திங்கள், 26 அக்டோபர், 2015

ஓ! என் பிரிய சிசுவே!

பாரதியின் வரிகள் என்நாவில் புரள
அன்று ஆழுறக்கம் உன்னை 
அமைதியில் நிறைத்திருக்க
பெருமிதம் மிக்க அன்னையாயிருந்தேன்.

முறைகள் தவறிப் போயின
இடைச் செருகல்களின் நெருடல்களில்.
தூக்கமிழந்த உன் இரவுகள்
என்னையும் உன்னையும் உடைத்துப் போட்டன.

தறிக்கப்பட்ட மரங்களின் 
வேதனையை ஒத்திருந்தது 
வீழ்ந்திருந்த என் மனதும்
சோர்ந்திருந்த எனதுடலும்.

ஓ! என் பிரிய சிசுவே!

நானறிந்த விழிப்புற்ற இரவுகளும்
ஒட்டவெண்ணா மனதுமான
இப்பெருங்காலங்கள் கடந்து போகட்டும் 
எழுந்தடங்கும் புயல்போல.

நின்னைச் சரணடையும் 
பாரதியின் வரிகளோடு இன்னும் 
அருகே காத்திருக்கிறேன் 
உனது ஆழ் தூக்கத்திற்காய்.

வி. அல்விற்.

25.10.2015.

கருத்துகள் இல்லை: