வெள்ளி, 8 மார்ச், 2013
படைப்பாளிகள் நாங்கள்
தாய்மை எங்கள் இயற்கை வரம்
தேடாமல் வாங்கி வந்த வரம்
இதுவொ ன்றுக்கே தலை சாய்த்து
வணங்குகிற துலகம்
அன்புக்கும் பாசத்துக்கும்
அணையில்லா நேசத்துக்கும்
பொறுப்பாளிகள் நாங்கள்
அமைதிக்கு இலக்கணம்
பொறுமைக்கு மாதிரிகள்
மென்மைக்கு மேன்மைகள்
பொறிக்கப்பட்ட அடையாளங்கள்
எழுதப்படாத விதிகளின் கீழ்
பன்முகமாய் விசாலப்படுகிறது
உலக முதல் படைப்பாளிகள் நாங்கள்
எங்கள் வலிகளுக்கும் படைப்புக்கும்
விலை பேச முடியாத அகங்காரிகள்
ஆண் பெண் படைப்பினத்தின்
உலக முதற் போராளிகள்
சினந்தெழும் வீரர்களின்
சிதைவுகள் தடுக்கும் மந்திரிகள்
பொய்மைகளை அழிப்பதில்
பெருஞ்சூறாவளி
அமைதிக்காய் அடங்குவதில்
அடிமையாய் அடங்காமையில்
அச்சமூட்டும் எரிமலைகள்
இயலாமை இழிசெயல் உமிழ்வோரில்
கனன்று தீ மூட்டுபவர்கள்
எதுவந்து எமைச் சூழ்ந்திடினும்
எஃகுவாய் நிற்பவர்கள்
உடலத்தின் பலவீனம்
மலினப்படுத்தப் படும்போது
உங்கள் அவமான
முகமூடிகள் கிழித்தெறிந்து
சிரிக்கும் குறியீடுகள் நாங்கள்
உங்கள் மதிப்பீடுகளில் மதிப்பிழந்து
உணர்வுகள் மதிக்கப்படப் போராடும்
உலகத் தனி யினம் நாங்கள்
பெருமழையாய் பெய்து
காட்டாறாய் ஓடி
கடலிடம் கலக்கையில்
எங்கள் பெயர்கள்
வரையப் பட்டுக் கொண்டேயிருக்கும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக