செவ்வாய், 5 மார்ச், 2013

பாட்டன் வழி நிலம் வேண்டும்

முற்றத்து வெளியில் விளையாடி முடித்து 
முல்லை நுகர்ந்தபடி மயங்கியிருக்கும் அந்தியிலே 
முப்பாட்டன் கதைகள் கண்ணகல 
முத்து முத்தாய்க் கேட்டிட வேண்டும் 

பட்டான மணற் பரப்பு அப்படியே வேண்டும்
படர்ந்தோடக் கால்கள் அதில் பதிய வேண்டும்
சுட்டெரிப்பில் நெற்றி துளிர்க்க வேண்டும்
தொட மறந்த தென்றலும் தொட்டுச் செல்ல வேண்டும்

தென்னையி ளஞ்ச்சாறு தேனாய்ப் பருகிட வேண்டும்
தொன்மைக் கற்பகம் தரணியில் பரப்பிட வேண்டும்
தொன்று தொட்ட வைத்தியம் பயிலல் வேண்டும்
தொலையாமல் இயற்கை காத்திடல் வேண்டும்

தெள்ளிய நீர் துலாவி லிறைக்க வேண்டும்
தெவிட்டாத சத்துணவு ஆக்க வேண்டும்
தெருவெல்லாம் விழாக் காண வேண்டுமதில்
தேன்தமிழ் துள்ளிக் குதிக்க வேண்டும்

கனவு விருட்சங்கள் புரிந்திட வேண்டும்
வன வாசம் சென்றவர் நினைவுகள் வேண்டும்
மனமுருகி கண்ணீர் சொரிந்திட வேண்டும்
மறத் தமிழர் வீரம் பேசி வாழ்த்திட வேண்டும்

போகாத தெரு வெங்கும் புகுந்துவர வேண்டும்
புதுமை ஏதும் புகுத்தும் வழி தேடல் வேண்டும்
பேசாப் பொருள் அலசிப் பார்க்க வேண்டும்
பண்டைத் தமிழ் செல்வம் பெருக்க வேண்டும்

கண்டறிந்த அறிவதனைப் புகுத்த வேண்டும்
கடுகதியில் கனவுகள் பெருக்க வேண்டும்
எங்கணுமே ஏற்றம் காணல் வேண்டும்
எதிலுமே வெற்றியே தோன்றல் வேண்டும்

கேள்விகள் வெளியிடை வைத்தல் வேண்டும்
நேர்பட நின்று பேசிடல் வேண்டும் எம் சந்ததி
செந்தமிழில் செங்கனலாய் முழங்க வேண்டும்
செயலிடை வைக்கவோ மூதாதையர் நிலம் வேண்டும்
சொந்தப் பாட்டன் வழி நிலம் வேண்டும்

கருத்துகள் இல்லை: