திங்கள், 13 மே, 2013

ஏரிதழல்


எரிதழலில் வெந்து அழிந்த 
எரியாக் கனவுத் தேசம் 
எத்தனை முகம் கொண்டு
பகுத்தின்று எறிந்திட்டதே 
அத்தனையும் சிரம் கொளாது 
பித்தராய்ப் பிதற்றுகின்றதே

குற்ற மெங்கணும் காணில் 
சுற்றமது போய்விடுமே 
பத்தோடு பதினொன்றாய் 
வீழ்வதில் என்ன பலன் 
பற்றோடு ஏற்றம் பெற 
பெற்றிடுவீர் பெரு வீச்சம் 

பட்ட மரமாச்சே பூமி 
பட்டினியில் அழுந்துகிறதே
கத்து கடல் நந்தவனம் 
கத்திப் பரிதவிக்கிறதே
விட்டகலாக் காட்சிகளே 
வெஞ்சினத்தின் வேராயிற்றே  

சித்தமெலாம் கலங்கி மீதி 
செத்தவராய் திரிகின் றனரே 
புத்தன் வந்து புத்தி சொல்லுவனோ 
பெற்றவர் தொலைத்ததை 
பெற்றுக் கொடுப்பானோ 
பற்றும் வளைக்கரம் காத்திடுவானோ 

எத்தகை பாவம் செய்த தென் மண் 
இத்தனை உடலம் வீழ்வதற்கு
மந்தையாய் போகாதீர் மாண்புடையீர்  
எந்தையும் தாயும் சேர்ந்த நம்மண் 
சிந்தை தெளிவோடு கூர்வன செய்வீர் 
மெத்தனம் பண்ணாது வித்தகம் செய்வீர் 

கருத்துகள் இல்லை: