மீண்டு வரும் இந்த நாளில்
நம்பிக்கைகளும் பிடிப்புக்களும்
உதிர்ந்து முடிந்தன
தண்ணீர் காணா பாலை நிலமாயிற்று
வெறு வெளியில்
ஈரமில்லா மனிதர்கள்
தடிப்பான கால்களால் மிதித்து
தமக்குள் மகிழ்ந்து கொண்டனர்
ஆகாய வெளியெங்கும்
மோதி எழுந்த குரல்கள்
எந்தச் செவிப்பறையையும்
சென்றடையவேயில்லை
எழுதப்பட்ட மனித உரிமைச் சாசனங்கள்
மூடியபடியே கிடந்தன
உரிமைகளும் சுதந்திரமும்
வாழ்வும் வளமும்
பலமுள்ளவனுக்கே யென
கன்னத்திலறைந்து
சொல்லிப் போன நாளிது
நாகரிக உலகின் நிர்வாணம்
பிரபலப் படுத்தப்பட்ட நாளிது
வி.அல்விற்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக