ஆயிரம் கதைகளை
அன்றைய மதி
இரகசியமாகப் புன்னகைத்தபடியும்
அவள் தூங்கும் வேளை
ஆதவன் வியர்த்தபடியும்
முறைதவறாமல் கேட்டிருக்கின்றன
பின்னாட்களில்
சாட்சியம் கூறும்படி.
ஆழிரவின் அனர்த்தங்களையும்
இருள் குடித்த விழிகளையும்
குறுக்கறுத்த பாதைகளில்
புதையுண்ட சொற்களையும்
சுமந்தலைகிறாள் இன்றைக்கும்
நிம்மதியற்ற நிலாக்கன்னி.
ஒளிக்கற்றையால் மூடிக் கொண்டு
விழி சிவந்து
இன்றைக்கும்
இறங்கிக்கொண்டேயிருக்கின்றான் பகலவன்
விஞ்சும் அதிகாரத்தோடு
வியர்வை குடித்த குருதியையும்
நிலமதிர்ந்த கொடுமைகளையும்
கூட்டி விழுங்கியபடி.
இன்னும் எத்தனை நாட்கள்
இக்கொடு நிலத்தில்
தீர்க்கப்படாத வழக்குகளுடன்
மௌனமாக ஊர்ந்தபடி....
வி. அல்விற்.
24.10.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக