ஞாயிறு, 9 ஜூன், 2013

இறகு வாழ்வு

இறகாய்  வாழ்ந்திடு 
கழன்றதும் பறந்திட 

வானம் கேட்டுப் பொழியவில்லை 
பூமி கேட்டதில் நனையவில்லை 
சிலிர்த்ததில் திளைக்கிறதே
குளிர்ந்து தளிர்க்கிறதே 

பகலவன் பரவலில் பரவசம்  
பாதி நாளின் உயிர்த் துடிப்பு  
தண்மதி கிறங்கி உலா வரும் 
மீதி காதலர் கனவுகளில்  

இணையாய்க் குலவும் பட்சிகள் 
கெஞ்ச வைக்கும் தம்மியல்பை 
கொஞ்சிப் பறந் தோடுகையில் 
சுதந்திரம் தனைச் சொல்லிப் போகும் 

மலர் விரிதலில் மென்மை மெலிதாகும்
இலவசக் காற்றில் சுகந்தம் நாசி தொடும்  
வண்ணக் குவியல் கண்களை விரிக்கும் 
இயற்கை விசித்திரம் மூச்சை முட்டும் 

இனிதே வாழ்வென உணர்த்தும் 
எம்மையும் தாங்கிச் சுழலும் பூமியில் 
எனக்கென எதையும் இறுக்கி கொண்டு 
உனக்கே சுமையாய் வாழ்வதேனோ 

இறகாய் வாழ்ந்திடு 
கழன்றதும் பறந்திடலாம்

வி. அல்விற்.
07.06.2013.

கருத்துகள் இல்லை: