வேந்தன் அவளை ஒரு பயிற்சிப் பட்டறையிலே சந்தித்தான். கண்டவுடன் மின்னலடிக்கவில்லை; இதயம் படபடக்கவுமில்லை. எல்லோரையும் போல ஒரு "வணக்கம்", பிறகு வேலை முடிய "நாளைக்குச் சந்திப்போம்". இப்படித்தான் தொடங்கியது. பிறகு காலப் போக்கில் மெதுவாக எல்லாம் மாறத் தொடங்கியது. அவளின் இமைகள் ஒவ்வொரு தடவையும் மூடித்திறக்கையில் பட்டாம்பூச்சிகளின் சிறகடிப்பை உணர்ந்தான். அவள் சிரிக்கும்போது உலகிலுள்ள அழகனைத்தும் அவளில் மட்டுமே கொட்டிக் கிடந்ததாய் உணர்ந்தான். இவை எல்லாவற்றுக்கும் மேலே அநியாயத்துக்கு மிக நல்லவளாய் இருந்தாள். கோபப்பட, கத்திப்பேச தெரியாத ஒரு புன்னகைப் பதில் நிரந்தரமாய் அவளிடமிருந்தது. இவையெல்லாம் அவன் இரசித்து "காதல்" என்று உணர்ந்து கொண்டபோது கொஞ்சம் பயம் தலைதூக்க மிகப் பெரிய ஒரு காரணம் மலையாய் முன் எழுந்தது.
வேந்தன் யாழ்ப்பாணத்துக் குடும்பத்தை சேர்ந்தவன். இங்கே வீட்டில் அம்மா, அப்பா, அண்ணா, தங்கையோடு வாழ்ந்து வருகின்றான். அவன் வெளிநாட்டுக்கு வந்து சேர்ந்தபோது ஆறு வயதாயிருந்தது. வீட்டிலே சோறு கறிகள், பலகாரங்கள், சினிமாக்கள், பாட்டுக்கள், கோவில்கள் என்று எல்லாவற்றிலேயும் தமிழேயிருந்தது. இந்த நிலையில் வீட்டில் போய் "நான் வேலை செய்யிற இடத்தில கண்ட வெள்ளைக்காரப் பெண்ணைக் காதலிக்கிறன்; அவளைத்தான் கலியாணம் செய்யப் போறான்" எண்டால் எப்படி அதை எடுத்துக் கொள்ளுவார்களோ என்று யோசித்தான்.
ஆனால் இது எல்லாவற்றுக்கும் மேலே அந்தப் பெண் அவனை விரும்புகிறாளா என்று தெரிந்து கொள்ள வேண்டுமே?? இரண்டு நாட்களாக நித்திரையை இழந்து யோசித்து, மூன்றாம் நாள் ஒத்திகை பார்த்து அவளை அணுகியபோது, அவனை விட அவள் அவன் மேல் காதலாயிருந்தாள். அதற்கு அவள் சொன்ன காரணங்கள் பல அதிர வைத்தன.
தமிழருடைய ஒழுக்க வாழ்வு பிடிக்கும் என்றாள், பண்பாடு, கலாச்சாரங்கள் பிடிக்கும் என்றாள், பாரத நாட்டியம் பிடிக்கும் என்றாள். காலங்காலமாக நீடித்திருக்கும் குடும்ப உறவு முறைகள் பிடித்திருக்கிறது என்றாள். இப்படி நிறைய நல்ல மதிப்பீட்டை தமிழினத்தில் வைத்திருந்தாள். வேலையிடத்தில் வேந்தனோடு பழகும் போது அவனையும் பிடித்துப் போக தனது வாழ்க்கையை அவனுடன் தொடர ஆசைப்பட்டாள். இருவருமே நிறையக் கலந்து பேசி முடிவெடுத்து வீட்டாரிடம் தெரிவித்தனர்.
இரண்டு பக்கங்களிலுமிருந்தே கொஞ்சம் அதிர்ச்சி வெளிப்பட்டது. அம்மா "இது உனக்கு ஒத்து வருமா?" என்றாள் . அப்பா, "வெள்ளைக்காரிகள் இந்த நாட்டுக் கிளைமேட் மாதிரி, நல்லா யோசி" என்றார். அவனுக்கு அப்பாமேல் கோபம் வந்தது. இரண்டுபேருமே தங்களுடைய முடிவில் உறுதியாய் இருக்க, அவர்களுடைய எண்ணப்படியே திருமணத்தை முடித்து வைத்தனர்.
கத்தரினை வீட்டாருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. எங்கேயாவது கொண்டாட்டங்களுக்குப் போவது என்றால் அம்மா, தங்கையுடன் புடவை கட்டி பொட்டு வைத்து அவர்களுடன் கலகலப்பாக நடந்து போவாள்.
தனியே ஒரு வீடு வாடகைக்கு எடுத்துக் கொண்டு இனிமையான வாழ்க்கைப் படகு போய்க் கொண்டிருந்தது. படகு என்றாலே ஒரு எதிர்மறையான பயம் எப்போதும் உள்ளே இருக்கும். எப்போது புயல் அடிக்குமோ; எப்போது படகு
ஒட்டையாகுமோ அல்லது எப்போது கவிழுமோ என்ற பயம் அது. ஆனால் இவர்களுடைய பயணம் அலசி ஆராய்ந்து, வேறுபாடுகளை உணர்ந்து, இருவருமே ஏற்றுக்கொண்டு தொடங்கப்பட்டதால், பிகப் பலத்த பாதுகாப்புடன் கட்டப்பட்ட படகினுள் இருப்பதாய் நினைத்துக் கொண்டார்கள்.
வேந்தன் கத்தரினைச் சந்திக்குமுன் வார விடுமுறை நாட்களில் அவனுடைய நண்பர்களுடன் பார்ட்டி வைத்து மகிழ்வதில் அதிக விருப்புக் கொண்டிருந்தவன். அவளைச் சந்தித்த பின் அந்த நட்புக்களை கொஞ்சம் விலத்தியிருந்தான். அவள் தன்னில் வைத்திருக்கும் நம்பிக்கை வீணாகிப் போக விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால் அவனால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. திருமணக் கொண்டாட்டங்களிலும், சாமத்தியச் சடங்குகளிலும், பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் நண்பர்கள் வளைத்தார்கள்.எங்கள் நாட்டில்தான் மிக அழகாகச் சொல்லுவார்களே; அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் "என்ன மனிசிக்கு இப்பிடிப் பயப்பிடுறாய்?", "கலியாணம் செய்த புதுசில எல்லாரும் இப்பிடித்தான்" போன்ற மிகச் சுலபமான (?) வார்த்தைகள் அவனை நகரச் செய்து விட்டன. முதலில் நண்பர்களிடம் சனிக்கிழமைகளில் மட்டும்தான் அதுவும் பத்தரை மணிக்குமேல் அவர்களுடன் இருக்க முடியாது என்று சொன்னான்.அவனுடைய நண்பன் ஒருவன் "பாப்பம் பாப்பம்" என்றான் ஒரு கள்ளச் சிரிப்புடன். "இல்லையடா, கத்தேரின் என்னில மட்டுமில்ல எங்கடை ஆக்களிலையும் மரியாதையும் நம்பிக்கையும் வச்சிருக்கிறாள். நான் அதைக் குழப்ப மாட்டேன்" என்றான்.
சனிக்கிழமைகளில் நேரம் பிந்தி வீட்டுக்கு வருவதற்கு காரணங்களைத் தேடிக் கொண்டான். அவள் இவனுடன் ஒன்றாகச் சாப்பிடுவதற்காக காத்திருப்பாள். இவன் தான் குடித்திருப்பதை மறைப்பதற்காக " பசிக்கேல்லை , நீ சாப்பிட்டிட்டுப் படு" என்று விட்டுப் படுத்து விடுவான். அவள் என்ன சிறுபிள்ளையா விளங்காமலிருக்க? தானும் சாப்பிடாமல் படுத்து விடுவாள். வயிற்றில் வளரும் குழந்தையைக் காட்டி சனிக்கிழமைகளில் தன்னோடு அல்லது அவன் தாய் வீட்டில் இருக்கும்படி செய்ய முயற்சித்தாள். அவனோ அவற்றுக்கிடையால் பாம்பாய் நெளிந்து வளைந்து குறுக்கறுத்து நண்பர்களுடனான நேரத்தையும் நாட்களையும் கூட்டி மெய்ம்மறந்து படமெடுத்தாடத் தொடங்கினான். அவனுடைய தாய்க்கு அவனுடைய லீலைகள் ஏற்கனவே தெரிந்ததுதான்; இருந்தாலும் கலியாணம் செய்த பிறகு அதையெல்லாம் விட்டு விடுவான் என்று நினைத்திருந்தாள். அதுவும் இப்போது சரிவராமலேயே போனது தெரிந்தது.
இனி இருப்பது குழந்தை மட்டும்தான். அது அவனை மாற்றும் என்று நம்பினாள். குழந்தை பிறந்ததுக்கு விடிய விடிய பார்ட்டி வைத்தான் நண்பர்களுக்கு. அவள் மருத்துவமனையில் அவன் வந்து குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சுவான் என்று காத்திருந்தாள். அவனுடைய தாயாருக்குக் கட்டுக் கடங்காத கோபம். அடுத்தநாள் திட்டித் தள்ளி விட்டாள். "டேய்! அந்தப் பிள்ளை உன்னை நம்பி வந்திருக்கு, ஏன்தான் இப்பிடிக் குடிச்சுக் கூத்தடிக்கிறாய்?; எல்லாற்றை மானத்தையும் சேத்து வாங்கிறாய்". அவனுக்கு அவள் கதைத்தது விளங்கிய மாதிரித் தெரியவில்லை. வேறொரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாய்ப் பட்டது. அவனுடையகைகள் நடுங்கிக் கொண்டிருந்ததைக் கவனித்தாள் . மனதுக்குள் தாய்க்குப் பயம் வந்தது.
மருமகள் மருத்துவமனையால் வந்ததும் மெதுவாக "அவனைக் கைக்குள் வைத்திருக்கப் பார்" என்றாள். கத்தேரினே கண் கலங்கினாள். குழந்தைகன்மூடிகிடந்த படியே சிரித்தது. வேந்தனுடைய தாய்க்கு மருமகளைப் பார்க்க கவலையா யும் மகனை நினைக்கப் பயமாகவும் இருந்தது. "வெள்ளைக்காரிகள் இஞ்சத்தை கிளைமேட் மாதிரி" என்ற அப்பா தலையைக் குனிந்து கொண்டிருந்தார்.
வேந்தனோ இவை எதையுமே யோசிக்கும் நிலையிலில்லாமல் மதுவையும் தாண்டி வேறு மோசமான பழக்கங்களுக்கும் அடிமையாகி நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போனான். மிக விரைவில் இவற்றின் பரிசாக வேலை பறி போனது. அவனை ஒரு மருத்துவரிடம் கூட்டிப் போக எடுத்த முயற்சிகளும் கைகொடுக்கவில்லை . தனியே இருந்து தனக்கு வாய்த்த வாழ்வை எண்ணி நொந்து கொண்டிருந்தாள். சிரிப்பு மறைந்து சோகம் நிரந்தரமாகியது. அவளுக்கிருந்த ஆறுதல் குழந்தையும் வேந்தனின் குடும்பத்தினரின் ஆறுதலும். மாமியார் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தபடியால் குழந்தையை அவர்களிடம் விட்டு விட்டு கத்தரின் வேலைக்குப் போகத் தொடங்கி விட்டிருந்தாள். வேந்தனைத் தேடிப் பிடிப்பதே பெரிய வேலையாகி விட்டிருந்தது.
ஒருநாள் அவள் வேலையிடத்தில் இருந்தபோது வேந்தனின் தாயார் அவளை உடனடியாக வரும்படித் தொலைபேசியில் அழைத்தாள். அவனுடைய மோசமான பழக்கங்கள் உடலை தாராளமாகப் பாதித்திருந்தது. இது கத்தரின் கூட எதிர்பார்த்ததுதான். பகல் முழுக்க அவனுடனே கூடவிருந்தாள். ஏன் இப்படி என்னை அலைக்கழிக்கிறாய்? என்று மயக்கத்தில் இருந்த அவனுடன் புலம்பினாள். பரிசோதிக்க வந்த மருத்துவர் அவளைப் பரிதாபமாகப் பார்த்தார். அவன் மயக்கம் தெளியும்போதேல்லாம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ததால் நிரந்தர மயக்கத்திலேயே வைத்திருந்தனர்.
கத்தரின் வேலைக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு முடிந்தவரை அவனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு பக்கத்திலேயே இருந்தாள். இதற்குள் இருந்து மீண்டாவது அவன் முன்புபோல வரமாட்டானா என்ற ஒரு நப்பாசை அவளுக்குள் இருந்தது.
ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி ஒரு நாள் அதிகாலை அவள் அவன் கைகளைப் பிடித்திருக்காத சமயம் அவன் நிரந்தரமாக கண்களை மூடிக் கொண்டான். அவளைப் பார்க்கத் துணிவில்லாமல் போனதோ என்னவோ!
கத்தரின் அவன் மேல் வைத்திருந்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் அவன் கொடுத்த பரிசான கைக் குழந்தையுடன் வாழ்வை நம்பிக்கையுடன் தொடர்கிறாள். இப்போது அவனுடைய நண்பர்கள் யாரும் அவளைத் திரும்பிப் பார்ப்பதில்லை.
புதன், 30 ஜனவரி, 2013
செவ்வாய், 29 ஜனவரி, 2013
திருமணம்
இளவேனில் இளஞ்சிரிப்பில்
இடம்மாறி இதயங்கள்
இதையன்றி வாழ்வில்லை
இசைத்திடுவோம் இனியநாதமென
இணைத்திடும் இனிதாய்
இரு மன திருமணம்
பாசம் பகிர்ந்திருந்தால்
பண்பு குலையாது
எண்ணங்கள் பரிமாறப்பட்டால்
மதித்தல் மேலோங்கும்
அன்பு அரணாய் உயர்ந்தால்
அரவணைத்துக் காத்திருக்கும்
அதுவே குற்றம்காணில்
குறுகிப்போம் நல்லுறவு
பற்றற வழிசமைக்கும்
சொற்கள் சுருள வைக்கும்
தொட்டதெல்லாம் துயராகும்
சுதந்திரம் எதுவெனக் கேட்கும்
கட்டவிழக் காத்திருக்கும்
கட்டல்ல திருமணம்
கண்டுணரும் அன்பின் வேரில்
புரிந்துணர்வின் கிளைகளில்
விட்டுக் கொடுப்பின் இலைகளில்
சந்ததிகள் செழித்தோங்கி
காலத்தில் பதிபடுவது
புரிந்தவருக்கோ கொள்ளையின்பம்
இழந்தவர்க்கோ நரகம்!
வி.அல்விற் .
29.01.2013.
ஞாயிறு, 27 ஜனவரி, 2013
யாருக்கெடுத்துரைப்போம்
காதலனைத் தேடியோடும்
காதலி விழிகளாய்
காத்திருப்புக்கள் நீண்டு
காண்திசை எங்கும்
வெறுமை மிஞ்சிக் கிடக்கிறதே
ஆற்றாமை தீர்க்க
அவதார மேதுமுண்டோ
அலைக்கழிந்து திரியுதோர் இனம் - இதை
யார்க்கெடுத்துரைப்போம்
வீழாத மூத்த குடி வீழ்த்தப்பட்டு
படுகுழிக்குள் தாண்டு போனதே
பார்த்திருக்க அகிலம்
அகலவாய் திறந்தாழி போல்
முழுதாய் விழுங்கியதே
பிணவாடை பல
நாசியுள் நுழையவில்லை
எழும்பிக் கூடுகள்
குத்திக் கிளிக்கவுமில்லை
மூடப்பட்ட குழிகளின் மேல்
பலவண்ணக் கொடிகள் சூழ
ஊர்வலம் நடந்தது
அவரவர் வீட்டில் அதது நலமே-இதை
யாருக்கெடுத்துரைப்போம்
யாரெவர் உணர்ந்து கொள்வர்
ஆண்டாண் டாண்ட பரம்பரை
இன்றதைத் தேடித் திரியுதே
ஏதில்லை எம்மிடம்
என் றிறுமாப்புற்றிருந்த தேசம்
ஏதுமின்றி இன்றே திலியாய்
கையேந்தி நிற்குதே
கட்டுண்டு இருட்டுள்வீழ்ந்து கிடக்குதே - இதை
யாருக்கெடுத்துரைப்போம்
யாரெவர் உணர்ந்து கொள்வர்
கட்டத விழுமோ
கனவுகள் பலிக்குமோ
எட்டப்பர் கூட்டம்
எட்டியே நிற்குமோ
பட்டதை யுணர்ந்து
பாதையொன் றமையுமோ
எட்டிலும் சிதறியோர்
எட்டுவரோ ஒரிணக்கம் - இதை
யாருக்கெடுத்துரைப்போம்
யாரெவர் உணர்ந்து கொள்வர்
வி.அல்விற்.
21.01.2013
ஆற்றுதல் செய்ய வந்திடு நண்பா!
வந்திடு நண்பா வந்திடு நண்பா
வீரனாய் மீண்டு வந்திடு நண்பா!
சாட்டையாய் மாறி வந்திடு நண்பா
ஆற்றுதல் செய்ய வந்திடு நண்பா!
நல்லதுமிங்கே கெட்டதுமிங்கே
மோதிப் பொறி பறக்குதே
ஏறுக்கு மாறாய் எகிறிடும் சொற்கள்
எங்கேயும் எப்போதும்
நானென்ற நீயென்ற கூட்டத்தின் ஓட்டம் - இதை
ஆற்றுதல் செய்ய வந்திடு நண்பா!
வீழ்ந்தே மடிந்தோம்
வெறுத்தே மாய்ந்தோம்
சலித்தே ஓய்ந்தோம்
தொலைந்தே போனோம்
கலைந்தே போனோமே
வேட்டொலியில் சிதறிய மான் கூட்டமாய் - இதை
ஆற்றுதல் செய்ய வந்திடு நண்பா!
இல்லாத வெறுமைக்குள்
உள்ளதைத் தேடி
அலைகின்ற அழுகைக்குள்
உண்மைகள் தடுமாறும்
முனங்கியே கிடக்கும்
பட்டொளியாய்ப் பளபளக்க
பவனி வரும் பொய்மைகள்
பாம்பாய் ஊர்ந்து வரும் - இதை
ஆற்றுதல் செய்ய வந்திடு நண்பா!
விளைச்சலில்லா விதைகளாய்
நீர் காணா பாழ் நிலமாய்
தாகம் தீர்க்கா கடல் நீராய்
மூடி வைத்த தீயாய்
தெரியாதணைந்து
ஒட்டாமல் உறவுகள்
வீணாகிக் கண்முன்னே
காணாமல் போகுமுன் - இதை
ஆற்றுதல் செய்ய வந்திடு நண்பா!
வி.அல்விற்.
19.01.2013
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்!
இருள் கருக்கி ஒளி பாய்ச்சி
பகலெனும் உருக்கொடுத்த
கதிரொளிப்பிறப்பில்
அகம் பொங்கி மலர்ந்திட
இல்லம் பொங்கி மகிழ்வுற
உறவு பொங்கி ஒன்றிணைய
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்.....
கதிரறுத்த எம் காணியில்
கால் வைக்க துணிவில்லை
கோலமிட்ட முற்றம்
பானை வைக்க இடமின்றிப்
பத்தையாய்க் கிடக்கிறது
மாத்தின்ன எறும்புளும்
இருக்கின்றனவோ தெரியவில்லை
இருந்தாலும் எங்களுக்கு....
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்......
பால் தரும் அன்னமக்கா
வந்து எடு என்கிறாள்
சுள்ளி பொறுக்க ஒழுங்கையால்
போய்வர முடியவில்லை
கருக்கலில் தலை காட்ட
வெளியே விருப்பமும் இல்லை
இருந்தாலும் எங்களுக்கு
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்........
உற்சாகம் பொங்கிவர
பாய்ந்தோடிப் போனவர்கள்
உள்ள இடம் தெரியவில்லை
உருப்படியாய் எதுவுமில்லை
விழி எல்லைக் கோட்டில்
இருள் கவிந்து கிடக்கிறது
பொங்கல் பானை அடுப்பேற்ற
பொங்குது துக்க மெனினும்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்....
பெட்டியிலே வாங்கி
சட்டியிலே ஊற்றி
மின் அடுப்பைக் கூட்டி விட்டு
பொங்கி வரும் நேரமதில்
ஓடி வாங்கோ இஞ்ச
பாருங்கோ பொங்கிறதை
வழி பிறக்கும் எங்களுக்கினி
என குதூகலிக்கும் எமக்கு
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்...........
புது நெல்லுக் கையிலில்லை
கரும்பு வெட்ட ஆளில்லை
ஈரவிறகும் எரியுதில்லை
என்றிருக்க முடியவில்லை
காலம் கொண்ட கனவோடு
அடுப்பேற்ற முனைகிறோம்
தமிழ் மட்டும் தனியாய்த்
துணிவாய் நிற்கிறது!
அது பொங்கி வழியும்
அகிலமெலாம் பரவும்
நம்பிக்கையாய் கூவுவோம்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்!
வி.அல்விற்.
11.01.2013.
தலைமுறை
திருநாவுக்கரசுக்கு
போவது என்று முடிவெடுத்தபின்
மனம் லேசாகியது.
கடந்த
இரண்டு கிழமைகளாக இடுப்பு
முறிந்தாற்போல் வேலை.
வேலை
என்றால் அப்படி ஒரு வேலை.
ஊடறுத்தோடும்
பாரிஸ் நதிக்கரையோரத்தின்
செயின்ட் மிசேல் பகுதியில்
உள்ள ஒரு உணவகத்தில் சாண்ட்விச்
செய்வதும்,
பிஸ்ஸா
வேக வைப்பதும் அவனுடைய வேலை.
தான்
இல்லாவிட்டால் முதலாளி
கடையை
இழுத்து மூடி விடுவான் போன்ற
ஒரு பதட்டத்தில் எப்போதும்
பாய்ந்து பாய்ந்து வேலை
செய்வான்.
அவசரமாக
நின்ற நிலையில் சாப்பிட்டு
முடித்து திரும்பவும் வேலைக்குப்
பறப்பவர்களுக்கும்,
மாணவர்களுக்கும்
பெரிய வரப்பிரசாதம் இது போன்ற
சிறு கடைகள்.
மறுபுறமாகப்
பார்த்தால்,
எப்போதும்
அலைமோதும் கூட்டத்துடன்
இருக்கும் இந்த இடங்கள்
திருநாவுக்கரசுவின் முதலாளி
போன்றவர்களுக்குக் கிடைத்த
பாக்கியம்.
விற்பனைக்கு
ஒரு ஆளையும் குசினியில்
திருநாவுக்கரசுவையும் தனியாக
வைத்து கடையை அமோகமாக நடத்திக்
கொண்டிருந்தான் முதலாளி.
ஸ்ரீலங்கன்
ஆக்கள்
நல்லா
வேலை செய்வினம்,
ஒரு
சிக்கலும் தர மாட்டினம்
என்கின்ற போடப்படாத பதக்கங்களை
மட்டுமே தக்க வைக்க உழைக்கும்
கூட்டத்தில் ஒருவனாக அவனும்
ஓடிக் கொண்டிருந்தான்.
லீவு
கேட்கும் நாட்களில் மட்டும்
இடைக்கிடை முறுகல் நிலை வரப்
பார்க்கும் அவனுக்கு
முதலாளிக்கும்.
பிறகு
இரண்டுபேரும் இருவருக்கும்
பாதிப்பில்லாத ஒரு சமரச
நிலைக்கு வருவார்கள்.
முதலாளிக்கு
அவன் தேவை அவனுக்கு முதலாளி
தேவை.
இருந்தாலும்
ஒரு பயத்துடனேயே எப்போதும்
வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
உலகப்
பொருளாதாரச் சிக்கல்களால்
எல்லா நாடுகளுமே ஆட்டம் கண்டு
கொண்டிருக்கும் நிலையில்,
இருக்கிற
வேலையை இறுகப் பற்றிக்
கொண்டிருக்க வேண்டிய பயமிருக்கிறது
எல்லோரிடமும்.
திருநாவுக்கரசுவின்
அண்ணன் முகுந்தன் பரிசின்
எல்லைப்புற நகர் ஒன்றில்
வசித்து வருகின்றான்.திருநாவுக்கரசுவை
முகுந்தன் தான் இங்கே எடுத்து
விட்டிருந்தான்.
வந்து
சேர்ந்ததும் அவர்களுடன்
சேர்ந்து கொஞ்சக் காலம்
இருந்தான்.
அண்ணன்
தம்பியில் நல்ல பாசமாகத்தான்
இருந்தான்;
அண்ணிதான்
கொஞ்சம் அகங்காரமாய் இருந்தா.
அவர்களுடைய
வீட்டை நினைத்தால் இப்போதும்
இவனுக்கு ஆசையாக இருக்கும்.
ஊரில்
இருக்குமாப்போல் தாராளமான
காணியோடு சேர்ந்த வீடு.
முற்றத்தில்
ரோஜாப்பூ செடிகள் இருபுறமும்
மஞ்சளும் செஞ்சிவப்புமாய்
பூத்து வரவேற்கும்.
படியேறியவுடன்
ஒரு நீண்ட வராந்தா;
அதன்
இடதுபுறம் ஒரு பெரிய வரவேற்பறை.
சுவர்கள்
வெண்ணிறம் பூசப்பட்டு இருக்கும்.
ஆறு
மின்குமிழ்கள் பொருத்தக்கூடிய
தொங்கு விளக்கு வரவேற்பறைக்கு
மெருகூட்டும்.
வெள்ளை
நிறத்திலான யன்னல் மறைப்புக்களுடனும்
அதே நிறத்திலேயான இருக்கைகளுடனும்
அதிகமில்லாத அளவான ஆனால்
பெறுமதி மிக்க அலங்காரப்
பொருட்களுடனும் வரவேற்பறை
ஜொலிக்கும்.
கைகளால்
எங்காவது தொட்டுத் தடவிப்
பார்த்தாலும் ஒரு தூசு
கிடைக்காது.
அப்படி
வீட்டை வைத்திருந்தா அண்ணி.
வரவேற்பறையை
தொடர்ந்து பெரிய மரத்தினாலான
மேசையுடனும் சுற்றி வர வைத்து
அதற்கேற்ற இருக்கைகளுடனும்
கூடிய பளிச்சென்ற உணவருந்தும்
பகுதி.
அவன்
வந்த ஆரம்பகாலங்களில்,
சாப்பிட
இருக்கும்போது மேசையில்
தன்னுடைய முகத்தைப் பார்த்து
மேசையின் தரத்தை எண்ணி
வியந்திருக்கிறான்.
வராந்தாவின்
வலது பக்கம் சமையலறை அமைத்திருந்தது.
அப்படியே
வராந்தாவைப் பின் தொடர்ந்தால்
ஒரு குளியலறை இருக்கும்.
அதனிடையே
முதலாம் மாடிக்கான படிக்கட்டுக்கள்
அமைந்திருக்கும்.
மாடியிலே
இரண்டு அறைகளும்,
ஒரு
அலுவலக அறையும்,
குளியலறையும்
இரண்டு பக்கங்களிலும்
அமைந்திருக்கும்.
ஒவ்வொரு
அறையும் வெவ்வேறு வகையில்
அலங்கரிக்கப் பட்டு கண்களைப்
பறிக்கும்.
வீடு
மட்டுமில்லை அண்ணி வெளிக்கிட்டு
வெளியே போனால்கூட கடந்து
போகிறவர்கள் ஒருதரம் திரும்பிப்
பார்த்துவிட்டுத்தான்
போவார்கள்.
அப்படி
அசத்தலாக இருப்பா அண்ணி.
வீடு
மட்டுமில்லை அண்ணி வெளிக்கிட்டு
வெளியே போனால்கூட கடந்து
போகிறவர்கள் ஒருதரம் திரும்பிப்
பார்த்துவிட்டுத்தான்
போவார்கள்.
அப்படி
அசத்தலாக இருப்பா அண்ணி.
நல்ல
வசதியான குடும்பத்தில் ஒரு
குறையுமில்லாமல் வளர்ந்து
வந்ததால் கர்வம் கூடவேயிருந்தது.
திருநாவுக்கரசு
பிரான்சுக்கு வந்தபோது
அவனுக்கு இருபத்தெட்டு
வயதாயிருந்தது.
மொழி
படிக்கக் கொஞ்சக் காலம்
போனான்.
பிறகு
அப்பிடியே தொழிற் கற்கைக்கூடாக
உணவகம் ஒன்றில் வேலை செய்யத்
தொடங்கினான்.
படிக்கும்
பயிற்சிக் காலத்தில் படித்த
ஒரு பெண்ணின்மேல் (தமிழ்ப்பெண்தான்)
காதல்
வர அதை வீட்டில் சொல்ல அண்ணி
துள்ளிக் குதித்தா.
அப்போதுதான்
தெரியும் அவனுக்கு அண்ணி
தனது சொந்தக்காரப் பிள்ளை
ஒன்றுக்கு அவனைக் கலியாணம்
செய்து வைக்க நினைத்துக்
கொண்டிருந்தவ என்று.
அவனுக்கு
தன்னை நம்பிய பிள்ளையைக் கை
விட விருப்பமில்லை.
இனிமேல்
அண்ணனின் வீட்டில் இருப்பது
சாத்தியமில்லை என்றும்
உணர்ந்து கொண்டான்.
அந்தப்
பிள்ளையின் பெற்றோருடைய
சம்மதத்தோடு திருமணத்தை
முடித்து தனியே போய் விட்டான்.
அன்றிலிருந்து
இன்றுவரை அண்ணன் குடும்பத்தாருடன்
எந்தப் பேச்சுவார்த்தையுமில்லை.
இருபது
வருடங்களாகி விட்டது.
அண்ணனை
நினைக்கும்போது கவலையாக
இருக்கும்.
அவர்
நல்லவர்தான்.
குடும்பம்
ஒழுங்காகப் போக வேணுமென்றால்
யாராவது ஒருவர் விட்டுக்
கொடுத்துப் போகத்தானே வேணும்.
இப்ப
திடீரென்று இரண்டு கிழமைக்கு
முதல் ஒரு தொலைபேசி அழைப்பு
வீட்டுக்கு வந்ததும் கொஞ்சம்
அதிசயித்துப் போனான்
திருநாவுக்கரசு.
அண்ணன்தான்
எடுத்திருந்தார்.
குரல்
கொஞ்சம் மாறிப் போயிருந்தது.
செரினுக்கு
கலியாணம் பேசி முடிச்சிருக்கிறம்
வார மாதம் பத்தாம் திகதி
கலியாணம் நீ குடும்பத்தோட
வா! என்றார்
அண்ணன்.
ஆர்
செரின் என்று கேட்க வாயெடுத்து
பிறகு கேள்வியை மாத்தி மூத்தவளோ
என்று கேட்டான்.
"ஓம்"
என்று
பதில் வந்தது.
பிறகு
என்ன கதைக்கிறது என்று
தெரியவில்லை.
அவர்
என்ன நினைத்தாரோ "டெலிபோனில
சொன்னாச் சரியோ அல்லது நேர்ல
வந்து சொல்ல வேணுமோ"
என்றார்.
அவன்
திடுக்கிட்டு "இல்லை
இல்லை ,
நீங்கள்
விலாசத்தை அனுப்புங்கோ"
என்றான்
. தாலிகட்டு
பத்து மணிக்கு,
நீ
அதுக்கு முதல் வீட்டை வா
எல்லாரும் சேர்ந்து போகலாம்;
அப்ப
சரி நான் வைக்கிறன்"
வைத்து
விட்டார் அண்ணன்.
அவர்
கதைத்த நாளில இருந்து அவனுக்கு
ஒரே யோசனை.
என்ன
நடந்தது இவையளுக்கு?
இவ்வளவு
காலமும் இல்லாமல் இப்ப என்னெண்டு
திடீரென்று,
அதுவும்
கலியாணத்துக்குக் கூப்பிடுகினம்.
அவனுடைய
மனைவிக்கு இது பெரிய சிக்கலாகத்
தெரியவில்லை.
அவை
எங்களை மதிச்சுக் கூப்பிட்டால்
நாங்களும் போய் எங்கடை கடமையைச்
செய்து போட்டு வருவோம்;
இதுக்கு
ஏன் மண்டையைப் பிக்கிறீங்கள்
எண்டு தெரியேல்லை என்று
சிரித்தாள்.
"அண்ணன்
சிலவேளை அண்ணிக்குத் தெரியாமல்
கூப்பிடுறாரோ?"
இருக்காதப்பா,
அவையின்ர
பிள்ளையின்ர வீட்டு கலியாணத்தில
அவையே குழப்பம் வரச் செய்வினமே?
இப்பிடி
மாறி மாறி யோசிச்சு கடைசியில
போய்ப் பாக்கிறது என்று
முடிவாயிற்று.
ஒரு
மாதிரி லீவும் எடுத்து போகிற
நாள் வந்தபோது கொஞ்சம்
மனதுக்குள் குறுகுறுத்தது.
இருபது
வருசத்துக்குப் பிறகு அண்ணன்
வீட்டு உறவுகளை எதிர்கொள்ளும்
நிலை சங்கடமாகத் தோன்றியது.
பிள்ளைகள்
பெரியவர்களாகி விட்டதால்
அவர்களுடனான அறிமுகம் எப்படி
இருக்கும் என்று நினைக்க
முடியவில்லை.
எல்லாவற்றுக்கும்
மேலே அண்ணியை எதிர்கொள்வது
மிகக் கடினமாகத் தெரிந்தது.
மனைவியிடம்
நேற்றிரவே சொல்லி விட்டான்
"எங்கடை
அண்ணியைப் பற்றி உனக்கு
வடிவாத் தெரியும்,
அதுக்கேற்றமாதிரி
வெளிக்கிட்டுக் கொண்டு வா"
என்று.
வீட்டை
அடைந்து உள்ளே போனபோது,
அண்ணன்
வாகனத்தில் பொருட்கள் ஏற்றிக்
கொண்டிருந்தார்.
இவனை
மனைவி பிள்ளைகளுடன் கண்டதும்
அவருடைய முகம் மகிழ்ச்சிக்கு
மாறியது.
வேலையை
விட்டு விட்டு வாங்கோ உள்ள
வாங்கோ என்று அழைத்தார்.
வரவேற்பறை
முன்பு போலவே அழகாயிருந்தது.
அண்ணி
உள்ளேயிருந்து வந்து வாங்கோ
உள்ள என்றா.
அவனுக்கு
அண்ணியைப் பார்க்க இது அண்ணிதானா
என்று அதிசயமாக இருந்தது.
ஆள்
மெலிந்து முன்பு குரலிலிருந்த
கர்வம் காணாமல் போயிருந்தது.
காலம்
எவ்வளவு மாயங்கள் செய்கிறது?
செரின்
மேலே யிருந்து அரைகுறை தலைமுடி
அலங்காரத்துடன் ஓடி வந்து
சித்தப்பா வாங்கோ என்று
அவனுடைய கைகளைப் பிடித்துக்
கொண்டாள்.
சித்தி
எப்பிடி இருக்கிறீங்கள்
என்று அவனுடைய மனைவியையும்
இழுத்து,
ஏன்
நிக்கிறீங்கள் இருங்கோ என்று
அவர்களை இருத்தினாள்.
அண்ணி
அவளைப் பார்த்து பிள்ளை நேரம்
போகுது நான் அவையளைக் கவனிக்கிறான்
நீ போய் வெளிக்கிட்டு முடி
என்றாள்.
"ஓமம்மா!
சித்தப்பா
சித்திக்கு ஏதாவது சாப்பிடக்
குடுங்கோ!
நான்
இவை பிள்ளைகளை என்னோட கூட்டிக்
கொண்டு போறன்,
என்னோட
அவை கதைச்சுக் கொண்டிருப்பினம்"
சொல்லி
விட்டு அவர்களைக் கூட்டிக்
கொண்டு மேலே போய் விட்டாள்.
திருநாவுக்கரசுவுக்கு
கண்ணீர் வருமாப்போல் இருந்தது.
செரின்
ஐந்து வயதாயிருந்தபோது அவன்
இந்த வீட்டை விட்டுப்
போயிருந்தான்.
அதற்குப்
பிறகு தன் வாழ்க்கையுண்டு
என்று இருந்து விட்டான்.
அந்தக்
குழந்தை இன்று வளர்ந்து தான்
கூட இருந்து வளர்த்த குழந்தை
போல சித்தப்பா என்று அரவணைக்கிறதே!
இது
எப்படி?
கொஞ்சக்
காலமாக செரின்தான் தன்ர
கலியாணத்துக்கு எல்லாச்
சொந்தங்களையும் கூப்பிட்டு
செய்ய வேணும் எண்டு கதைச்சுக்
கொண்டிருக்கிறவள்.
நீ
எங்களோடை இல்லாட்டாலும் அவள்
அடிக்கடி சொந்தங்களைப் பற்றிக்
கேட்டுத் தெரிஞ்சு கொண்டிருக்கிறவள்.
சும்மா
சின்னச் சின்னப் பிரச்சனைகளுக்கெல்லாம்
வருசக் கணக்கில எப்பிடிக்
கதைக்காமல் இருக்கிறனீங்கள்
எண்டு எங்களோட சண்டை பிடிப்பாள்.
கொஞ்சக்
காலமாக செரின்தான் தன்ர
கலியாணத்துக்கு எல்லாச்
சொந்தங்களையும் கூப்பிட்டு
செய்ய வேணும் எண்டு கதைச்சுக்
கொண்டிருக்கிறவள்.
நீ
எங்களோடை இல்லாட்டாலும் அவள்
அடிக்கடி சொந்தங்களைப் பற்றிக்
கேட்டுத் தெரிஞ்சு கொண்டிருக்கிறவள்.
சும்மா
சின்னச் சின்னப் பிரச்சனைகளுக்கெல்லாம்
வருசக் கணக்கில எப்பிடிக்
கதைக்காமல் இருக்கிறனீங்கள்
எண்டு எங்களோட சண்டை பிடிப்பாள்.
"இந்தப்
பிள்ளையளுக்கு இருக்கிற
யோசனை பெரியாக்கள் எங்களுக்கு
இருக்கிறேல்லை"
என்றார்
அண்ணன்.
திருநாவுக்கரசு
கதைக்க வழியின்றி தலை
குனிந்திருந்தான்.
எங்கடை
தலைமுறை எங்களை வழிநடத்தும்
என்று தனக்குள் நினைத்துக்
கொண்டான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)