வெள்ளி, 30 நவம்பர், 2012

குருதி படிந்த முகங்கள்

வீரத்திலும், பொருளாண்மையிலும்
வெற்றிக் கொடி பறக்க வாழ்ந்தவோர் இனம்
உலகப் பந்தின் ஓர் இருண்ட மூலையில்
வலி தாங்கி நிற்கும்
ஓர் அவலப்பட்ட இனம்

விடுதலைக்காய் எதையும் விடாது
வீழ்ந்தும் மீண்டும்
மிடுக்குடன் எழும் இனம்
உலக முறைமைக்குள்

சுழன்றிடாததால்
அடித்து வீழ்த்தப் பட்டும்
அசையா நம்பிக்கைத் தூண்
பற்றி நிற்கும் இனம்

மீதித் தூரம் கொஞ்சமெனும்
ஆசை பற்றிக் கொண்ட இனம்
ஒவ்வொன்றாய்க் கொடுத்தும்
கொத்துக் கொத்தாய்க் கொடுத்தும்
இடிதாங்கியாய் ஏற்று
நகரும் இனம்

எத்தனை தாங்கியும்
மாறா வினம்
இன்று...
தனக்குள் மறுதலித்து மருகுவதேன்?
வேரோடு பிடுங்க இடமளிப்பதேன்?
குருடராய் தடுமாறி வீழ்வதேன்?

கண்மூடிக் கேளுங்கள்!
உங்கள் இதயத் துடிப்பை
அங்கே...
எங்களுக்காய்....
கண்மூடிய
குருதி படிந்த முகங்கள்
கண்ணீருடன் கேள்விகள் கேட்கும்.

கருத்துகள் இல்லை: