வெள்ளி, 28 செப்டம்பர், 2012

தங்கமக்கா!!

மணி அண்ணன் பிரான்சுக்கு வந்ததிலிருந்து அவரது பொழுதுபோக்கே வேலை செய்வதுதான். ஓடி ஓடி காலை, மதியம், இரவு என்று கிடைத்த நேரம் எல்லாம் பகுதி  பகுதியாய் வேலை செய்துகொண்டேயிருப்பார். இடையில் வக்கன்ஸ் எடுப்பார்; ஆனால் அந்த நேரத்திலேயும் வேரை யாராவது வக்கன்ஸ் எடுத்த ஆட்களின் வேலையை செய்து கொடுப்பார். இப்பிடியே ஓடிக் கொண்டேயிருப்பார். ஆனால்  ஞாயிற்றுக் கிழமை மட்டும் வேலை செய்ய மாட்டார். அந்த நாள் அவருக்கு நல்ல பங்கு இறைச்சி வாங்கி மனைவி தங்கம்  சமைத்துக் கொடுக்க ஒரு பிடி பிடித்து விட்டு ஏப்பம் விட்டுப் பிறகு தண்ணிப் பாட்டியோட முடிக்க வேண்டும். இது தவிர  ஒரு நாளைக்கு ஒரு பக்கெற் ஊதுபத்தி. அவருக்கு சாப்பாட்டில் ஒரு குறையும் இருக்கக் கூடாது; மாமிச வகையில் என்னவெல்லாம் எப்படியெல்லாம் வகை வகையாகச் செய்து சாப்பிட  முடியுமோ அவ்வளவும் தங்கம் பார்த்துப் பார்த்துச் செய்து கொடுப்பாள். கஷ்டப்பட்டு உழைக்கிறவர் நல்லாச் சாப்பிட வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளுவாள்.
தங்கம்  எப்போதுமே வேலைக்குப் போனதில்லை; ஏன் வெளி வேலைகள் எதுவுமே செய்யத் தெரியாது என்பதுதான் உண்மை. இரண்டு பிள்ளைகள் ; மூத்தவனுக்குப் பன்னிரண்டு வயது, மகளுக்கு எட்டு வயது. மணி அண்ணன் வேலை முடிந்து வரும் போது வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவார். வீட்டிலே தங்கத்துக்கு சமைப்பதும் பிள்ளைகளைக் கவனிப்பதும் கூட்டித் துடைப்பதும் தான் பொழுதுபோக்கு. யாராவது தெரிந்தவர்கள் ஏன் மனிசியை வேலைக்கு அனுப்பலாம்தானே என்று கேட்டால், "மனிசிமாரை வேலைக்கு அனுப்புறவங்கள் எல்லாம் ஆம்பிளையளே.... என்று அவரது விளக்கம் நீடிக்கும். கேட்பவர்களுக்கு ஏன்தான் வாயைத் திறந்தோம் என்று இருக்கும். இவ்வளவுதான் மணி அண்ணனின் வாழ்க்கை.
 தபால் நிலையம் தெரியாது, வங்கி தெரியாது, வங்கி அட்டை பாவிக்கத் தெரியாது, தனியே கடைக்குப் போகத் தெரியாது, வாகனம் ஓட்டத் தெரியாது,பிள்ளைகளின் ஆசிரியர்களைத் தெரியாது.  இப்படி நிறையத் தெரியாதவற்றோடு தங்கம்  ஒரு குழந்தையின் வாழ்க்கையை  வாழ்ந்து கொண்டிருந்தாள். அதுவே பழக்கப் பட்டு இலகுவாயும் போனது அவளுக்கு.
காலம் யாருக்காகவும் காத்து நிற்பதில்லைதானே. ஓடிய வேகத்தில் மணி அண்ணனுக்கு இப்போதெல்லாம் மூச்சிரைக்கத் தொடங்கியிருந்தது. "டொக்டரிட்டைப் போயிட்டு வாங்கோவன்" என்றாள் தங்கம் . "இல்லை இது இந்தக் கிளைமேற்றுக்கு; ஒரு நல்ல சூப்  போட்டுக் குடிச்சால் சரியாயிடும்; நாளைக்கு நான் வேலையால வரேக்க எல்லாம் வாங்கிக் கொண்டு வாறன் சூப்புக்கு" என்றார் மணி அண்ணன். ஆனால் அவருடைய அந்த சூப்பு  வைத்தியம் சரிப்படாமல் போகவே அவருக்கு லேசாக யோசனை தட்டியது. அத்தோடு அன்றிரவு லேசாக நெஞ்ச நோவும் தொடங்க "நாளைக்கு ஒருக்கா டொக்டரிட்டைப் போகத்தான் வேணும்" என்று சொல்லி படுத்தவர் அடுத்தநாள் காலையில் எழுந்திருக்கவே இல்லை.
இருக்கும் வரைக்கும் எதையுமே  மனைவியோடு பகிர்ந்தும் கொள்ளாமல், செய்யவும் விடாமல் தனியாக தானே எல்லாவற்றையும் செய்து முடித்துக் கண்களை மூடிய போது தங்கத்துக்கு கண்களைக் கட்டிக் காட்டில் விட்டால் போல் இருந்தது. கணவனை இழந்ததை  நினைத்து அவள் அழுததை விட, தான் இனி என்ன செய்யப் போகிறேன் என்பதை நினைத்தே கதறி அழுதாள் என்பதுவே உண்மை. சுற்றங்கள் எத்தனை நாட்களுக்கு சுற்றி நிற்பார் இங்கே? அவரவர்களுக்கு அவரவர் வேலை. உதவி செய்ய முடிந்தவற்றுக்கு உதவி செய்யலாம். மிகுதியை அவளே தானே செய்ய வேண்டும். உதவி செய்ய வந்தவர்கள் கூட மணி அண்ணனைத் திட்டிக் கொண்டே செய்து கொடுத்தார்கள். அது அவளுக்கு இன்னும் மன வேதனையைக் கொடுத்தது.
கணவனின் இழப்பிலிருந்து மீழ முடியாமலேயே இருந்த அந்த நாட்களில் ஒரு நாள் ஒரு கடிதம் வந்திருந்தது. அதை எடுத்து மகனிடம் கொடுத்து வாசித்து விளங்கப் படுத்தச் சொல்லிக் கேட்டாள். நாங்கள் வீட்டு வரி கட்ட வேண்டும் எண்டு எழுதியிருக்கு என்று சொன்னான். விலாசத்தை எழுதி எடுத்துக் கொண்டு அடுத்த நாள் காலையில் தனியே வெளியே சென்று பேருந்து நிலையத்தை அடைவதற்குள் அவளுக்கு தலை சுற்றுமாப்  போல் இருந்தது. கணவன் இருந்த போது வீட்டு வாசலில் காருக்குள் ஏறினால் போக வேண்டிய இடத்தில் போய் இறங்குவதும் திரும்ப ஏறி வீட்டு  வாசலில் வந்து இறங்குவதுமாய் இருந்தது அவளது வாழ்க்கை.  அவளது வாழ்க்கையில்  எப்போதுமே பேருந்திலோ  தொடருந்திலோ  ஏறியதில்லை. இந்த நிலையில் பேருந்து தரிப்பு இடத்துக்கு வந்து நின்றவளுக்கு அடுத்த பிரச்சனை வந்தது. மற்ற ஆக்களை உதவிக்கு கூப்பிடக் கூடாது என்று நினைத்து வந்தவளுக்கு எந்த இலக்க பேருந்து எடுப்பது என்றே தெரியவில்லை. பேருந்துகள் ஒன்றுக்குப் பின்னால் அவளைத் தாண்டிப் ஒன்று  போய்க் கொண்டிருந்தன. தன்னிரக்கம் பெருக அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவளைக் கடந்து சென்றவர்கள் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டுச் சென்றார்கள். யாரிடமாவது கேட்கலாம் என்றால் என்ன மொழியில் கேட்பது? சுற்றிப் பார்த்தாள் எல்லோருமே அவசர அவசரமாக தங்கள் தங்கள் வேலையாகப் போய்க் கொண்டிருந்தார்கள். தான் மட்டுமே வீட்டுக்குள்ளே முடமாய் இருந்தது முதல் தடவையாக நெருப்பாய் சுட்டது. அழுகை ஆத்திரமாகி தன்னையே திட்டிக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கடைசியாக, கணவரின் அக்காவின் மகனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவன் கத்தினான் "எந்த பஸ் எடுக்கிறதெண்டு  தெரியாமல் ஏன் வெளியில போனனீங்கள்? இப்ப நீங்கள் வீட்டை போங்கோ நான் அடுத்த கிழமை வந்து கூட்டிக் கொண்டு போறன்".
இயலாமையால் வார்த்தைகள் வெளிவர மறுக்க தொடர்பைத் துண்டித்து விட்டு திரும்பி வீட்டை  நோக்கி நடக்கத் தொடங்கியவளுக்கு தலைலேசாக சுற்றுமாப்போல் தோன்ற அருகிலிருந்த கம்பத்தை பற்றிக் கொள்ள, கைகள் வழுக்கிக் கொண்டு தான் கீழே சரிவதை உணரும்போது, யாரோ சத்தமிட்டுக் கொண்டு அவளருகில் ஓடி வரும் ஒலி மிகத் தொலைவில் கேட்டது.

வியாழன், 27 செப்டம்பர், 2012

அருட் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்




"மண்ணுலகில் தீ மூட்டவே வந்தேன். அது இப்போதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்"
லூக்கா 12 :49 . 




ஓடு மீன் ஓடி உறு மீன் வருமளவும் வாடி
ஒற்றைக் காலில் நின்ற கொக்காய் மக்கள்
ஒருமித்து  வரவேற்ற ஒப்பற்ற செல்வம் நீர்
ஒளியாய் வந்த தூதன் நீர்

ஒரு சில ஆண்டுகளே!! நீளாதொவென
ஓடியே போயிற்று
ஒன்றா இரண்டா என்  நினைவுச் சுழலில்
ஓராயிரம் கதைகள் ஆழக் கிடக்கின்றன

ஒடுங்கிய சேவைகளுக்கு
ஓர் அகலப் பாதை போட்டவர் நீர்
ஓர் இளம் தலைமுறைக்கு
ஒப்பற்ற மாதிரி  நீர்

சிந்தனைச் சிதறல்களுக்கு
சிறப்பு வடிவம் கொடுத்தவர் நீர்
சிற்பியாய் எமைப் பார்த்துச் 
செதுக்கி வடித்தவர் நீர்

செல்லும் முன் புத்தாலயம்
செம்மையாய் எழுப்பியவர் நீர்
செழுமையாய் உறைந்து விட்டீர்
செல்ல முடியாமல் பூட்டி வைத்துள்ளோம்

செயற்கரிய சேவைக்காய் நாற்பானாண்டுகள்
சென்றோடிய இந்நாளில்
செய்பணி செவ்வனே சிறந்தோங்க
செயல் புரிய நலமளிக்க

புனிதர் அருள் வேண்டி வாழ்த்தி நிற்கின்றேன்

வாழ்க! நலமுடன் நீடூழி நீர் வாழ்க!
 

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

தளம்பல்.

கல்யாணிக்குக் கலியாணம் ஆனதே ஒரு தனிக் கதை. சொந்த மாமி மகன் அத்தான் அனந்தன் இவளைக் கண்டால் சுத்திச் சுத்தி வருவான். சின்ன வயதிலே காற்றென்ன மழையென்ன குளிரென்ன வெயிலென்ன இவளுக்கு என்ன தேவை என்றாலும் தேடிக் கொண்டு வந்து முன்னால் நிற்பான். அவளும் என்னவென்றாலும் அத்தான் ஆனந்தனிடம்தான் கேட்பாள் கிடைக்குமென்று தெரிந்து. அவளுக்காகப் பள்ளிக்கூடத்தில் சண்டை போட்டு, அடி வாங்கி, சின்ன வயதுச் சிநேகிதர்களைப் பிரிந்து என்று இப்படிப் பல; அதற்குள் அம்மாவிடம் "கண்டறியாத ஒரு மச்சாள்" என்ற திட்டும் அடக்கம். கொஞ்சம் வளர கல்யாணி வீட்டுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அடைபட்டுக் கொண்டாள். பொம்பிளைப் பிள்ளை அடக்கம் வேணுமாம்.ஆனந்தனுக்கு சரியான ஆத்திரம்; வீட்டுக்குப் போனால் மாமியும் "தம்பி பெம்பிளைப் பிள்ளை இருக்கிற வீட்டுக்கு அடிக்கடி வராத, அயலட்டையிலை வேற மாதிரிக் கதைக்கப் பாப்பினம்" என்றா. அவனுக்கு அதைக் கேக்க இன்னும் ஆத்திரம். அம்மாவிடம் முறையிட்டான். அம்மா " கல்யாணி உனக்குத் தான், ஆனால் நீ அவளைத் தேடாமல் இப்ப படிக்கிற வழியைப் பார்" என்றா. அவனுக்கு வெட்கமாகப் போய் விட்டது.
உயர்தரம் படிக்கும் போது அம்மாவிடம் காசு வாங்கி நல்லூர் திருவிழாவில் ஐஸ்  கிறீமும் காப்புகளும்  வாங்கி தோழி மூலம் கொடுத்தனுப்ப காப்புகளைப் போட்டுக் கொண்டு  ஐஸ்கிறீமை வழிய வழிய சாப்பிட்ட படியே கைகளை லேசாக குலுக்கிக் காட்டியபடியே அவனைத் தள்ளுமாற்போல் கிட்ட வந்து போனாள். அவனுக்கு அன்றிரவு நித்திரை பறந்து போனது; வீடு முழுக்க காப்புச் சத்தம் கேட்டது.
காலம் பறந்தோட கல்யாணி கண்ணும் கருத்துமாய்ப்  படித்து பல்கலைக் கழகம் ஏற, கனவு கண்டு கொண்டிருந்த ஆனந்தன் கோட்டை விட்டு விட்டு வீட்டில் வாங்கிக் கட்டிக் கொண்டான். கல்யாணி சொன்னாள் "பரவாயில்லை அடுத்த முறை ட்ரை பண்ணுங்கோ" என்று. அவனுக்கு ரோசம் வந்தது. ஆனாலும் கல்யாணி சொன்னதற்காக பரீட்சை எடுத்தான்.ஆனால் அடுத்த முறையும் அதே நிலைதான். அம்மாவும் அப்பாவும் அவனுக்குப் புத்திமதி சொல்லி லண்டனில் உள்ள சித்தப்பாவிடம் அவனை அனுப்பி விட்டார்கள். அவனுக்கும் முடியாது என்று சொல்ல முடியாத நிலை; அவள் கம்பசுக்குப் போக அவன் வீட்டிலே இருக்க அவமானமாக இருந்தது. லண்டனுக்கு வந்து சேர்ந்து விட்டான்.
கல்யாணியிடமிருந்து ஆரம்பத்தில் கடிதங்கள் வந்தன. பிறகு குறையத் தொடங்கியது. அம்மாவிடம் கேட்டு எழுதினான். அம்மா நாசூக்காக சில விடையங்களைத் தவிர்த்தது போலத் தோன்றியது. இவன் வற்புறுத்திக் கேட்டதில் கல்யாணி அவளோடு படிக்கும் ஒரு பெடியனோடு திரியிறாள், அவனைத்தான் கட்டுவாளாம்  எண்டு கதைக்கினம் என்றும் சொல்லி முடித்தாள். அவன் இதை உறுதிப் படுத்த கல்யாணிக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றுக்கும் பதில் வரவில்லை. லண்டன் வீதிகளில் விசரன்  மாதிரித் திரிந்தான். ஆனால் ஊரிலோ நிலைமை வேறு மாதிரி இருந்தது. மாமா (கல்யாணியின் அப்பா) நாலு சாத்துச் சாத்தி வீட்டுக்குள்ள அவளை இருத்தினார். "அவன் அங்கை நீ வருவாய், அல்லது இஞ்சை எண்டாலும் வந்து கட்டுவான் எண்டு நாங்கள் நினைச்சுக் கொண்டிருக்கிறம், நீ சேட்டை விட்டுக் கொண்டிருக்கிறாய்; அவன் வாங்கித் தந்ததை எல்லாம் வாங்கி அனுபவிச்சுப் போட்டு இப்ப வேற மாப்பிள்ளை பாக்கிறியோ" என்று திட்டித் தள்ளி விட்டு, தாமதிக்காமல் காசைக் கட்டி, விமானம் ஏத்தி விட்டார் செல்ல மகளை.
சித்தப்பா தலைமையில் கல்யாணிக்கும் ஆனந்தனுக்கும் திருமணம் நடந்தேறியது. அனந்தன் மிகக் கவனமாக அவளுடன் பேசிக் கொண்டான். கடந்த காலங்களை மீட்பதில் அவனுக்கு உடன்பாடு இல்லை. காலம் கரைந்தோட இரண்டு குழந்தைகளும் பிறந்து, பத்தும், எட்டும்  வயதாகியிருந்தனர். ஆனந்தன் அவளை பூ மாதிரிப் பார்த்தான் என்று தான் சொல்ல வேண்டும். வீட்டிலேயே இருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொண்டாள்.
வேக வேகமான தொழில் நுட்ப வளர்ச்சி அவளுக்கு பயனாய் இருந்தது. அவளுக்கு வீட்டுக்குளே இருந்த  பொழுது போக்குகள் தொலைக் காட்சியும், இணையத் தளமும்தான். அம்மாவோடு அடிக்கடி  ஸ்கைப்பில் பேசிக் கொள்ளுவாள். ஆரம்பத்தில் இணையத்தை திரைப் படங்களைப் பார்க்கவும், பாடல்களைக் கேட்கவும், செய்திகளை வாசிக்கவும் என்று பயன் படுத்தியவள், மிக விரைவில் சமூகத் தளமான முக பக்கத்துக்குள்  புகுந்து கொண்டாள். ஒருவர் மூலம் ஒருவராக நண்பர்கள் சேரத் தொடங்கினர். சிறு வயதுத் தோழிகள் பலர் தற்செயலாகக் கிடைத்தனர். பல்கலைக் கழக நண்பிகள் சிலரும் கிடைத்தனர்.  அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காலையில் எழுந்து பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பியவுடன் கணினியைத் திறந்தால் இரவு வரை தொடரும். பின்னூட்டங்களை வாசிப்பதும்  இடுவதும், தெரிந்தவர்களுடன் அரட்டை அடிப்பதுமாக நாளின் பெரும் பகுதியை முகப் பக்கம் விழுங்கத் தொடங்கியது. ஒரு நாள் அதனைத் திறந்து பார்க்காவிட்டாலும் எத்தனையோ இழந்த மாதிரித் தெரிந்தது. ஏறக் குறைய ஒரு வித போதையாய்த் தெரிந்தது.
ஒருநாள் காலையில் முகப் பக்கத்தைத் திறந்தவுடன் இருவர் நண்பர்களாகக் கேட்டிருந்தனர். கல்யாணி நண்பர்களாக இணைக்க முன்னர் அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டே இணைப்பது வழக்கம். அந்த வழக்கத்தில் இணைக்கக் கேட்டிருந்த ஒருவருடைய விபரத்தைப் பார்த்தபோது நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. உடனேயே எல்லாவற்றையும் துண்டித்து விட்டு வந்து வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். ஆனால் வேலையில் கவனம் சென்றால் தானே. கணினி வா வா என்று இழுக்க திரும்ப முகப் புத்தகத்தைத் திறந்து பார்த்தாள். இந்தத் தடவை ஒரு செய்தி வந்திருந்தது அவளுடன் பேச மிக ஆவலாய் இருப்பதாக அவளுடைய பழைய காதலன். அவள் அந்த அழைப்பை மறுத்து விட்டு வேறு விடையங்களைப் பார்க்கத் தொடங்கினாள். ஆனால் அவனோ விடாமல் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தான்.நாட்கள் கடந்து கொண்டு போக, அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல அவன் பொறுக்கியெடுத்து வார்த்தைகளைத் தொடுத்து அனுப்ப என்னதான் சொல்லுகிறான் எண்டு கேப்பம்   என்று எண்ணிக் கொண்டு அவனை இணைத்துக் கொண்டாள். அவன் மரியாதையாகவே பேசினான்; அவளது வாழ்க்கை எப்பிடிப் போகிறது என்று கேட்டான். இவள் தனது அழகான குடும்பத்தைப் பற்றிச் சொல்ல சில நிமிடம் மவுனமாக இருந்து விட்டு, தனது நொந்து போன வாழ்க்கைச் சொல்லி அழத் தொடங்கினான். பிடிக்காத மனைவியைப் பற்றியும், கஷ்டமான வெளிநாட்டு வாழ்க்கையைப் பற்றியும் புலம்பினான்; வீட்டிலே நிம்மதி இல்லை என்றான். கல்யாணிக்குக் கேட்கக் கஷ்டமாக இருந்தது.என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. என்ன செய்யிறது ஏற்றுக் கொண்ட வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முயற்சி செய்ய வேணும் என்று சொல்லி விட்டு தொடர்பைத் துண்டித்து விட்டாள். அவன் எனக்கு ஏன் இதெல்லாவற்றையும்  சொல்லுகிறான் என்று அவளுக்கு விளங்கவில்லை. இவனுடன் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.  நினைத்தது  மட்டும்தான்;அடுத்த நாளும் உரையாடல் தொடர்ந்தது. அதற்கடுத்தநாளும் தொடர்ந்தது. பேச்சு கடந்த காலத்தை நோக்கித் திரும்பி  மீட்கத் தொடங்கியது. கல்யாணி அவளை அறியாமலேயே அவன் விரித்த வலைக்குள் வீழத் தொடங்கியிருந்தாள்.
இப்போதெல்லாம் கணினி திறப்பதே அவனுடன் பேசுவதற்கு மட்டும்தான் என்றாகியிருந்தது. மற்ற நண்பர்கள் இணைக்கும் விடையங்களும் செய்திகளும் வீணாகத் தெரிந்தன. மணித்தியாலக் கணக்காகப் பேசிக் கொண்டேயிருந்தார்கள் கருத்தில்லாமல். நாங்கள் சேர்ந்து இருந்திருந்தால் எப்படி எல்லாம் வாழ்ந்திருந்திருப்போம் என்றான். பாவம் அவனை தான் கஷ்டப்பட வைத்து விட்டேன் என்று எண்ணிக் கொண்டாள் அந்தப் பேதைப் பெண்.
அன்று காலை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி விட்டு சில உடுப்புக்களை எடுத்து பையில் வைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள் கல்யாணி.

கணவன் அனந்தன் அதிகாலையிலேயே வேலைக்குப் புறப்பட்டுப் போய்  விட்டான் அன்று மாலையில் வரவிருக்கும் அதிர்ச்சி தெரியாமலேயே.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

சுத்துமாத்து.


கொஞ்சக் காலமாக அம்மாவினதும் அக்காமாரினதும் நச்சரிப்புத் தாங்க முடியாமல் தொடர, கடைசியாக அரை குறை மனதாக  ஒரு மாதிரி ஓம் என்று சொல்லி விட்டான்  வரதன். இப்போதைக்கு பிரச்சனையில்லாத வேலையாய் இருந்தாலும் அதிலே இன்னும் கொஞ்சம் மேலே போக வேண்டும் என்ற ஆசை. அதை விட பொறுப்புக்கள் என்று ஒன்றும் வேறு  இல்லை. அம்மாவும் அப்பாவும்  ஊரிலே.  வரதன் பிரான்சிலே தன்னுடைய ஒரு  அக்காவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அக்காவும் அத்தானும் அவனை தங்களுடைய  மகனாகவே பார்க்கின்றனர். இன்னொரு அக்கா கொஞ்சம் தொலைவிலே வாழ்கின்றாள். அவனுடைய வயதை உடையவர்கள் எல்லோரும் அநேகமாக திருமணமாகி  விட, அக்காமாருக்கு  அவனுக்கும் விரைவில் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்கின்ற ஆவல். ஆக மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து அவனை சம்மதிக்க வைத்தாகி விட்டது. கொஞ்சம் கறுப்பு, கொஞ்சம் பொது நிறம், கொஞ்சம் கட்டை, சரியான உயரம் அப்படி இப்படி என்று  கொஞ்சப் பெண்கள் தட்டுப் பட்டுக் கொண்டு போனார்கள். வரதனுக்கு ஊரிலேயே ஒரு படித்த பெண்ணைப் பார்த்தால் நல்லது என்று தோன்ற இறுதியாக ஊரிலேயிருந்து வந்த ஒரு சம்பந்தம் ( பெண்) எல்லாருக்கும் பிடித்துப் போனது. வரதனும் படத்தைப் பார்த்தான். எதிர்பார்த்ததை விட பெண் அழகாகவே இருந்தாள். அக்காவுக்கு மகா சந்தோசம்! அம்மாவுக்குத் தொலைபேசியில் முடிவைச் சொன்னார்கள். அம்மா "எல்லாரும் வடிவா யோசிச்சு முடிவைச் சொல்லுங்கோ" என்று சொன்னார். அக்கா "இஞ்சை எல்லாருக்கும் பிடிச்சிட்டிது உங்களுக்கும் பிடிச்சால் சரி" என்றாள். அம்மா "தம்பிக்கும் உங்களுக்கும் சரி எண்டால் எனக்குச் சரி" என்றாள். வரதன் இந்தியாவுக்குப் போய் திருமணத்தை முடித்து விட்டு வரத் தீர்மானித்தான். அக்காமாரும் அவனுடன் கூடப் புறப்பட்டனர். அம்மாவும் அப்பாவும் இந்தியாவில்  தெரிந்தவர்கள் ஒருவரின் வீட்டில் தங்கியிருக்க ஏற்பாடு செய்து விட்டார்கள். பெண் வீட்டார் தாங்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் தங்கும்  ஏற்பாட்டைத்  தாங்களே செய்து கொண்டார்கள். வரதனுக்கு வேலையிடத்தில் இரண்டு வார விடுவிப்பே கிடைத்தது. அதற்குள்ளே எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்து முடிக்க வேண்டுமாதலால் முடிந்தவரை தொலைபேசியூடாக அநேகமான ஒழுங்குகளைச் செய்து முடித்திருந்தார்கள். இந்தியாவுக்குப் போய் கூறை எடுக்கலாம் என்று சொல்லி விட்டார்கள் அக்காமார். வரதன் அக்காமார் சூழ இந்தியாவுக்குப் போய்ச் சேர்ந்தான்.தன்னுடைய மனைவியாக வரப் போகிறவளுக்கு ஆசையாக நிறையப் பொருட்களை வாங்கிச் சென்றிருந்தான் வரதன். போய்ச் சேர்ந்ததும் தனது வருங்கால மனைவியைப் பார்த்துப் பேசி பொருட்களைக் கொடுத்து அவளுடைய மகிழ்ச்சியைக் காண அவனுக்கு ஆசை.
போய்ச் சேர்ந்த நான்காம் நாள் அவன் வந்தனாவைச் (அதுதான் அவனது வருங்கால மனைவியின் பெயர்) சந்திக்க அவர்களுடைய வீட்டுக்குச் சென்றான். சின்னக்காவுக்கு அவனுடன் போய்ப் பார்க்க ஆசை. ஆனாலும் அவர்களுக்கிடையே தான் இடைஞ்சலாய் இருப்பேன் என்று எண்ணி அவனைத் தனியே விட்டாள். தாய் வந்து வரவேற்று பயணங்கள் பற்றி விசாரித்தாள். சில நிமிடங்களில் ஒரு பெண் சிரித்தபடியே தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். நேரம் கடந்து கொண்டே இருந்தது. வந்தனாவைக் காணவில்லை. தாயும் எதுவும் அதைப் பற்றிப் பேசுமாப்போல் தெரியவில்லை. அவன் கடைசியாக "வந்தனா இல்லையோ? நான் கொஞ்சப் பொருட்கள் கொண்டு வந்தனான், அவவிட்டை நேர குடுத்தால் நல்லது எண்டு நினைக்கிறான்" என்றான். தாய் கொஞ்சம் கலவரப்பட்ட மாதிரித் தெரிந்தது. "இருங்கோ வாறன் தம்பி" என்றவள், உள்ளே போய் சில நிமிடங்களில் திரும்பி வந்து, "வாறா  தம்பி " என்று சொல்லி விட்டு, "நான் உள்ள சமைச்சுக் கொண்டிருக்கிறன், கட்டாயம் நீங்கள் சாப்பிட்டிட்டுத்தான் போக வேணும், ஏதேன் தேவை எண்டால் கூப்பிடுங்கோ" என்று சொல்லி விட்டு உள்ளே போக, முதலில் தேநீர் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போன பெண் திரும்பி வந்தாள். வரதன் அவளைப்  பார்த்து மெல்லிதாகச் சிரித்தான் மனதுக்குள் எரிச்சலை மறைத்தபடி. கொஞ்ச நிமிடங்கள் மௌனத்தை விழுங்க,...... "ப்ளீஸ், வந்தனாவைக்  கூப்பிடுறீங்களா? எனக்கு வேறை நிறைய வேலையளும்  இருக்கு" என்றான். அந்தப் பெண்ணின் முகம் பயங்கரத்துக்கு மாறியது. "நான்... நான்தான் வந்தனா"........என்றாள் அழுகைக்கு மாறிய குரலுடன். வரதனுக்கு தலைக்குள் கிண்ணென்று ஏதோ சுழர, என்னவோ பிழை என்று உறைத்தது. "என்ன விழையாடுறீங்களா?" என்று ஆத்திரத்தை மறைத்தபடியே  கேட்டுக் கொண்டு இருக்கையை விட்டு எழும்பினாள். அந்தப் பெண் "அம்மா" என்று கத்தி அழுதபடியே உள்ளே ஓடிப் போய் விட்டாள். தாய் வெளியே தயக்கத்துடன் மெதுவாக வந்தாள். வரதன் "என்ன நடக்குது இஞ்ச?" என்றான். " ஏன் தம்பி என்ன பிரச்சனை?"  "நாங்கள் போட்டோவில பாத்த வந்தனா இவவில்ல" என்றான் கோபம் இதற்கிடையில் உச்சத்துக்குப் போயிருந்தது. "இல்லைத்தம்பி, இவவின்ர போட்டோதானே அனுப்பினனாங்கள்? என்றாள் தாய். அவனுக்கு அதற்கு மேல் அங்கே நின்று அந்தப் பெண்களிடம் பேச  விருப்பமில்லாமல் முறைத்துப் பார்த்து விட்டு வெளியே வந்து விட்டான். ஆசையாகக் கொண்டு போன பொருட்கள் அப்படியே கிடந்தன.
அம்மாவும் அக்காமாரும் அவனை ஆவலுடன் பார்த்திருந்தனர். சின்னக்கா "பெம்பிளை நேரிலை எப்பிடி தம்பி"? என்றாள். அவன் நேரே தன்னுடைய அறைக்குள் சென்று வந்தனாவின் படத்தை எடுத்துக் கொண்டு வந்து அம்மாவிடம் காட்டி " சொல்லுங்கோ அம்மா! இது நீங்கள் பாத்த பெம்பிளைதானே?" அம்மா படத்தைப் பார்த்ததும் "ஐயோ கடவுளே! இந்தப் படத்தைப் பாத்தே நீங்கள் எல்லாரும் ஓமெண்டு சொன்ன நீங்கள்?" என்று எல்லாரையும் திருப்பிக் கேட்டா. எல்லாரும் விறைத்து நிற்க "இது நாங்க பாத்த பெம்பிளையின்ர தங்கச்சி" என்று போட்டுடைத்தா. "அப்ப என்னெண்டு எங்களுக்கு இந்தப் போட்டோ வந்தது " என்றான் வரதன். "அப்பாவாலை சுழிபரத்தில இருந்த சாவகச்சேரிக்கு போக ஏலாமல் போனதால, பெம்பிளை பகுதி ஆக்கள் தான் பிரச்சனை இல்லை நீங்கள் விலாசத்தைத் தாங்கோ நாங்கள் போட்டோவை அனுப்பி விடுறம் எண்டு சொல்லி நாங்கள் உன்ர விலாசத்தை குடுத்தனாங்கள்" என்றா அம்மா. "அதுதான் நான் உங்களைத் திரும்பத் திரும்பக் கேட்டனான் பிடிச்சிருக்கோ, வடிவா யோசிச்சு முடிவைச் சொல்லுங்கோ எண்டு, ஆனால் கடவுளே! ஆருக்குத் தெரியும் இப்பிடி போட்டோவை வைச்சு சுத்து மாத்துச் செய்யிற ஆக்கள் எண்டு? பாத்தா நல்ல படிச்ச மனிசரா இருக்கினம் எண்டு தானே நாங்களும் நம்பினாங்கள்" அம்மா புலம்பத் தொடக்கி விட்டா. அக்காமார் என்ன செய்வது  என்று தெரியாமல் குழம்பிப் போய் நின்றனர். அத்தான் இரு நான் போய் கேட்டுக் கொண்டு வாறன் என்ன கேவலமான வேலை இது? இப்பிடி எல்லாம் மனிசர் இருப்பினமோ? என்று கொதித்துக் கொண்டு வெளிக்கிட்டார்.
வரதன் தடுத்து நிறுத்தினான். "இனிமேல் இதப் பற்றிக் கதைச்சுப் பிரயோசனமில்லை; ஆனால் அவை நினைக்கிற மாதிரி இந்தக் கலியாணம் நடக்கப் போறதுமில்லை. எல்லாரும் வந்த மாதிரி திரும்பிப் போவம்" என்றான் நிதானமாக. அம்மா அவனைப் பாத்து "ஐயோ ஒரு பெம்பிளப் பிள்ளையின்ர பாவம் எங்களுக்கு வேண்டாம் தம்பி, தாய் தகப்பன் செய்த பிழைக்கு அந்தப் பிள்ளை என்ன செய்யும்? என்ர ராசா நீ அந்தப் பிள்ளைய செய்" என்றாள் கலக்கமாக. வரதன் அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு, "அம்மா இது ரெண்டு பேரின்ர வாழ்க்கை அம்மா; உங்கடை சொல்லுக்காக நான் இப்ப அந்தப் பிள்ளையை செய்தால் வாழ்க்கை முழுக்க ரெண்டு பேருக்குமே நரகமாத்தான் இருக்கும். நீங்கள் கவலைப்படதயுங்கோ! அந்தப் பிள்ளைக்கும் ஒரு நல்ல விரும்புற வாழ்க்கை கிடைக்கும், எனக்கும் ஒரு நான் விரும்புற வாழ்க்கை கிடைக்கும்" என்ற போது அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.

சனி, 1 செப்டம்பர், 2012

ஊருக்குபதேசம்!

வீடு ஒரே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. சங்கரி கத்திக் கொண்டிருந்தாள். "இவளுக்குப் படிச்சுப் படிச்சுச் சொன்னனான்; கவனமாயிரு இப்பிடியான பிரச்சனைகள் எல்லாம் வரப் பாக்கும் எண்டு. பார் இப்ப என்ன மாதிரியான வில்லங்கத்தை வாங்கிக் கொண்டு வந்து நிக்கிறாள்; நாங்கள் சொன்னதெல்லாத்தையும் ஒரு காதால கேட்டு மற்றக் காதால விட்டிட்டு இப்ப முழிசிக் கொண்டு நிக்கிறாள்" கோபத்தில் கழுவிக் கொண்டிருந்த பாத்திரத்தை ஓங்கி அடித்து வைத்தாள். மகள் வேணி ஒன்றும் பேசாமல் விரல் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள். திரும்பிப் பார்த்த சங்கரிக்கு கோபம் உச்சிவரை ஏறியது. "உதில மரம் மாதிரி நிண்டு என்ர கோபத்தைக் கிளறாமல் எங்களுக்கு இண்டைக்கு ஒரு முடிவு சொல்ல வேணும்; நீ என்ன சொல்லுறது நாங்கள் சொல்லுறதை நீ கேக்க வேணும், அவ்வளவுதான்"
வேணி தாயை நிமிர்ந்து பார்த்தாள். "என்னடி முறைக்கிறாய்? இதெல்லாம் என்னட்டைச் சரி வராது, சொல்லிப் போட்டன்......
"ஏன் சும்மா பாக்கவும் கூடாதோ?"
" சும்மா பாக்கிற மாதிரியே கிடக்குது? எத்தினை வருஷமா இதுக்குள்ளை கிடந்தது சேவை(???) செய்து மாயுறம்; எங்களுக்கென்ன விசரே இப்பிடியெல்லாம் செய்ய? எங்கட செல்வாக்கால உன்னையும் அதுக்குள்ளால வளத்து விடலாம் எண்டு நாங்கள் நினைச்சுக் கொண்டு இருக்க நீ என்ன வேலை பாத்துக் கொண்டு நிக்கிறாய்? சரி லவ் பண்ணினதுதான் பண்ணினாய் ஒரு தராதரம் பாத்துச் செய்திருக்கக் கூடாதோ?"....
"உங்கடை தராதரம் எண்டா என்ன எண்டு சொல்லுங்கோ முதல்ல. உங்கட தராதரம், உயரம், நீளம், அகலம் எல்லாம் பாத்து அது வாறேல்லை"
மகளின் பேச்சைக் கேட்டு சங்கரி திகைத்து நிற்க, கணவன் மனோ அறைக்குள்ளிருந்து வெளியே பாய்ந்து வந்து கைகளால் மகளுக்கு விளாசத் தொடங்கினான். திகைத்துப் போய் நின்றிருந்த சங்கரி நிலைமையை உணர்ந்து ஓடி வந்து கணவனைப் பிடித்து இழுத்துப் பிரித்தாள். அவனுக்கு மூச்சு வாங்கியது. அடி வாங்கின மகளோ கண்கள் கலங்கினதே தவிர நின்ற இடத்தை விட்டு அசையாமல் நின்றாள். " பார் அவளை அடி வாங்கியும் கல்லு மாதிரி நிக்கிறாள். கொழுப்பு.. நாங்கள் பாத்துப் பாத்து வளத்துவிட ஆரோ ஊர் பேர் தெரியாதவனை எங்களுக்கு காட்டுறாள்... உன்ர படிப்பை எண்டாலும் நினைச்சனியே! படிப்பு முடிச்சு வேலைக்குப் போகப் போறாய் நீ அவன் அங்கை பத்தாம் வகுப்புப் படிச்சுப் போட்டு இஞ்சை வந்து விசாவுக்குப் பாத்துக் கொண்டிருக்கிறான். உது சரி வருமே? கொஞ்சமெண்டாலும் உன்ரை எதிர்காலம் எப்பிடி இருக்கும் எண்டு நினைச்சுப் பார்த்தனியே? வார கோவத்துக்கு உன்னை வெட்டிப் போடா வேணும் போல கிடக்கு. செய்யிறதையும் செய்து போட்டுக் கதைக்கிறாள் கதை......
"நீங்க உள்ளுக்க போங்கோப்பா நான் அவளோட கதைக்கிறன்என்ற சங்கரிக்கு அவன் திரும்பவும் மகளை அடித்து விடுவானோ என்று பயமாக இருந்தது. அதனால் வேணியின் வைராக்கியம் கூடி விடக் கூடிய நிலைமையையும் உணர்ந்திருந்ததால் கணவனை மகளை நெருங்க விடாமல் இடையில் நின்று கொண்டாள்.
மனோவுக்கும் சங்கரிக்கும் ஒரே மகள் வேணி. எல்லாமே தங்கள் சார்பாக இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் கணவனுக்கேற்ற மனைவி மனைவிக்கேற்ற கணவன். சுயநலத்துக்காய் பொதுநலத்துக்குள் ஓடித்திரிபவர்கள். இலவச ஆலோசனைகளை அள்ளி அள்ளித் தேவைப்படுவோருக்கு வழங்குபவர்கள். ஆனால் வீட்டுக்குள்ளே சிக்கல் வந்த பொது "ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி பெண்ணே" என்றதை மகளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
வேணிக்கு பொதுப் பணியிலே தன்னை இணைத்துக் கொண்ட யுவன்சனை ஏனோ பிடித்துப் போய் விட்டது.காதலுக்கு மனம் மட்டும் போதுமே! கலியானத்துக்குத்தானே மண்டையைப் போட்டுப் பிய்க்க வேண்டி உள்ளது. எதையும் (எதிர்) பாராது மனங்கள் விரும்பி, பேசி, நெருக்கமாக முதலில் வெளியே புகைந்து பின் அனலாகி வீட்டுக்குள்ளே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. வெட்டிப் பிரித்து மகளைக் கட்டிப் போட்டனர்.கூட இருந்து துணை போனவர்களெல்லாம் வசவுகளுக்கு உள்ளானார்கள். யுவன்சனுக்கோ எதுவும் செய்ய முடியாத நிலை. விசா வேறு இல்லை. காலம் நல்ல பதில் சொல்லும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தான். ஆனால் ஆனால் மறுபக்கத்தில் வேணியை எப்படியெல்லாம் சொல்லி மனம் மாற்ற முடியுமோ அப்படி மாற்றிக் கொண்டிருந்தனர் அவளுடைய பெற்றோர். இரண்டு மாதங்களில் அவசர அவசரமாக ஒரு மாப்பிள்ளையை லண்டனில் பொறுக்கி எடுத்தனர். படத்தைக் காட்டினர்;
அவள் "நான் செத்துப் போவேன்" என்றாள்.
 " நாங்கள் முதல் செத்துப் போறோம், அதுக்குப் பிறகு நீ ஆரோடஎண்டாலும் ஓடிப்போ" என்றார் தந்தை.  
அவள் தலையில் அடித்துக் கொண்டு நாள் முழுக்க அழுதாள். யாரும் கண்டு கொள்ளவில்லை.அதற்கு மேல் அவளிடமிருந்து ஒன்றும் கேட்காமல் திருமண நாள் குறித்து பொறுக்கி எடுத்த மாப்பிள்ளையைக் கொண்டு சகல பாதுகாப்போடு தாலி கட்டுவித்தார்கள். தங்கள் தராதரத்தோடு கூடிய லண்டன் இன்ஜினியர் மாப்பிள்ளையோடு லண்டனில் வாழ மகளை அனுப்பி விட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
 வேணிக்கு மனம் எதிலும் ஒட்டவில்லை; மாமியார் அன்பாயிருந்தார்; கணவன் சாதாரணமாய்ப் பேசினான். அவர்களுக்கு தனது பிரச்சனை தெரியுமா தெரியாதா என்று கூட அவளுக்கு விளங்கவில்லை. மனம் ஒரு நிலையில் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. இரண்டு கிழமைகள் இப்படியே யுகமாய்க் கழிந்தன. ஒரு நாள் கணவன் வீட்டுக்கு வர நேரமாகி விட்டது. பார்த்துப் பார்த்து இருந்தவள் கண்கள் கனக்க அப்படியே நித்திரையாகிப் போனவள் ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழும்ப கணவன் வந்து விட்டிருந்தான்இரவு பத்தரையைத் தாண்டியிருந்தது. "என்ன நல்ல கனவைக் குழப்பீட்டன் போல இருக்கு"...... என்றான். "இல்லை உங்களைப் பாத்துக் கொண்டிருந்தனான் அப்பிடியே நித்திரையாப் போனன்" என்றாள் அப்பாவியாக. "ஓமோம்! நித்திரை வரும் நல்லா. அங்கை இரவு பகலா நீங்கள் போட்ட ஆட்டத்துக்குப் பிறகு இப்ப நல்ல நித்திரை வரும் தானே" என்று நக்கலாகச் சொன்னவன், "எல்லாரும் நித்திரை கொள்ள எனக்கெல்லோ இப்ப நித்திரை துலைஞ்சிட்டுது" என்று சொல்லியபடியே குளிக்கப் போய் விட்டான். வேணி பேசாமல் சாப்பாட்டை எடுத்துச் சூடு பண்ணத் தொடங்கினாள். தனது வாழ்வின் இரண்டாவது அத்தியாயம் தொடங்கப் போவது தெரிந்தது.

தாய்க்கு தொலைபேசி எடுப்பதில்லை என்ற முடிவோடு இருந்தவள் மனச் சஞ்சலத்தில் தொலைபேசி எடுத்தாள். எடுத்தது அம்மாதான் "பிள்ளையே! நான் எடுக்க வேணும் எண்டு இருக்க நீ எடுக்கிறாய்; எப்பிடி இருக்கிறாய் பிள்ளை? அரும் பொட்டிலை தப்பினாய், இப்ப பாத்தியே எப்பிடி ஒரு அருமையான வாழ்க்கை உனக்குக் கிடைச்சிருக்கு? நான் கும்பிட்ட தெய்வங்கள் என்னைக் கை விடேல்லை. கொஞ்சம் பொறு பிள்ளை அப்பாட்டைக் குடுக்கிறன், கதை. நான் பிறகு உனக்கு எடுத்துக் கதைக்கிறன். இஞ்ச எங்களுக்குத் தெரிஞ்ச ஒரு குடும்பம் ஒரு சிக்கலில இருக்குது, ஒருக்கா அதைப் பாக்க வேணும் வந்திருக்கினம் வீட்டு தேடி பாவங்கள் ......மகளைப் பேச விடாமல் தானே கதைத்துக் கொண்டிருந்தவள் கணவனைக் கூப்பிட்டு "அப்பா இந்தாங்கோப்பா  பிள்ளை லைனில நிக்கிறாள் கதையுங்கோ..."என்று தொலைபேசியை கொடுத்தபோது வேணி தொடர்பைத் துண்டித்தாள்.