டுப் பரீட்சை முடித்துப் பட்டம் என்ற ஒன்று கையில் கிடைத்து விட்டது. கொஞ்ச நாள் வேலை செய்து பார்த்தேன். சயிக்கிளிலேயே ஊரிலிருந்து இளவாலை ஹென்றியரசர் பாடசாலைக்கு சென்று வந்து கொண்டிருந்தேன். காலையில் பிள்ளைகளோடு சேர்ந்து செல்லுவேன் பயத்தில். அப்படியிருந்தும் கீரிமலையில் மறிப்பார்கள். "பசங்களுக்கு நல்ல பாடம் சொல்லிக் கொடுங்க, புலிப் பாடம் சொல்லிக் கொடுக்காதீங்க" என்று சொல்லுவார்கள். திரும்பி வரும்போது சிலவேளைகளில் தனியே மாட்டிக் கொள்ளுவேன். மந்தி மரத்திலிருந்து தாவுவது போல கீரிமலைக் கோவிலின் மதிலிலிருந்து குதிப்பார்கள். எங்கே போய் விட்டு வருகிறாய் என்று அர்த்தமில்லாமல் கேட்பார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லி சைக்கிளை மிதிக்கும் போது கொஞ்சம்  தூரத்திலிருந்து வீடுகளுக்குள்ளால்  விடுப்புப் பார்த்தவர்கள் தங்கள் பங்குக்கு மறித்து "என்னவாம் பிள்ளை என்ன கேட்டவங்கள்என்று மேலதிகமாகக் கிளற ஏற்கனவே வேர்த்து விறுவிறுத்துக் கொண்டிருக்கும் எனக்கு கோபம் உச்சிவரை ஏறும். இவற்றைத் தவிர்க்க இளவாலையிலிருந்து  எமது ஊர் வரையுள்ள குச்சு ஒழுங்கைகள் எல்லாம் தேடிப் பிடிக்க வேண்டியிருந்தது.   மனதுக்குள், செயல்களில்  சுதந்திரமின்றி இருந்தது.
பதட்டமான காலங்களாய் இருந்தன அவை எல்லோருக்குமே. வந்தவர்கள் வந்த பதட்டத்துடனேயே வெறுப்பாய்த் திரும்பினர்.
ஆனால் எமது ஓட்டம் நிற்கவில்லை. யாரோ தெரிந்தவர்களுடைய வீட்டில் போய் அடைக்கலமானோம். தண்ணீர் இறைக்கும் பம்ப் செட் உட்பட முக்கியமாக எடுக்க முடிந்த அனைத்துடனும் வெளியேறியிருந்தோம். நான் ரசித்த கடலும் சூரியனும் தூரமாய்ப் போயின.இருக்குமிடமும் நிரந்தரமாய்த் தெரியவில்லை.எதிர்கால நலன் மிக விரும்பும் ஒரு சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட எங்களுக்கு  அடுத்து என்ன செய்வது என்ற எண்ணம் மேலோங்கத் தொடங்கியது. ஒரு கட்டமைப்பான எல்லோராலும் விரும்பப்பட்ட  உருவாக்கம் இருந்தாலும் கூட அதற்குள் கலக்கும் எண்ணம் எனக்கு எப்போதும்  இருந்ததில்லை. அவர்கள் கைகளில் வைத்திருந்ததும் கழுத்துகளில் கட்டியிருந்ததும் எனக்குள் ஒரு விதமான அசௌகரியத் தன்மையைக் காணும்போது ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் விரும்பப்பட்டவர்கள். அவர்களால் துணிந்த செயல்களை எங்களில் அநேகமானோர் அவர்களை ஒரு மேம்பாட்டான நிலையில் வைத்துப் பிரித்துப் பார்த்துக் கொள்ளவே முடிந்திருந்தது. அவர்களுக்கான ஒரு தனி உலகத்தை மக்களாகவே உருவாக்கிக் கொடுத்திருந்தார்கள் என்று எண்ணுகின்றேன்.

எனவே எதிர்காலம் கருதி எனது சகோதரிகள் பிரான்சிலிருந்து என்னையும் எமது மூத்த சகோதரியின் மகனையும் அழைத்துக் கொண்டார்கள்.
நானும் எனது கடலும் இன்னும் மிகத் தூரமாகிப் போனோம்.எனது வீடு முகடின்றி இருக்கிறது என்று சொல்லுகின்றார்கள்; புற்கள் முளைக்க முடியாத நிலம் கொண்ட எனது  முற்றம் எமது காலடியின்றி காடாகிக் கிடக்கின்றது என்று சொல்லுகிறார்கள்; நாம் புரண்டெழுந்த மணல் பரப்பு வெறிச்சோடிக் கொண்டிருக்கும்; கடல் அலைகள் கொண்டு வந்து சேர்த்திருக்கும் கழிவுகளால் அப்பிரதேசமே நாற்றமெடுத்துக் கொண்டிருக்கும்; மொத்தத்தில் நெய்தல் நைந்திருக்கும்; நான் இரசித்த  சூரியன் இன்னும் எழுவான் நான் வருவேன் என்ற எதிர்பார்ப்புடன். ஆனால் நான்தான் முடங்கி விட்டேன்,,,,,,,



திங்கள், 23 ஜூலை, 2012

ஊரான ஊரிலே

ஊரான ஊரிலே

par Alvit Vincent, mardi 8 mai 2012, 19:23 ·
 
ஊரான ஓர் ஊரிலே
பேரான ஓர் பெயர் கொண்ட

பேர் விருட்சமொன்று
கிளை பரப்பி குடை விரித்து
குளிர்வித்து ஊர் காத்தது


வசந்தம் வந்தது
வந்தோரை வரவேற்றது

கோடை வந்தது
பயணிகளுக்கு நிழல் தந்தது

மாரி வந்தது
மழைக்கெல்லோரும் ஒதுங்கவிடம் தந்தது

தென்றல் வந்தது
ஊரவர் மகிழ பார்த்தது

புயலும் வந்தது
எதிர்த்து தனியே நிமிர்ந்து நின்றது

மக்கள் பெருமையாய்
ஏறிட்டுப் பார்த்து இறுமாப்படைந்தனர்

இனியெமை வெல்வாரெவர்
எண்ணி மகிழ்ந்தது ஊர்

நீண்ட கால வெறியுடன்
அயல் வீட்டு மரந்தறிப்போன்
நாள் பார்த்துக் காத்திருந்தான்


வெட்டிக்கூறு போட
சுற்றிச் சுற்றி வந்தான்

சுழன்று திட்டம் போட்டான்
முழுமையாய்ச் சாய்ப்பது கடினமென் றுணர்ந்தான்

வேறுமோர் ஊர்  கழுகு மொன்று
நீண்ட காலப் பசியுடன்

வட்டமிட்டிருந்தது
அவ்வூர் பிணம் தின்னவென

குரூரமும் பிணம் தின்னியும்
கை கோர்த்துக் கொண்டன

நலிவடைந்த கிளைகளை
வெட்டிச் சாய்க்க
முதல் முடிவு கொண்டன

 உதவிக்கு சேர்த்தன
தம் போன்ற சிலரை

கிளைகள் சில
இலகுவாய் வீழ்ந்தன

ஊர் பதறியது
வீழ்ந்த கிளைகளே பல வேறு வீழக்
கோலாய் மாறின

மரம் ஆட்டம் காண
ஊரவர் அலறத் தொடங்கினர்

இறுதி வரை தாங்கிய மரம்
வெட்டுக்கள் பல விழ
சரியத் தொடங்கியது

வானமுட்டியிருந்த விருட்சத்தின்
கீழிருந்து மேலெழுந்த

மரண ஓலங்கள் அடியிலேயே
அமிழ்ந்து போயின

கழுகுகள் இரசித்துத்
தின்னத் தொடங்கின

மரம் வெட்டி 
மரத்துடன் ஊரையும்
கூறு போட்டு விற்கத் தொடங்கினான் 


 par Alvit Vincent, mardi 8 mai 2012, 19:23 ·

என் தாய்

என் தாய்

par Alvit Vincent, dimanche 3 juin 2012, 20:23 ·
 
பார்த்துப் பார்த்து வளர்த்தவள்
பாலுடன் பண்பை ஊட்டியவள்
பாசத்தையும் சேர்த்தே கொடுத்தவள்
பரந்த உலகம் புரிவித்தவள்
பலதும் காட்டி நடந்தவள்
பன்முகத் திறன் சேர்த்தவள்
பறக்கும் கனவு உருவாக்கியவள்
பலவிரவு நனவாக்க விழித்திருந்தவள்
பாதம் நோக எனக்காய் நடந்தவள்
பார்வையில் எனை மட்டுமே கண்டவள்
பலன் பாரா அவள் முகம் காண
பரிதவிக்கிறேன் சிறு கோழிக்குஞ்சாய்
பாரின் ஓர் மூலையில் இன்று நான்
கொண்டு சேர்க்குமா விதி
பள்ளிச் சிறுமியாய் மடிசாய்வேனோ?
பயமின்றிக் கண்மூடி தூங்கி மகிழ்வேனா?

ஏக்கம்

ஏங்குதே மனம் ஏங்குதே எம்மை
ஏற்றி வளர்த்த தாய் நிலம் நாடி
ஏங்குதே ஏங்குதே மனம் ஏங்குதே
ஏதிலி எம் மனம் ஏங்குதே

கரையேறி வளை யோடும் வெண் நண்டு
கரை புரண்டோடி கால் தொட்டு விலகும் அலை
இழுத்தணைத்துக் குளிப்பாட்டும்    
பாதம் புதைய நீண்ட வெண்மணல் பரப்பு
குதித்ததில் விளையாடியது எத்தனை
கண் எல்லைக் கடங்கா நீள் வானம்
எண்ணச் சொன்ன தாரகைகள்
கோடை தந்த விளை மீனும் 
மாரிக் கடல் தந்த  வாளையும்
கொட்டிச் செழிக்க வைத்த ஆழியம்மா
கண்களில் ஆடும் நினைவம்மா
கதைகள் பேச வைக்கும் என் ஊரம்மா இன்னும்
கதைகள் பேச வைக்கும் ஊரம்மா

கண் முன் ஊரவர் இணையவோ
புனிதரே மையத்தில் வீற்றிருந்தீரோ உம்
கண்ணசைவில் எம் குறை தீர்ந்தோம்
களிப்பால் விழா எடுத்திருந்தோம்
அலங்காரப் பவனியும் அழகாய் ஊர்ந்ததுவே
கூத்துக்களும் விடியலை தொட்டிடுமே
திருக்கோவில் திருத்திடவும்
திரண்டெழுந்து பணி செய்திருந்தோமே
திரும்புமா அந்நாட்கள் வெட்டையிலே
கழித்த புதுமையான நாட்கள் 
நினைவாய் மட்டும் போய்விடுமா
கதையாய் காற்றில்  கலந்திடுமா
நினைவாய் மட்டும் போய்விடுமா

ஊறணி பெற்றெடுத்த செல்வர்கள் நாமறிவோம்
மண்ணினை மீட்க தன்
மானத் தமிழ் காக்க
தாய் மண்ணினை முத்தமிட்ட - இவர்
கதைகளை நாமறிவோம்
அவர் இறுதி மூச்சுக் காற்று- இன்று
எம் சுவாசக் காற்றாக
நேற்று வரை இவர் சுமந்த கனவுகள்
நாளை நம் நனவாக
இம் மறவரை நாம் மறவோம்
வாழ்வோம் என்றும் இவர் நினைவாய் 

பதில்??

கண்கள் திறந்துள்ளன
 எதிலும் லயிக்காமல்
பார்க்கின்றன பார்வை
எதிலும் பதியாமல்
சிந்தனை வெறுமையாய்க்
கிடக்கின்றது
சிந்திக்கவும் முடியாமல்
எங்கேயோ சுழன்று
செல்கின்றது
மனமும் உடம்பும் சேர்ந்தே
வெறுத்துப் போகின்றது
காலுக்கடியில் நின்ற
போது அமுங்கிப் போயும் என்
முன்னே நீண்டு வளர்ந்து
எனக்கு முன் நடந்த போது
உன் கால்களுக்கு
நான் அடிமையில்லை எனவும்
என் நிழலும் என்னைப்
பரிகாசிக்கின்றது
இரவுத் தூக்கம்
துக்கத்தில் கரைந்து
பகல் சூனியமாய்த் தெரிய
பிரபஞ்சங்களில் வேறுபட்டு
தனித்தே பயணிக்கின்றேன்
ஆறுதல் தேடவில்லை
பதில் தேட முனைகின்றேன்
கிடைக்குமாப் போல்
தெரியவுமில்லை
மானிட சிந்தனைகளுக்குட்பட்டு
தேடுவதால் சுற்றியும்
தொடக்கத்துக்கே வந்து
சேரத்தான் முடிகின்றது
இயலாமையால் அருகில்
உறுமும் குறட்டைச் சத்தம்
நாராசமாய் காதைச் சுட
எட்டி உதைக்க
மனம் ஏவுகின்றது
சிரிப்பொலிகள்
கோபப்படுத்துகின்றன
வயிறு வெறுமனே
சத்தமின்றி இருக்கப்
பழகி விட்டது
செய்யப்படும் செயல்களில்
குற்றம் காணத் துடிக்கின்றது
வார்த்தைகள்
பிழைக்கப் பார்க்கின்றன
முகம் திருப்பி
நடிக்க முயல்கின்றேன்
என் இயல்புத் தன்மையை
நிரூபிக்க ஆனாலும்
எனக்குள்ளே மருகிச்
சுருண்டு போவதை
தடுக்க முடியவில்லை
 
அமைதி எனக்குள்ளே என்றால்
அதைத் தடுப்பது எது
எதிர்பார்ப்பது தவறென்றால்
மகிழ்வு எங்கே
கிடைப்பதை ஏற்பதெனின்
அது ஒப்பந்தமாகாதா
ஆசைகளின் தோற்றம்
அவலத்தின் மூலமெனின்
மானிட வளர்ச்சி
நிகழ்வதெப்படி
காரியத்தின் காரணத்தை
காணாமல் நல்
தீர்வு எப்படி
பதில் இல்லை
மீண்டும் தொடக்கத்துக்கே..

அப்பா

அப்பா

par Alvit Vincent, samedi 16 juin 2012, 12:40 ·
 
தோள் கனக்கச் சுமந்தவர்-அச்
சுமை விரும்பிச் செய்தவர்
அன்புடன் அடையாளம் காட்டியவர்
அறிவு வாசல் திறந்தவர்
கண்டிப்பை நலனுக்காய் அமுலாக்கியவர்
வெறுக்காமல் நல்வழி செய்தவர்
அடித்தும் பின்
நல்லெண்ணெய் தடவியவர்
நல்லெண்ணம் மேலோங்க உதவியவர்
நற்பழக்கம் காட்டியவர்
வாழ்க்கை வழி காட்டியவர்
கல்விப்படி காட்டியவர்
உறவு காட்டியவர்
பண்பைக் காட்டியவர்
பேசும் முறை  காட்டியவர்
பேதமின்றிப் பார்க்கக் காட்டியவர்
மதிக்கக் காட்டியவர்
தோழமை பூணக் காட்டியவர்
சமூக முறைமை காட்டியவர்
உதவக் காட்டியவர் தேவைப்படுவோருக்கு
சிந்திக்கக் காட்டியவர்
தன் நம்பிக்கை காட்டியவர் 
தன் காலில் நிற்கக் காட்டியவர்
தலைமைத்துவம் காட்டியவர்
மாதிரிகையாய் தன்
வாழ்வைக் காட்டியவர்
உயர்ந்தே என்றும் எனக்குத் தெரிபவர்
ஒன்றை இன்னும்  உறுதியாய்க் காட்டியவர்
நான் அப்பாவாகவும் போது
என் குழந்தையின் தேவையறியக் காட்டி
என் கடமையை உய்த்தறியக் காட்டி
இன்னும் உயரத்தில் நிற்கின்றார்
என் அப்பா

பெண் தேடி.....

பெண் தேடி.....

par Alvit Vincent, samedi 23 juin 2012, 14:41 ·
பிறந்து வளர்ந்த ஊரை விட்டு நாட்டை விட்டு  இதுவரை பார்த்திராத தேசம் ஒன்றை நோக்கி எம் வாழ்வு  அமையும் என்று ஒரு போதும் எதிர்பார்த்திருந்ததில்லை. ஆனால் இந்த எதிர்பாராத நிகழ்வு அநேகத் தமிழருக்கு நடந்தது. உள்ளூர் இடப்பெயர்வுகளின்  சீரழிவும்  அமைதியில்லா வாழ்வும் நிரந்தரமற்ற சூழ்நிலையும் எதிர்காலம் நோக்கிய பயமும்  கூடுதல் தூண்டல் காரணிகளாயிருந்தன,
செல்வியின் மனதில் ஒரு சொல்ல முடியாத உணர்வு பரவிக் கிடந்தது . சினிமாக்களில் வரும் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வல்ல அது; மாறாக உறவுகளின் இழப்பின் வேதனையை அனுபவிக்கத் தயாராகும் ஒரு நிலை. அம்மா மற்றும் இரண்டு தம்பிகளை விட்டுப் பிரிவது இலகுவாகத் தெரியவில்லையோசிக்கும்போது வயிற்றுக்குள் ஏதோ செய்து சத்தி வருமாற்போல் இருந்தது. அம்மா ஆறுதலாகக் கதைத்தார். இத்தனைக்கும் செல்வி ஒன்றும் தனியே வெளிநாட்டுக்குச் செல்ல தயாராகவில்லை. அவளுடைய அண்ணன் சந்திரன் பிரான்சிலிருந்து எல்லா அலுவல்களையும் பார்த்து கூப்பிடுகின்றார். அக்கா மாலினியும் அங்கே குடும்பமாக இருக்கிறா. இருந்தாலும் இங்கேயிருந்து விமானத்தில் தனியே ஏறி பிரான்ஸ் வரைக்கும் போய் சேர வேண்டுமே. நினைக்கவே பயமாக இருந்தது. அண்ணன் இடைக்கிடையில் தொலைபேசியில் சில ஆலோசனைகளைச் சொல்லுவார்.

அம்மாவுடன் கொழும்புக்கு வந்து சேர்ந்து விமானம் ஏறும் நாளும் வந்தது. அன்று முழுதும் பயத்தில் சத்தியுடன் காய்ச்சலும் சேர்ந்து கொண்டது. அம்மா அருகிலிருந்த மருத்துவரிடம் கூட்டிச்சென்று மருந்து வாங்கிக் கொடுத்தார். செல்விக்கு திரும்பி வீட்டுக்குப் போனால் என்ன என்று இருந்தது. ஆனால் சொல்ல முடியவில்லை. திரும்பிப் போயும் தான் என்ன செய்வது? வீடிழந்து, ஊரிழந்து, தொழிலிழந்து வாழும் நிலை வேண்டாம் என்று தான் இந்த முடிவை எடுத்தார்கள். இனிப் பின் நோக்க முடியாது. மத்தியானத்துக்குப் பிறகு காய்ச்சல் குறையத் தொடங்கியதும் அம்மா பெருமூச்சு விட்டா. செல்வி தன்னை ஒருநிலைப்படுத்த முயன்றாள்விமான நிலையத்தில் அம்மாவைத் திரும்பிக் கடைசியாகப் பார்த்துக் கையசைத்தபோது நிறைந்திருந்த கண்களினூடே அம்மா கலங்கலாகத் தெரிந்தா.

விமானம் மேலெழுந்தபோது அடிவயிற்றிலிருந்து நோவு மேலெழுந்து மீண்டும் சத்தி வருமாற்போல் இருந்தது. கையிலே தயாராக ஒரு பிளாஸ்டிக் பையை வைத்திருந்தாள். ஆனால் எதுவுமே வெளியே வரவில்லை. அண்ணா சொன்னபடி காதை அடைத்திருந்தாள். வெளியே நகரம் சிறுத்துக் கொண்டு வந்தது. அம்மா இந்நேரம்  அழுது கொண்டிருப்பா. அத்துடன் தெரிந்த எல்லாக் கடவுள்களிடமும்  பிரச்சனையின்றிப் போய்ச் சேர வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருப்பா. அம்மா பாவம். விமானம் பூமியை உதறி விட்டு முகில் கூட்டங்களுக்கிடையில் சீராகப் பயணிக்கத் தொடங்க அழகான விமான சேவைப் பெண்கள் சிரித்தபடி பயணிகளின் தேவைகளைக் கவனிக்கத் தொடங்கினர். சாப்பிடப் பிடிக்கவில்லை. ஒரு தேநீர் கேட்டு வாங்கிப் பருகிக் கொண்டாள். கையிலே கொண்டு வந்திருந்த கண்ணதாசனின் வாழ்க்கை அனுபவங்களை படிக்கத் தொடங்கினாள் , (அது எத்தனையாவது தடவை என்று ஞாபகம் இல்லை). ஒவ்வொரு தடவையும் அதை வாசிக்கும் போது  எத்தனை பேரால் இப்படி தமது  வாழ்வைத் திறந்த வெளியில் தூக்கிப் போட முடியும் என்று எண்ணிக் கொள்ளுவாள். அதன் பின் எத்தனை விமர்சனங்களைத்தான்  எதிர்கொள்ள நேரிடுகின்றது? ஒருவர் தான் பட்ட துன்பங்களை அடுத்தவர் படக்கூடாது என்று எண்ணிச் சொல்லும் விடையமே இங்கே ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றது. இதிலே எமது சமூகக் கட்டமைப்பிலே உள்ள திருத்தப்படவேண்டிய சில குறைபாடுகளை நிவர்த்தி செய்தாலன்றி சில நல்ல விடையங்களை ஏற்றுக் கொள்ளுவது சிரமம் என்று எண்ணிக் கொண்டாள் செல்வி. யோசித்துக் கொண்டே தூங்கியும் விட்டாள்.

யாரோ காதுக்குள் பேசுமாப்போல் உணர்வு ஏற்பட திடுக்கிட்டு எழுந்து கொண்டாள். அது விமானம் தரையிறங்குவதற்கான அறிவுப்பு. எழுந்துசென்று முகத்தைக் கழுவிக் கொண்டு தயார்ப்படுத்தி கைப்பையை சரிபார்த்துக் கொண்டாள் செல்வி. ஒரு தேநீர் குடித்தால் நல்லது போலத் தோன்ற சிரித்துக் கொண்டு நிற்கும் பெண்ணைக் கூப்பிட்டு ஒரு தேநீர் தர முடியுமா என்று கெஞ்சிக் கேட்டு வாங்கிக் குடித்தவுடன் கொஞ்சம் தெம்பு வந்தாற்போல் தோன்றியது. சுற்றிப் பார்த்துக் கொண்டாள். அருகிலிருந்தவர் இன்னும் நித்திரையிலிருந்தார். பலர் தரையிறங்கும் அவாவில் தங்களுடைய பொருட்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தனர். யன்னல் வழியே பார்த்தபோது பூமி வெளிச்சங்கள் நட்சத்திரங்களாய் அழகாகத் தெரிந்தன. சிறிது நேரத்தில் விமான இருக்கைக்கான பட்டியை போடும்படி அறிவிப்பு வர எல்லோரும் கீழ்ப்படிந்தனர். செல்விக்கு மனதுக்குள் லேசான பயம் எட்டிப் பார்த்தது; அண்ணா வந்து நிற்பாரா? அண்ணாவின் தொலைபேசி இலக்கம் இருக்கிறதா என்று மீண்டும் சரி பார்த்துக் கொண்டாள். விமானம் தரை தொட்ட நேரம் அதிகாலைப் பொழுது. ஐரோப்பாவின் ஒளிவெள்ளம் அதிசயிக்க வைத்தது. விமான நிலைய சடங்குகள் முடிந்து வெளியே வர அண்ணா தூரத்திலிருந்தே மகிழ்ச்சியாகக் கையை அசைத்தார். நிம்மதியாயிருந்தது.

ண்ணாவின் பி எம் டபிள்யு அவளுக்குப் பிடித்திருந்தது. விமானநிலையத்திலிருந்து வீட்டுக்குப் போகும் வழி வரை பாரிசின்  அதிகாலைப் பொழுது அமைதியாய் ஆனால் கவர்ச்சியாய் இருந்தது. மக்கள் இன்னும் போர்வைக்குள்தான் இருந்திருக்க வேண்டும். வீதி அகலமாய் வழுக்கிக் கொண்டு போனது. ஒரு நாள் சுன்னாகத்திலிருந்து பண்டத்தரிப்புக்குப் போகும் வழியில் செல்வி சென்றுகொண்டிருந்த உந்துருளி முழுக் கவனத்தையும் ஒருங்கிணைத்து பள்ளம் பார்த்து ஒட்டியும் தவிர்க்க முடியாமல் ஒரு பள்ளத்தில் விழுந்து அப்படியே பக்கத்திலிருந்த வயலுக்குள் தூக்கி எறியப்பட்டதை நினைத்துக் கொண்டாள். பளிச்சென்று வரிசையாக எரிந்து கொண்டிருந்த தெரு விளக்குகள், தெருவோரங்களில் இருந்த கடைகளின் பல வண்ண மின் பெயர்கள், உயர்ந்து நிற்கும் கட்டிடங்களின் மேலே பளிச்சிடும் விளம்பரங்கள் என்பவை பாரிசை  சொர்க்கமாகக் காட்டின. தெருவில் இறங்கி நடக்கவேண்டும் போல இருந்தது. பாரிசில் இருப்பது பெருமையாய்த் தெரிந்தது.

வீடு வந்து விட்டது என்று அண்ணா சொன்னார்  பி எம் டபிள்யு ஐ தெரு ஓரத்திலே நிறுத்தி விட்டு  பொதிகளைத் தூக்கிக் கொண்டு முன்னே நடந்தார். செல்வி நின்று சுற்றிலும் பார்த்தாள்ஐந்து பாரிய கட்டிடங்கள் பத்துப் பன்னிரண்டு மாடிகளாயிருக்கலாம் சேர்ந்தாற்போல் அமைந்திருந்தது. அதிகாலை வேலைக்குப் போபவர்கள் அக்கட்டிடங்களிலிருந்து அங்கொன்று இங்கொன்றாகப்  புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களைக்  கடந்தவர்கள் அண்ணாவுக்கு வணக்கம் சொன்னார்கள். எட்டாவது மாடியிலே அண்ணாவினது வீடு அமைந்திருந்தது. மின்னுயர்த்தி இருந்தது. இது வேலை செய்யாவிட்டால் நடந்தா ஏறுவீங்கள்? என்று செல்வி கேட்டாள். அது இடைக்கிடையிலே நடக்கும் என்று அண்ணா சிரித்துக் கொண்டு  பதில் சொன்னார். அவளுக்கு பயமாக இருந்தது. வீட்டுக்குளே காலடி எடுத்து வைத்தாள் செல்வி. உள்ளே ஒரு சிறு நடை பாதை இருந்தது. வலது பக்கம் திரும்பினால் சமையலறை. அண்ணா மோசமாக இல்லை. எதிர்பார்த்ததை விட சமையலறை சுத்தமாகவே இருந்தது. திரும்பி இடதுபுறம் நடந்தால் மூன்று மீற்றர் இடைவெளியில் ஒரு படுக்கையறையும் அதை ஒட்டினாற்போல் இன்னொரு படுக்கையறையும் வாசலுக்கு நேரே நடுப்பகுதியில் வரவேற்பறையும் வலது பக்கத்தில் குளியலறையும் இருந்தன. அளவான வீடு. பிடித்திருந்தது

இரவு நித்திரை இல்லாமல் இருந்ததால் குளித்துவிட்டுப் படுத்தால் நல்லது போலத் தோன்றியது. குளித்து விட்டு வர அண்ணா புட்டும் மீன் குழம்பும் தந்தார். அண்ணா நன்றாகச் சமைக்கப் பழகியிருந்தார். அண்ணா அக்காவுக்குக் கிட்ட இருந்திருக்கலாம், ஏன் இரண்டு பேருக்கும் ஒத்து வரவில்லை என்று நினைத்துக் கொண்டாள். சாப்பிட்டு விட்டு அம்மா அண்ணாவுக்காக ஆசையாகக் கொடுத்து விட்டிருந்த எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்து விட்டு போய்ப் படுத்து விட்டாள். செல்வி அக்கா தன்னுடைய வரவை எதிர்பார்த்து அண்ணா வீட்டுக்கு வந்திருப்பா என்று வழியிலே நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஏமாற்றமாயிருந்தது. காலையில் அண்ணாவிடம் இதுபற்றிப் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டே நித்திரையாகிப் போனாள்.

முதுகு வலிக்குமாற்போல் உணர்வு தோன்ற விழித்துக் கொண்டாள் செல்வி. ஒரு தடுமாற்றம் தோன்றி  எங்கே இருக்கிறோம் என்று விளங்க சில நிமிடங்கள் பிடித்தது. எழும்பியவுடன் கேட்கும் அம்மாவின் குரலும் தம்பிகளின் சண்டையும் இல்லாத முதற் காலைப் பொழுதாயிருந்தது அன்றைய காலை. நேரம் காலை பத்து மணியைத் தாண்டியிருந்தது. அறைக்கு வெளியே வந்து  பார்த்தபோது அண்ணா ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்து "தேநீர் போட்டுத் தரவா"? என்று கேட்டார். "இல்லை அண்ணா, இனிமேல் நான்தான் எல்லாம் செய்வேன். இவ்வளவு நாளும் நீங்க தனிய கஷ்டப்பட்டது காணாதா?" சொல்லி விட்டு செல்வி குளியலறைக்குள்  சென்று  ஒரு மின்னல் வேகக் குளியல் போட்டு விட்டு வந்து தேநீர் போட்டு அண்ணாவுக்கும் கொடுத்து தானும்  குடிக்கத் தொடங்கினாள். அண்ணா அவளது  வருகையை ஒட்டி இரண்டு நாட்கள் வேலைக்கு விடுப்பு எடுத்திருந்தார். கடந்த தடவை ஊருக்கு வந்தபோது பார்த்ததை விட கொஞ்சம் பெருத்திருந்தார். சாப்பாட்டில் கவனம் எடுக்க நேரம் இருப்பதில்லை என்று சொன்னார். மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. சமையலறைக்குள் சென்று நோட்டம் விட்டாள் செல்விதயார்ப் படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களை  அதிகளவில் உள்வாங்கியிருந்த அளவான குளிர் பதனப் பெட்டி ஒன்று கதவை ஒட்டினாற்போல் இருந்தது. மின்னடுப்புடன் வெளியே பொருட்களை பரத்தி வைக்க வேண்டிய அவசியமேற்படாத அளவில் மேலும் கீழுமாக அலமாரிகள் அமைந்திருந்தன. வெளியே வந்து அக்காவைப் பற்றிக் கேட்க இதுதான் சமையம் என்றெண்ணி
"அக்கா ஏன் என்னைப் பார்க்க வரவில்லை" என்றாள்.
 "யாருக்குத்  தெரியும்? உன்னுடைய அக்கா அதுக்கும் ஏதாவது வியாக்கியானம் வைச்சிருப்பா" ....
"ஏனண்ணா அக்கா ஊரில இருக்கேக்க நல்லாத்தானே இருந்தா".
"அது ஊரில செல்வி. இஞ்ச கனக்க விஷயங்கள்  மாறிப் போச்சுது". ம்ம்ம்ம் ....
"ஏனிப்பிடி?"
"பிள்ளைஅக்காவுக்கு என்னால எவ்வளவு செய்ய ஏலுமோ அதை விட நல்லாவே செய்திட்டன். அக்காவுக்கு இன்னும் ஆசை தீரேல்லை."
செல்விக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. அக்காவை  பார்த்துக் கதைத்தால் நல்லது என்று தோன்றியது.
"அண்ணா நான் அக்காவோடை கதைக்கலாமா?"
"பிரச்சனையில்லைதாராளமாய்க் கதை பிள்ளை. உனக்கு அவள் அக்கா எனக்கு  தங்கச்சி. ஆனால் வம்பை விலைக்கு வாங்காமல் இருந்தால் சரி செல்வி. சரி பிள்ளை, நீ நித்திரையாய் இருந்த நேரம் நான் அம்மாவோடை கதைச்சிட்டன் ; நீ கதைக்கிறதெண்டால் இதில ஒரு கார்ட் இருக்கு அதில கதை ; நான் ஒருக்கால் வெளியில போக வேணும்",
 என்று சொல்லி கார்ட் எப்பிடிப் பயன்படுத்துவது என்று விளங்கப் படுத்தினார். அம்மாவோடு கொஞ்ச நேரம் பேசி விட்டு மதியச் சமையலை பொருட்களைத் தேடித்  தேடி ஒருவாறு செய்து முடித்தாள்அக்காவோடு பேச வேண்டும். அக்கா அண்ணாவின் வீட்டிலிருந்து ஏறக்குறைய நாற்பது கிலோமீற்றர் தூரத்தில் வசித்து வருகிறாள் என்று கேள்விப்பட்டேன். தொலைபேசியில் இரண்டு தடவை கிடைக்காமல் மாலை ஆறு மணியளவில் அக்கா கிடைத்தாள். "அக்கா நான் செல்வி ....
" செல்வியோ? எப்ப பிள்ளை வந்தனீ? நேற்று வந்து சேந்திருக்க வேணும் போல...."
"ஓமக்கா, நேற்று இரவு போல வந்து சேந்தனான்"
"அப்பா இப்ப தான் அவன் டெலிபோன் அடிக்க விட்டவனாக்கும்"..... அக்கா கயிறு திரிக்க ஒரு நூல் தேடுவது தெரிந்தது.
"அக்கா, நீங்கள் ஏயர்போர்டுக்கு வருவீங்கள் எண்டு எதிர்பாத்தனான். சரி அங்கை இல்லை எண்டவுடன என்னைப் பாக்க இஞ்சஎண்டாலும் வருவீங்கள் எண்டா  நீங்கள் இஞ்சையும் இல்லை" செல்வியும் விடாமல் பதில் கொடுத்தாள். "நான் அவன்ர வீட்டுப் படி மிதிக்க மாட்டன் நான்தான் உன்னைக் கூப்பிடவேண்டு இருந்தனான் அதுக்கிடையில அவன் எனக்குச் சொல்லாமல் தான் அலுவல் பாத்து உன்னை எடுத்திட்டான். அவனை உன்னை இஞ்சை  கொண்டுவந்து விட்டிட்டுப் போகச் சொல்லி நீ கேளன்" இதற்கு மேல் அக்காவுடன் கதைக்க முடியாது என்று தெரிய ஓம்  நான்  அண்ணாவோட கதைக்கிறன் என்று சொல்லி விட்டு தொலை பேசியை நிறுத்தினாள் செல்வி.

அக்காவின் பேச்சும் தொனியும் ஊரிலே  தெரிந்திருந்த அக்காவாக இல்லை. அக்கா  இங்கு வந்து மாறி விட்டாவா அல்லது முன்பே இயல்பாயிருந்த இக்குணம் எம் சமூகச் சூழல் காரணத்தால் வெளிப்படாதிருந்ததா? அண்ணா அக்காவை இங்கே கூப்பிட்டு திருமணம் செய்து வைத்து அவவுக்குத் தேவையான அனைத்தையுமே கொடுத்து முடித்திருந்தார். அனால் அக்காவுக்கு அது இன்னும் போதவில்லை. அண்ணாவை அடிக்கடி நச்சரித்து தனக்குத் தேவையானதைப் பெற்றுக் கொண்டிருந்தா. ஆனால் ஒரு எல்லைக்கு மேல் அவராலும் பாவம் முடியவில்லை ஊரிலே மற்றவர்களையும் பார்க்கவேண்டுமல்லவா,அக்கா கேட்பதை அண்ணா மறுக்க அக்கா கண்டபடி பேசத் தொடங்க அண்ணா பேசாமல் தானாகவே விலத்திக் கொண்டு விட்டார்.

செல்விக்கு சகோதரங்கள் இப்படிப் பிரிந்து கிடப்பது பிடிக்கவில்லை.ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சகித்துக் கொண்டு வாழ்ந்தால் வெளியே உள்ளவர்களின் சிரிப்புக்கு ஆளாகாமல் இருக்கலாமே என்று நினைத்தாள். அண்ணா வைத்திருந்த தமிழ் நாட்காட்டியிலிருந்து  இதழ்கள் மிக வேகமாக உதிர்ந்துகொண்டிருந்தன. செல்வி அக்காவுடன் இடையிடையே பேசிக் கொள்ளுவாள். ஒரு நாள் அக்கா வழமையை விட மகிழ்ச்சியாகப் பேசி இறுதியாக ஒரு நல்ல செய்தியைச் சொல்லி முடித்தாள்.வீட்டுக்கு  ஒரு சிறு இளவரசியோ அல்லது இளவரசனோ கிடைக்கப் போகின்றான்(றாள்). அண்ணா மிகவும் மகிழ்வடைந்தார். ஊரிலே ஒரே கொண்டாட்டம்.அக்கா சந்தர்ப்பம் பார்த்திருந்து காயை நகர்த்தினா. தன்னுடைய நிலைமையை சொல்லியழுது செல்வியை தன்னுடனே சேர்த்துக் கொண்டாள். அண்ணாவுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. குழந்தை பிறக்கு மட்டும்தான் செல்வி அங்கே இருப்பாள் என்ற ஒப்பந்தத்துடன் செல்வி அக்காவுடன் போய்ச் சேர்ந்தாள். அக்கா இதுவரை தூரவே இருந்தபடியால் கண்டு கொள்ளாமுடியாமலிருந்த அனைத்தையும் செல்வியால் அக்காவுடன் சேர்ந்திருந்த காலப் பகுதியில் கண்டு கொள்ளக் கூடியதாக இருந்தது. அண்ணாவுக்கு முப்பத்தி ஆறு  வயது முடிந்துவிட்டிருந்தது. இதுவரை அவருடைய திருமணத்தைப் பற்றி யாருமே அக்கறை எடுத்ததாகத் தெரியவில்லை அம்மாவைத் தவிர. இதனிடையில் அக்காவும் அண்ணாவும் ஒன்றாக இருந்த காலத்தில் அக்காவுக்குத் தெரிந்த ஒரு பெண் வீட்டுக்கு வந்தபோது அண்ணாவுக்கு அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தது. அந்தப் பெண்ணுக்கும் கூட. ஆனால் அக்கா அதை குழப்பியடித்திருந்தா. அண்ணா திருமணம் செய்து விட்டால் பிடுங்குவது சிரமமாகி விடுமே! அண்ணாவும் தன்னுடைய திருமணத்தைப் பற்றித் தானே கதைப்பது அவமானம் என்று நினைத்தோ என்னவோ பேசாமலேயே இருந்து விட்டார்.

இதையெல்லாம் அறிந்த  செல்விக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. எப்படி எல்லாம் தனிமனித சுயநலச் சிந்தனைகள் எமது சமுதாயத்தில் ஒருவரை அழுத்தி வைத்திருக்கின்றன. இவற்றிலிருந்து நாமாகவே விடுபட்டால் சரி இல்லையென்றால் அப்படியே அமுங்கிச் சாக வேண்டியதுதான்.ஏறி மிதிக்கும் குணமுடையவர்கள் எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்ற வகையில் கிடைக்கிறதை சுருட்டிக் கொண்டு போய்க் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்களைக் கேட்டால் இவர்களுக்குக் கெட்டித்தனம் இல்லை; வாழத் தெரியாதவர்கள் என்று தங்களுடைய கோணல் புத்திப்படி வியாக்கியானம் சொல்லுவார்கள். அக்கா இந்த விடையத்தில் மிகக் மோசமாயிருந்தாள். ஆட்களுக்கேற்றாற்போல் பேசி காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள்.
செல்வியைக் கொண்டு நன்றாகவே வேலை வாங்கினாள். செல்வி பிறக்கப் போகும் குழந்தையை நினைத்து பல்லை கடித்துக் கொண்டிருந்தாள். ஆனால் போகப் போக அக்காமேல் இருந்த அன்பு வெறுப்பாக மாறுவதை தவிர்க்க முடியவில்லை. அன்பு ஒன்றும் கேட்டுப் பெறுவதில்லையே! தானாக வர வேண்டும் அவரவர் செயல்களால் அது நிலைக்க வேண்டும். அக்கா அதைக் குடும்பத்திலிருந்து இழந்து கொண்டிருந்தாள். குழந்தையும் பிறந்தது. பெண் குழந்தை. அண்ணா அக்கா சொல்லாமலேயே வந்தார் ஒரு சங்கிலியை குழந்தையின் கழுத்திலே போட்டு விட்டுப் போய் விட்டார். அக்காவுக்கு வாயோடு கண்ணும் சேர்ந்து சிரித்தது.

அண்ணா போன பின்பு செல்வி அண்ணாவின் திருமணப் பேச்சை எடுத்தாள்.
"அண்ணாவின்ர வயதை ஒத்த ஆட்கள் எல்லாம் கலியாணம் செய்து குடும்பம் பிள்ளைகளோட இருக்க அண்ணா மட்டும் தனியாக இருக்கிறார். அவருக்கு ஆசை இருக்காதே?"
"இருக்கும் தான். ஆனால் இப்ப நீயும் வந்து விட்டாய். உனக்கு ஒரு கலியாணம் செய்யாமல் என்னண்டு அவர் செய்யிறது? பிறகு  உன்ரை கலியாணப் பிரச்னையை ஆர் பாக்கிறது? வாறவள் எங்கடை குடும்பத்தைப் பாக்க ஒத்து வராவிட்டால் என்ன செய்யிறது?" ஊரில இருக்கிற தம்பி தங்கச்சியை ஆர் பாக்கிறது?"
செல்விக்கு கோபம் உச்சிக்கேறியது.
"அப்ப அண்ணா என்ன மெஷினோஆர் பாக்கிறது ஆர் பாக்கிறது எண்டு கேக்கிறாய்? ஏன் நீ வேற ஆளோ? நீ பாக்க மாட்டியோ? நீ குடும்பத்தில ஒரு ஆள் இல்லையோ?"  செல்வியின் குரல் உயர்ந்தே இருந்தது.

அக்கா இதை எதிர்பார்க்கவில்லை என்பது பார்வையிலேயே தெரிந்தது. இருந்தாலும் அவள் அனுபவசாலி. விட்டுக் கொடுக்காமல்,
"ஆம்பிளைதானே வீட்டைப் பாக்க வேணும். நான் பெம்பிளை என்ன செய்யிறது? எங்கடை செலவுகளையே சமாளிக்க ஏலாமல் இருக்கு. இதுக்கிடையில இவற்றை குடும்பத்தையும் பாக்க வேணும்....."
உன்னால ஒண்டும் செய்யேலாது. அண்ணாவால மட்டும் எல்லாம் செய்ய ஏலும் அப்பிடித்தானே?
"நான் அப்பிடிச் சொன்னனானே ? இன்னும் கொஞ்சம் பொறுப்போம் எண்டுதான் சொல்லுறன்."
"இப்பவே வழுக்கை விழத் தொடக்கி விட்டுது, இன்னும் என்ன பொறுக்கிறது?
செல்வி இனி அங்கே இருப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாள்.
"அக்கா எனக்கு இஞ்ச இருக்க ஏலாது நான் அண்ணாட்டப் போகப் போகிறேன். அங்கை அவர் சாப்பாட்டையும் கவனிக்காமல் வேலை வேலை எண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்".

அக்கா இதை எதிர்பார்க்கவேயில்லை.
"நீ இப்பிடி திடீரெண்டு வெளிக்கிட்டா நான் என்ன செய்யிறது செல்வி? அடுத்த மாதம் நான் வேலை தொடங்கலாம் எண்டு இருக்கிறன். நீ இருந்தால் பிள்ளையைக் கவனிக்கலாம்; இல்லாட்டால் அதுக்கு காசு கட்ட வேணும். அண்ணா இவ்வளவு நாளும் தனிய சமாளிச்சவர் தானே. அவர் பாத்துக் கொள்ளுவார். நீ இஞ்ச இரு."
செல்வி கோபத்தில் வார்த்தைகளைச் சிதற விடாமலிருக்க கஷ்டப்பட்டு வார்த்தைகளை தேடினாள்.
"பாத்தியா நீ இந்த ஜென்மத்திலை திருந்த மாட்டாய்.எப்பவும் உன்னுடைய பிரச்சனைகளை மட்டும்தான் கவனிச்சுக் கொண்டிருப்பாய். மற்றவை எக்கேடு கேட்டால் என்ன எண்ட எண்ணம் உனக்கு. நீ எப்பிடி எண்டாலும் இரு ஆனால் என்னால உன்னை மாதிரி இருக்க ஏலாது நான் அண்ணாவிட்டை போறன்"
சொல்லிக் கொண்டே கைப் பையைத் தூக்கிக் கொண்டு "நான் பிறகு அண்ணாவோட வந்து மிச்சச் சாமான்களை எடுக்கிறன்" என்று சொல்லியபடி இறங்கி தெருவுக்கு வந்தாள்.
மாலை மங்கி இருள் கவிந்திருந்தது. வீடுகளுக்குள் இருண்டிருந்த மனக்களைப் பார்த்ததில் பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருந்த  தெரு விளக்குகள்  இப்போது ஆச்சரியத்தைத் தரவில்லை செல்விக்கு.

யாராவது பெண்ணிருந்தால் சொல்லுங்களேன்! செல்வி அண்ணாவுக்குப் பெண் பார்க்கிறாள்.

வியாழன், 19 ஜூலை, 2012

"துரத்தப்பட்டவர்களின் மீள் பயணம்"


எத்தனையோ காலச் சிக்கல்களுக்குப் பிறகு நிம்மதியாக(?) நாட்டுக்குச் சொந்த பந்தங்களைப் பார்க்கவென்று போன நிறையப் பேரில் செல்வாவும் அடக்கம். முன்பு நிலைமை லேசான இறுக்கத்தில் இருந்த போது மாமா மோசம் போன செய்தி கிடைத்ததும் மனதுக்குள் குறுகுறுக்க கடினமான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தாள் கணவனுடன். பிள்ளைகள் கேள்விப்பட்ட விடையங்களை வைத்துக் கொண்டு வரவே முடியாது என்று சொல்லி விட்டதால் கணவனும் மனைவியும் தனியே சென்றிருந்தார்கள். போன இடமெல்லாம் பயத்தில் கண் முழி பிதுங்கப் பிதுங்க பார்த்துப் பார்த்து மூச்சை இறுக்கிப்  பிடித்துக் கொண்டு இங்கே வந்து சேர்ந்ததும் தான் ஒழுங்காக விட முடிந்திருந்தது.
அது ஒரு கனாக் காலம் போல, அதுவும் கடந்து போக, சோதனைகள் எதுவுமே இல்லையாம் . அவங்கள் நல்லாக் கவனிக்கிறாங்களாம்.சந்தோசமாகப் போய் இதுவரை பார்க்காத இடங்களெல்லாம் பார்த்துக் கொண்டு வரலாம் என்கின்ற விளம்பரங்களோடு எம் மக்கள் தாம் பிறந்த நாட்டை நோக்கி டூரிஸ்ட் ஆக  இலகுவாக மிக இலகுவாக ஆறு மாதங்களுக்கு முன்பே பயணச் சீட்டுக்களை முன்பதிவு செய்யத் தொடங்கிய காலப்பகுதிகளில், செல்வாவும் "அம்மாவும் அப்பாவும் பிள்ளையளைப் பாக்கேல்லை" என்கின்ற முக்கிய காரணத்தை மையப்படுத்தி பயணச் சீட்டுக்களைப் பதிவு செய்து விட்டாள்.
பதிவு செய்த நாளிலிருந்து பயண நாள் வரை ஒரு ஈரோ கடையிலிருந்து  பல கடைகள் வரை ஏறி இறங்கி பொருட்கள் வாங்கிச் சேர்த்தாயிற்று. உடுப்புக்கள், உணவுப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், மணிக்கூடுகள், இன்னும் என்னென்னவோ எல்லாம் குடும்பத்தினர், சொந்த பந்தங்கள், தெரிந்தவர்கள், அறிந்தவர்கள், எல்லாரையும் மனதில் வைத்து வாங்கியாயிற்று. எதிர்பார்த்ததை விட பணம்  எகிறுவது தெரிந்தது. கடன் அட்டை  கை கொடுத்தது. பரவாயில்லை பிறகு வந்து சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டாள்.
செல்வாவின் கணவன் குமரன் முதலிலேயே சொல்லி விட்டான் "இஞ்சயிருந்து அள்ளிக் கட்டிக் கொண்டு போய் பிறகு அங்கயும் செலவழிச்சு அள்ளிக் கட்ட நான்  சம்மதிக்க விட மாட்டன்" என்று. செல்வா மனதுக்குள் ஓம், அங்கை போய்ப் பாப்பம் என்று  நினைத்துக் கொண்டாள் . ஆனால் சொல்லவில்லை. இப்பவே ஏதாவது கதைத்து எல்லாத்தையும் ஏன் குழப்புவான் என்று நினைத்து வாயை இறுக்கி  மூடிக் கொண்டாள். ஆனால் மனதுக்குள் அங்கே வாங்கப் போகும் பொருட்களின் பட்டியல் நீண்டிருந்தது. ஒரு வழியாக பயணப் பொதிகளை எல்லாம் (வேறு தெரிந்தவர்களால் தரப்பட்ட பொருட்கள் உட்பட) கட்டி முடித்து அப்பாடா என்று சாப்பிட இருந்த நேரத்தில் ஒரு மதியத்தில் மூத்தக்கா தொலைபேசி எடுத்தா. " பிள்ளை நீங்கள் வரேக்க அந்த தையிட்டி காணியின்ர உறுதியைக் கொண்டு வாங்கோவன்"!!நீங்கள் வரேக்கை எழுதிவிட்டால் நல்லது !! செல்வாவுக்கு என்ன சொல்லுவதென்று  உடனே எதுவும் தோன்றவில்லை. 1989 களில்சொந்த ஊரை விட்டு வெளிக்கிட்டிருந்தார்கள். 2011 இல் எல்லாருக்கும் அந்த இடங்கள் தேவைப்படுகின்றன. என்னவோ தெளிவில்லாதது போல் தெரிந்தது. போய்ப் பாப்போம் என்று நினைத்து "நான் இவரோடை கதைக்கிறன்" என்று அக்காவுக்குப் பதில் சொல்லி முடித்தாள்.
பயணத்தின்போது செல்வா நினைத்துக் கொண்டாள். அந்த முற்றத்து மாமரநிழலில் மணித்தியாலக்கணக்காக சுகமாக நல்ல நித்திரை கொள்ள வேண்டும். பயணத்தின் எதிர்பார்ப்புகளில் இதுவுமொன்று. அடுத்தது அம்மியில் அரைத்து நல்ல மீன் கறி சமைத்துச் சாப்பிட வேண்டும். அம்மா பாவம் ஏலாது தன்னால் அம்மியில் அரைக்க முடியும் என்று எண்ணினாள். எதிர்பார்த்திருந்த அந்தப் பொன் நாளில் ஊருக்குப் போய் இறங்கினார்கள். வரவேற்புப் பலமாகவிருந்தது. குமரனின் தங்கையின் கணவர் அவர்கள் கொண்டு போகும் பொருட்களின் கனம் அறிந்தது போல் வானுடன் காத்திருந்தார். வசதியாக ஏறிப் போய்  குமரனின் பெற்றோர் வீட்டில் இறங்கினார்கள். குமரனின் அண்ணன், தங்கைகளின் குடும்பம் வீட்டிலே இவர்களை எதிர்பார்த்துக் குழுமியிருந்தது. பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது; சொந்த பந்தங்களின் ஆரவாரம் கண்ணீரை வரவழைத்தது. அன்று இரவுப் பொழுது பிள்ளைகளின் அறிமுகங்களும், பேரன் பேர்த்திகளின் அன்புப் பேச்சுமாக கழிந்தது.
அடுத்த நாள் காலையில் ஒருவராலேயும் எழுந்திருக்க முடியவில்லை பயணக் களைப்பால். குமரனின் தங்கை அவர்கள் படுத்திருந்த அறைக் கதவைத் தட்டிய சத்தத்தில் எழுந்து கொண்டாள் செல்வா. கணவனையும் தட்டி விட்டாள். நேரம் பத்தைத் தாண்டியிருந்தது. வெளியே வந்து பளிச்சென்ற வெய்யிலைப் பார்த்தபோது மனதுக்குள் உற்சாகம் எழுந்தது. சூடான தேநீருடன் இரண்டு துண்டுப் பாணையும் சாப்பிட்டுக் காலை உணவை முடித்தபோது, "அண்ணா! மத்தியானம் என்ன சமையல் செய்ய?" என்ற கேள்வி குமரனின் தங்கையிடமிருந்து எழுந்தது. குமரன் வஞ்சகமில்லாமல் " பங்கு  இறைச்சி கிடைச்சால் வாங்கிச் சமையேன். அங்க நாங்கள் எப்பிடிச் சமைச்சாலும் இஞ்சத்தை ருசி வாறேல்லை" என்றான். "அப்ப ஒரு ரெண்டாயிரம் ரூபா தாங்கோ; நான் இவரை விட்டு வாங்குவிக்கிறன்!! இவர் நல்ல இறைச்சி பாத்து வாங்குவார். குமரன் செல்வாவைப் பார்க்க செல்வா பேசாமல் பணத்தை எடுத்துக் கொடுத்தாள்,
தங்கையின் கணவர் உந்துருளியை எடுத்துக் கொண்டு வெளிக்கிடவும், செல்வா அங்கே நின்று கொண்டிருந்தவர்களுக்காகக் கொண்டு போன பொருட்களைப் பிரித்துக் கொடுக்கத் தொடங்கினாள். அரை மணித்தியாலத்துக்கிடையில் அங்கே ஒரு சந்தையே கூடியது போல் தோன்றியது. அவரவர் தங்கள் தங்கள் உடுப்புக்களைப் போட்டு அழகு பார்த்தும் வாசனைத்திரவியங்களை முகர்ந்து பார்த்தும் மகிழ்ந்ததுமன்றி கடைக்கண்களால் அடுத்தவர் பொருட்களை அளவெடுத்தும் கொண்டனர். ஒருவாறு அந்தப் பிரச்சனையை முடித்துக் கொண்டு சமையல் முடித்து சாப்பிட மாலை மூன்று மணியாகி விட்டது.
சாப்பாடு முடித்த கையோடு குமரனின் தங்கை "அண்ணா ஒரு ஆயிரம் ரூபா தாங்கோ! இரவுக்கு  நல்ல விளைமீன் வாங்கி  கறியும் வைச்சு புட்டும் அவிப்போம்; சின்னத்தங்கச்சி நீங்கள் இஞ்ச நிற்குமட்டும் நிண்டிட்டுத்தான் போவா. எல்லாரும் விடுமுறையில நிக்கிறது நல்லதாய்ப் போச்சு..........தொடர்ந்தாள். செல்வாவுக்கு அவள் பேசுவதைக் கேட்க விருப்பமின்றி இருந்தது. பணம் கைமாறியதும் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
இப்படியே காலை மத்தியானம் இரவு என்று இவர்கள் பணம் கொடுத்தால் தான் சாப்பாடு என்ற (விடுதி?) நிலை தொடர்ந்தது. இடையில் தங்கையின் மகள் கடை பார்க்கப் போவம் என்று இரண்டு முறை வலம் வந்ததால் மூன்று இலட்சங்கள் அதில் மட்டுமே பறந்தது.
அடுத்து வந்த நாட்களில் இங்கிருந்து போனவர்கள் இடம் பார்க்கவென்று கன்னியாய் வென்நீரூற்றும்  ,மலையகமும் மொத்தமாக பத்தொன்பது பேர் மகிழுந்து ஒன்றை வாடகைக்கு அமர்த்தி சுற்றியதில்  கையிருப்பு கணிசமாகக் குறைந்து பிரான்சிலிருந்து மீண்டும் பணம் எடுப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது அங்கே உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. செல்வாவுக்கு மனம் சோர்ந்திருந்தது. இன்னும் கணவனின் குடும்பத்தோடு நிற்பதால் தொடர்ந்தும் பணம் இறைபட்டுக் கொண்டே இருக்க அதைவிட இன்னும் அம்மாவைப் போய் பார்க்க முடியவில்லையே என்கின்ற கவலை அதிகரித்துக் கொண்டிருந்தது. செல்வாவின் அக்கா இதற்கிடையில் இரண்டு தடவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருந்தா. எதுக்கெடுத்தாலும் அதுக்குக் காசு தாங்கோ அண்ணா, இதுக்குக் காசு தாங்கோ அண்ணி என்று அரித்தெடுத்ததில் அங்கே நிற்கவே விருப்பமின்றி இருந்தது. ஆனாலும் வயது போன காலத்தில் மாமா, மாமியை மனம் நோகச் செய்யக்கூடாது என்பதில் கவனமாக பொறுத்துக் கொண்டாள்.
ஒரு மாதிரி மூன்று கிழமைகளை கடந்து செல்வாவின் பெற்றோர் வீட்டுக்குப் பயணமானார்கள். தாய் வாசலிலேயே வந்து செல்வாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். செல்வா முற்றத்தில் நின்ற மாமரம் இன்னும் நிற்கிறதா என்று பார்த்துக் கொண்டாள். நல்ல வேளை இன்னும் செழிப்பாக நிழல் பரப்பி நின்றது. ஒரு மாதிரி மூன்று கிழமைகளை கடந்து செல்வாவின் பெற்றோர் வீட்டுக்குப் பயணமானார்கள். தாய் வாசலிலேயே வந்து செல்வாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். செல்வா முற்றத்தில் நின்ற மாமரம் இன்னும் நிற்கிறதா என்று பார்த்துக் கொண்டாள். நல்ல வேளை இன்னும் செழிப்பாக நிழல் பரப்பி நின்றது.
அகதிகளாய் அந்தரித்துத் திரிவது கொடுமை! அதிலும் கொடுமை சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாய் அலைவது! அந்தக் கொடுமையை கொஞ்சக் காலம் அங்கே அனுபவித்ததை செல்வா இன்னும் மறக்கவில்லை.ஒரு கிராமமே ஒரு கிணற்றைப் பாவித்ததையும், ஒரே கழிவறையைப் பாவித்து அது நிரம்பி வழிந்ததையும் எப்படி மறக்க முடியும்? அதைவிட அதுவரை  இடம் பெயர்ந்திராத மக்கள், இடம் பெயர்ந்திருந்த மக்களை காட்சிப் பொருட்களாகப் பார்த்ததும் கண் முன்னே வந்து போயிற்று.   இன்னும் எத்தனையோ சொல்ல முடியாத துன்பங்களை எல்லாம் அனுபவித்து களைத்திருந்தனர் எம் மக்கள். அதன் உச்சமும் எச்சமும் இன்னுமே அங்குள்ள பலரை வதைத்துக் கொண்டிருப்பது உலகறிந்த உண்மை. ஆனாலும் சிலர் அவற்றைக் கடந்து அப்பால் நின்று கொண்டு  அவற்றைப் பற்றி சிந்திக்க விருப்பமின்றி மேலான ஒரு வாழ்வை  விரும்புவது ஒரு அசாதாரணமான விடையமாக செல்வாவுக்கும் குமரனுக்கும் பட்டது. ஆனாலும் அங்கே அதைப் பற்றிப் பேசுவது கடினமாகப் பட்டது. ஏனென்றால் பேசப்படும் பொருள் புலம் பெயர் மண்ணிலிருந்து போகின்றவர்களுக்கேதிராகவே "நீங்கள் அங்கை சுகமாக இருந்து விட்டு வாறீங்கள் எல்லாம் கதைப்பீங்கள்" என்று திருப்பி நஞ்சு பூசிய  அம்பாய்த் தாக்குகின்றதை அங்கு நின்ற கொஞ்ச நாட்களுக்குள்ளேயே புரிந்து கொண்டார்கள். இது ஒரு விதமான அடிப்படையில் அவர்களுக்குண்டான உளவியல் தாக்கம். அதைப் புரிய வைக்க சில வேளை நீண்ட காலம் எடுக்கலாம். புலம் பெயர்ந்து வாழும் மக்களின் நிலைமையையும் வாழ்க்கை முறையையும் கொஞ்சம் புரிந்து ஏற்றுக் கொண்டால் நல்லது என்று செல்வா மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
இப்போது செல்வாவின் பெற்றோர் வசிக்கும் இடம் அவள் வெளிநாடு வர முன் இடம் பெயர்ந்திருந்த ஒரு வீடு. அந்த வீட்டு மாமரத்தைப் பற்றியே இவ்வளவு நினைத்தாள் என்றால் தனது சொந்தக் கிராமத்து வீட்டுக்குச் சென்றால் எப்படி இருப்பாள் என்று கற்பனை பண்ணிக் கொள்ளலாம். அம்மா அவளுக்கு விரும்பிய மாதிரி அரைச்ச மீன் குழம்பும் மருமகனுக்கு கோழிக்கறியும் சமைத்திருந்தா. நீண்ட காலத்துக்குப் பிறகு அம்மாவின் சாப்பாடு தொண்டைக்குள் இதமாக இறங்கியது. கமலி அக்கா விழுந்து விழுந்து கவனித்தா. தங்கச்சி பிள்ளைகளுடன் அளவளாவிக் கொண்டிருந்தா. சாப்பிட்ட கையோடு மாமரத்துக்குக் கீழே பாய் ஒன்றை விரித்து படுத்து விட்டாள் செல்வா. குமரன் "அம்மா பிளேன்  எடுத்து மாமரத்துக்கு கீழ படுக்க வந்தவா" என்று பிள்ளைகளுடன் பகிடி பண்ணினான். ஆனால் அவள் எதையுமே காதில் வாங்கிக்  கொள்ளாமல் நித்திரையாகிப் போனாள்அந்த நேர அந்த சுகத்தை இழக்க அவள் தயாராக இல்லை.
அன்று இரவு இரண்டாவது சந்தை கடை விரித்தது. குமரன் வீட்டைப் போலல்லாது இங்கே அவளால் சுதந்திரமாகப் பேச முடிந்தது. மூத்தக்காவின் மகளுக்கு ஒரு சங்கிலியும்  இரண்டு சோடித் தோடுகளும் கொண்டு போய்க் கொடுத்தாள்தங்கச்சியின் மகளுக்கு ஒரு சின்ன அட்டியலும் கடைசியாகப் பிறந்தவனுக்கு ஒரு சோடிக் காப்பும் கொடுத்தாள். கொண்டு போன உடுப்புக்களை அவர்களையே பங்கிட்டுக் கொள்ளச் சொல்லி விட்டாள். எல்லோரும் ஏதோ செய்தார்கள், அவள் எதையுமே கண்டு கொள்ள விரும்பவில்லை. அவளுக்கு அவர்களுடைய மகிழ்ச்சியும் அன்புமே வேண்டும். புலம் பெயர்ந்து வாழும் நிலையில் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலேயும் உறவுகள் சொந்தபந்தங்கள் எவ்வளவு தேவை என்று நினைத்து மருகிப் போவது செல்வா மட்டுமல்ல. எனவே அங்கு நிற்கும் நாட்களை மகிழ்வாக ஆக்கிக் கொள்ள முயற்சித்தாள்.
அந்த வீட்டில் சுகமாக நாட்கள் இருக்கப் போகின்றன என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு கிழமை கழித்து மூத்தக்கா செல்வாவைத் தனியே கூட்டிக் கொண்டு போய் " கேட்கிறேன் எண்டு  குறை நினைக்காத பிள்ளைதங்கச்சிக்கு எத்தினை பவுண் நகை குடுத்தநீ?" என்ற போது நெஞ்சிலே வலி எழுந்தது. அடுத்த நாள் பிள்ளைகளுடன் விளையாடிக்  கொண்டிருந்த போது  சொல்லி வைத்தாற் போல் தங்கைச்சியும்  மகனின் கையிலிருந்த காப்பைப் பிடித்துப் பார்த்து " பலப்பில்லாமல்  இருக்கு. வளைஞ்சு போடும் போல......" என்றபோது நின்ற இடம் வெறுத்துப் போனது செல்வாவுக்கு. அன்பு, பாசம் என்பவற்றின் அளவு கோல் என்ன என்ற கேள்வி  எழுந்தது. எங்களிடமிருந்து இவர்கள் எதிர்பார்ப்பது இவ்வளவுதானா? இதற்குமேல் எதுவுமே இல்லையா? வார்த்தைகள் சொந்த உடன் பிறப்புக்களை எப்படிக் காயப்படுத்தும் என்கின்ற உணர்வு எப்படி இல்லாமல் போனது? தூரங்களும் பிரிவும்  எல்லாவற்றையும் தூரத் துரத்தி வெறும் சொல்லாடல்களும் சுயநலங்களும் எதிர்பார்ப்புக்களும் மட்டுமே மிஞ்சிப் போய் நிற்கின்றதாய் தெரிந்தது.
குமரனும் செல்வாவும் அங்கே உதவி தேவைப் படுபவர்களுக்கென்று ஒரு பகுதியை ஒதுக்கியிருந்தார்கள். அதைக்கூடச் செய்வதில் வீட்டிலுள்ளவர்கள் பொறாமையால் இடைஞ்சல் பண்ணினார்கள். துன்பங்களை அனுபவித்தவர்களே அவற்றை மறந்து அது தேவைப் படுபவர்களுக்கு உதவ தயங்கும் மனநிலைக்கு மாறிப் போனது  ஆச்சரியத்தை உண்டாக்கியது. மனம் நொந்திருந்தும் செய்ய வேண்டிய அனைத்தையும் முகம் கோணாமல் செய்து முடித்திருந்தார்கள். அம்மாவும் அப்பாவும் மட்டுமே அம்மா அப்பாவாகவே இருந்தார்கள்.
மூத்தக்கா மறக்காமல் "பிள்ளை அந்த உறுதி கொண்டு வந்தனியே? நீங்கள் இனி இஞ்ச வந்து இருக்க மாட்டியள் தானே! ஆரோ வந்து அபகரிக்க முதல் அதை எங்கட பிள்ளையளின்ர பேருக்கு மாத்தி விடுங்கோ. இது தான் சந்தர்ப்பம். இனி நீங்கள் போனால் எப்ப வருவீங்களோ  தெரியாது!" என்றபோது அங்கிருந்து துரத்தப் பட்டவர்களின் அவசியம் தெரிந்தது. செல்வாவுக்கு கோபம் கோபமாக வந்தது  நாங்கள் வாறதை எங்கட சொந்தச் சகோதரங்களே விரும்பவில்லை ஆனால் வெள்ளைக்காரனுக்கு எலும்பு உருக்கி நாங்கள் அனுப்புற காசு மட்டும் வேணும்.என்ன சகோதரங்கள்....மனதுக்குள் பொங்கினாள். ஆனால் வாய் பேசாது கேட்டதை எடுத்துக் கொடுத்தாள். இவர்களுக்குத்தான் சொந்தங்கள் வேண்டுமே. கொடுக்கும் போது இனிமேல் இஞ்ச திரும்பி வாறேல்லை என்று எண்ணிக் கொண்டாள்.
திரும்பிய நாளில் அம்மா கட்டிப் பிடித்து நீண்ட நேரம் அழுதா. பிள்ளை ஏலுமெண்டால் அம்மாவை அடுத்த வருஷமும் வந்து பார் என்றா அம்மா. அப்பா பிள்ளைகளைத் தடவிக் கொடுத்தார். செல்வா அம்மாவை விட அழுதாள்( எல்லாவற்றையும் நினைத்து). மோர் மிளகாயும், வடகமும் அம்மா தானே செய்து கொடுத்தா.

 துரத்தப்பட்ட நாட்டிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட நாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். பணம் கட்டப்பட வேண்டிய கடிதங்கள் நிறைந்த கடிதப் பெட்டி வரவேற்றது. போய்வந்ததற்கும் சேர்த்து வேகமாக ஓடத் தொடங்கினார்கள் கணவனும் மனைவியும்.
ஒரு வருடம் வேகமாக ஓடிப் போனது. அம்மா அழுதபடி தன்னை வந்து பார்க்கச் சொன்னது அடிக்கடி செல்வாவின் நித்திரையைக் குழப்பியது. கணவனைக் கடிக்கத் தொடங்கி விட்டாள். ஒரு வழியாக அவன் சம்மதிக்க, அம்மாவுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு "அம்மா நான் வாறன் இந்த வருஷம்" என்றபோது அம்மா, நான் மோர் மிளகாய்க்கு ஆயத்தப் படுத்திறன் என்றா மகிழ்ச்சியோடு. செல்வா மீண்டும் கடைகள் பார்க்கத் தொடங்கி விட்டாள்.