வெள்ளி, 21 டிசம்பர், 2012

இனி ஏதுமில்லை!

மேனிதனில் ஏறி
பவனிவர களித்திருந்தாய்
ஏலேலோ பாட்டுவர
மலர்ந்து சிலிர்த்திருந்தாய்

கதிரவனின் இளஞ்சூட்டில்
தகதகத்தாய் குமரியாய்
திங்களது பட்டொளியில்
குளிர்ந்து மனமகிழ்ந்தாய்

பாய் விரித்து வந்து நிலம்
கவர்ந்தவரை சுமந்தாய்
மேவி நின்ற அவாவில் உன்
மேலேறி சென்றவர்
குற்றங்கள் சகித்தாய்

அடிமைகள் பயணிக்கையில்
அவர் கண்ணீரை ஏந்தினாய்
வீரத்துக்கும் இடம்கொடுத்து
வில்லங்கத்துக்கும் துணைபோய்
மௌனித்திருந்தாய்!

தாங்கும் வரை தாங்கி
தரை பார்த்து நின்றவளை
உலுப்பியது யாரங்கே
நளினச் சிரிப்பலை அன்று
பேயாய் வெறி கொண்டதேன்

கால் தொட்டுச் சிலுசிலுத்தவள்
பொங்கி உயர்ந்ததேன் 
கொட்டிக் கொடுத்து
குதூகலமாய் வாழ வைத்தவள்
கொடூரமாய் வாரி
விழுங்கிக் கொண்டதேன்

உன்மேனியில் மயங்கியோர் அன்றுன்
கோரமுகம் கண்டு ஒலமிட்டதை
கண்டும் கணக்கிடாமல்
அமிழ்த்தி அடக்கிட்டாய்
அடுக்குமா உனக்கிது
தாய் என்றுனை அழைக்க
இரக்கமில்லா இதயத்தவளாய்
முழுதாய் விழுங்கிட்டாய்

உன் வாசல் மண்ணில்
சாய்ந்திருந்து கதை பேசினோர்
பைத்தியமாய் தம் உறவுதேடி
அதே வாசலில் அலைகின்றனர்
தகவல் ஏதும் தருவாயோவென
ஏங்கித் திரிகின்றனர்

நடந்து களைத்து
ஓடித் துவண்டு
ஏதிலியாய்த்  திரிந்தவரில்
நீயும் உன் பங்கை
வாரிக் கொண்டாயோ 

ஏக்கமும் மாறா நினைவுச்சுழியும்
மீழவொண்ணா வாழ்க்கையும்
எமக்கென்றே விதிக்கப்பட்ட ஒன்றா
இன்னொருதரம் பொங்காதே!-நீ
தந்ததை சரிசெய்ய.....
இன்னுமே முடியவில்லை

புண்பட இனி இடமேயில்லை
வாரிக் கொள்ளவும் இனி
எதுவுமேயில்லை!!

கருத்துகள் இல்லை: