வெள்ளி, 30 நவம்பர், 2012

எண்ணியது என்ன?

எண்ணியது என்ன?
நீங்கள் எண்ணியது என்ன?

என்னைத் தேட வேண்டாம் என்ற
ஒற்றைத் துண்டுக் குறிப்புடன்
உறவுகள் இழந்து
பாசங்கள் துறந்து
தேச நேசம் தேடிப் போன
கணங்களில் நீங்கள் எண்ணியது என்ன?

நோயினில் அம்மா நினைவு வந்ததா?
சோற்றினில் அக்கா நினைவு வந்ததா?
முதற் களத்தினில் அப்பா முகம் தெரிந்ததா?
கள விழுப்புண்ணில்
தலைவன் நெறி தெரிந்ததா?

களம் தந்த வாகை பெருமை தந்ததா?
பலம் தந்த கைகள் உறவு தந்ததா?
விரைந்திங்கு முடியும் எனவெண்ணி னீரா?
இல்லை முடிவோடு
மீழுவோம் எனவெண்ணி னீரா?

பாய்ந்தன்று தலை சாய்த்த நண்பன்
முகம் தோன்றி தூக்கம் இழந்தாயா?
தனிமையில் இரவோடு கரைந்தழுதாயா?
இல்லை வெறியோடு
மீண்டெழ உரம் கொண்டாயா?

விழி மூடும் தருணம் உங்கள்
எண்ணங்கள் தான் என்ன?
உறவுகள் இதயம் வருடிச் சென்றனரா?
இல்லை கண்களில் தாய்மண் முன்னின்றதா?
இல்லை உம்மை விதைக்கிறீர்கள்
என்பதை
எண்ணிக் கொண்டீரா?

மலர் வைத்து
உம்மை மனதேற்றும் நேரம்
மனம் கனக்க
கேட்கின்றோம்
எதை எண்ணிச் சென்றீர் எம் செல்வங்களே?

கருத்துகள் இல்லை: