புதன், 9 செப்டம்பர், 2015

என் பிரிய சிசுவே!

கழுவித் துடைத்த வானம் போல
தெளிவாயிருந்தது உன் வரவு
வானவில்லின் வண்ணக் கோலத்தையும்
வாண வேடிக்கையின் அட்டகாசத்தையும்
சுமந்திருந்ததாக எண்ணியிருந்தேன் 
எதுவோ வந்து 
குலைத்துப் போட்டிருக்கிறது
உன் அழகனைத்தையும்

வெடிச்சரங்களை கொழுத்திப் போட்டுள்ளாய்
என் தலைக்குள் 
அவற்றின் ஒவ்வொரு சிதறல்களிலும்
தினமும் கருகிக் கொண்டிருக்கிறேன் 

சரியானவை என்றெண்ணியவை
கேள்விகளாகி உருக் கொண்டாடுகின்றன
சரிகளை வரையறுப்பதும்
பிழைகளை முறைப்படுத்துவதும் எது?

காலம் சரிவதற்குள் 
முறைப்படுத்திவிட நினைக்கிறேன் 

பிரியமான என் சிசுவே!

உன்னை கைகளில் மீண்டும் தாங்கி
உன் பேரழகை மீட்டுவிட வேண்டும் 

சுயநலமுள்ள ஓர் அன்னையாக
சுயநலமுள்ள ஒரு குழந்தையாக
நீயும் நானும் மீளப் பிறந்திட வேண்டும்.


வி. அல்விற்.

கருத்துகள் இல்லை: