புதன், 2 மே, 2012

திசை மாறி

செந்தூரன் இங்கு வந்து நான்கு வருடங்கள் இருக்கும். ஐரோப்பாவிலே உள்ள மற்றைய எம்மினத்தவர்கள் போலவே நேரம், காலம் பாராமல் வேலை செய்து கொண்டிருந்தான். மனைவி பிள்ளைகள் இன்னும் ஊரிலேயே இருக்கிறார்கள். இதுவரை அவனது மனைவி எழுதிய கடிதங்கள் முழுவதுமே அவர்களுடைய மூத்த மகனைப் பற்றியதாகவே இருந்தது. அவர்களுடைய மகனுக்கு பதினாறு வயது. அடிக்கடி நடை பெற்ற இடப்பயர்வுகளால் கல்வியைத் தொலைத்து விட்டிருந்தான். "அவனை இங்கே  வைத்திருக்கப் பயமாக இருக்கிறது. குளப்படியாயிருக்கிறது. அங்கே  கூப்பிட்டுக் கொள்ளுங்கோ. "என்று ஒரே புலம்பலாயிருக்கும். அவனோ என்ன செய்வான் வந்து இரண்டு வருடங்களில் வந்து சேர்ந்த கடன் முடிக்க வேண்டும்; குடும்பத்துக்குப் பணம் அனுப்ப வேண்டும்; தன்னுடைய செலவு பார்க்க வேண்டும்...இப்படி எல்லாவற்றுக்கும் மாதக் கடைசியை எதிர்பார்த்திருப்பான். இதற்குள் மகனைக் கூப்பிட வேண்டும் என்றால் இலகுவான விடயமா? ஆனாலும் என்ன கூப்பிட்டே ஆக வேண்டும், வேறு வழி இல்லை.

இங்கே தானே "தனியார் நடமாடும் வங்கிகள்" உலா வருகின்றன. அறா வட்டிக்கு கடன் வாங்கி மகன் வினோவைக்  கூப்பிடும் ஒழுங்குகளைச் செய்து  முடித்து விட்டாயிற்று. இனி வந்து சேரு மட்டும் நெஞ்சிடிதான். ஏற்கனவே உள்ள சிக்கல்களுடன் இதுவும் சேர்ந்து அவனை செக்கு மாடக்கியதுமகன் வந்து சேர்ந்தவுடன் படிக்க அனுப்ப வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தான். . இளம் வயதானதால் இலகுவில் இந்நாட்டு மொழியைக் கற்றுக் கொள்ள முடியும் என்று தனக்குளே கணக்குப் போட்டுக் கொண்டான். கொண்டான். காலம் வினோவை கொண்டு வந்து சேர்த்தது. செந்தூரனுக்கு அவன் வந்துசேர்ந்ததே மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது. ஆனால் மகன் வந்து சேர்ந்து இறங்கிய கோலம் கொஞ்சம் யோசிக்க  வைத்தது. தான் குடும்பத்தைப் பிரிந்திருந்த இரண்டு வருடங்களும் ஏற்படுத்தயிருந்த மாற்றங்கள் மகனில் காணக் கூடியதாக இருந்தது. மனைவி எழுதிய கடிதங்கள் சரியாகத் தெரிந்தது.

உடனடியாக அவனுடைய பதிவுகள் அனைத்தையும் முடித்து பாடசாலையில் சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கினான். முதல் வருடம் மொழியில் சிக்கலுள்ள ஒரு வகுப்பில் கற்க விடப்பட்டான்அவனுடைய வயதில் வந்த எத்தனையோ பிள்ளைகள் அந்த நிலையைக் கடந்து தமது வயதுக்குரிய வகுப்புக்களில் பின்னர் சேர்க்கப்பட்டனர். கரை சேர்ந்துமுள்ளனர். ஆனால் வினோ ஊரிலேயே "படிப்பு" என்பதை மூட்டை கட்டி விட்டிருந்ததால் அவனால் சமாளிக்க முடியாமல் போய்க் கொண்டிருந்தது. அது தண்டனையாகப் பட்டது. தகப்பனுக்குத் தெரியாமலேயே   பாடசாலைக்குப் போவதை தவிர்த்துக் கொள்ளத்  தொடங்கினான். தகப்பன் பல முறை பாடசாலை நிர்வாகத்தினால் அழைக்கப்பட்டிருந்தான். இறுதியில் பாடசாலை அவனை வைத்திருக்க முடியாத நிலையே தோன்றி விட்டது. சரி ஒரு தொழில் கல்வியாவது கற்றுக் கொள்ளட்டும் என்று ஆலோசனை சொல்லத் தொடங்கினான் செந்தூரன்.

"ஏதாவது ஒரு தொழில் கல்வியாவது செய்யலாம் தானே, இங்கை தான் எவ்வளவோ செய்ய இருக்குதுவினோ பதில் பேசவில்லை. "உன்னோடைதான் கதைக்கிறன். வந்து இரண்டு வருசமாகுது; படிக்கவும் மாட்டேன்  என்டுறாய் ஏதாவது தொழில் பழகினாலாவது  உனக்குப் பிறகு பிரயோசனைப்படும்".  "ம்ம்ம்  பாப்பம்". "என்ன பாப்பம் , ஏதாவது ஒரு முடிவுக்கு வர வேணும் தம்பி." "ஓம் சும்மா கத்தாதயுங்கோ". "என்ன நான் கத்துறேனோ? உன்னை இஞ்சை நான் கூப்பிட்டது என்ர பிழை".  "ஏன் நானோ என்னைக் கூப்பிடச் சொன்னனான்". செந்தூரன் கட்டு மீறி வந்த  கோபத்தை அடக்கிக் கொண்டு " நீ என்ன செய்வியோ தெரியாது எங்கயாவது பதிஞ்சு முதல் ஏதாவது செய்" சொல்லி விட்டு வேலைக்குக் கிளம்பி விட்டான்.

காலம் கடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. இப்பொழுதெல்லாம் வினோவுக்கு சில நண்பர்கள் சேர்ந்து விட்டிருப்பதும் அவர்களுடன் அடிக்கடி வெளியே செல்வதும் தொடங்கியிருந்தது. செந்தூரன் மகனுடன் பேச முற்பட்டபோதெல்லாம் ஒரு முறுகலான நிலைமை தோன்றத் தொடங்கியிருந்தது. "வினோ எங்கை தம்பி போயிருந்தாய் , அந்தப் பிள்ளைகள் ஆர்?"
"அவை எனக்குத் தெரிஞ்ச ஆக்கள்"...
"அதுதான் ஆர் எண்டு கேக்கிறன், வாழ்க்கைக்குத் தேவையான ஏதாவது ஒண்டை செய்யிறதை விட்டிட்டு இப்பிடி சுத்தித்  திரிஞ்சால் சரி வராது தம்பி"....
"! அப்ப நான் இஞ்ச உங்களோடை இருக்கிறது உங்களுக்குக் கரைச்சலா இருக்குது போல" வினோவின் பேச்சு வயதுக்கு மீறியதாய் இருந்ததுசெந்தூரனுக்கு அவனைப் பிடித்து நாலு சாத்துச் சாத்த வேண்டும் போல இருந்தது. ஆனாலும் அதனால் பயன் இல்லை என்று விளங்கியதால் அத்தோடு விட்டு விட்டான். மகனின் பிரச்சனை அவனுக்குத் தீராத தலையிடியாக இருந்தது. அடுத்த நாள் அவனுடன் சேர்ந்து சுற்றும் நண்பர்களின் தகவல்களை சேகரிக்க முற்பட்டான். அவர்கள் யாருமே "ஒழுக்கமான" வட்டத்துக்குள் வரவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நாட்டு நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது. இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்குமாப் போல் ஒரு எண்ணம் எல்லோருடைய மனதிலும் தோன்றத் தொடங்கியிருந்த நேரம் அதுஇரவு பகலாக உலகத் தமிழ் மக்கள் கண்விழித்திருந்து உலக நாடுகளை விழித்தெழ வைக்க முடியும் என்று எண்ணியிருந்த காலம் அது. செந்தூரனுக்கும் பங்கு பற்ற வேண்டும் என்று ஆசை தான். ஆனால் அவனுடைய வீட்டுப் பிரச்சனையால் ஒரு நாள் வேலை முடியப் போய் தலை காட்டி விட்டு வந்ததோடு சரி அதற்குப் பிறகு போக முடியவில்லை.
அன்று இரவு அவன் வேலையால் வந்து சமையல் செய்து விட்டு மகனோடு சேர்ந்து சாப்பிடுவதற்காகக் காத்திருந்தான். காத்திருந்து களைத்துப் போய் அடுத்த நாள் வேலையை எண்ணி படுத்து விட்டான். வினோ விடியற்காலை மூன்று மணியளவில் வந்து படுத்தது தகப்பனுக்குத் தெரிந்திருக்கவில்லை. காலையில் வேலைக்கு எழுந்திருந்தபோது தான் அவன் படுத்திருந்ததைப் பார்த்தான். இன்று இரவு இவனுடன் அமைதியாகப் பேச வேண்டும். இவனை ஒரு வேலைக்காவது அனுப்பினால்தான் தேவையில்லாத சகவாசத்தையாவது விட்டு விடப் பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டே வேலைக்குப் போனான்.

அன்று வேலையிடத்தில் செந்தூரனுடன் வேலை செய்பவர்கள்  நாட்டுப் பிரச்சனையின் உக்கிரத்தைப் பற்றிப் பேசி கொண்டிருந்தார்கள். எல்லோரும் வேலை முடிய ஒன்றுகூடும் இடத்துக்குப்  போகப் போவதாகப் பேசிக் கொண்டார்கள். இரவு ஒரு ஒன்பது மணி வரைக்குமாவது அந்த இடத்தில் நின்று  விட்டுப் பிறகு வீட்டுக்குப் போகலாம் என்று எண்ணிக் கொண்டான்.
ஒன்று கூடும் இடத்தை அடைந்தவுடன் பலருடைய முகங்கள் இறுக்கமடைந்திருந்ததைப்  பார்க்க வேதனையாகவிருந்தது. இளைஞர்கள் கத்திக் கத்தி குரலிழந்துகொண்டிருந்தார்கள்உறவுகள் கொடிகளைப் பிடித்தபடி உருகிக் கொண்டிருந்தன. காவற்படையினர் சுற்றி நின்றிருந்தனர்.
திடீரென்று நின்றிருந்த இடத்திற்குக் கொஞ்சத் தூரத்தில் ஏதோ குழப்பம் ஏற்படுவது தெரிந்தது. காவற்படையினர் அந்த இடத்தை சுற்றி வளைப்பதும் தெரிந்தது. சிலர் அந்த இடத்தை நோக்கி ஓடினர். என்னதான் நடக்கின்றது என்று பார்க்க செந்தூரனும் முன்னே நடந்தான். காவற்படையினர் சிலரை இழுத்துச் செல்வது தெரிய, கூர்ந்து பார்த்தவன், வினோவும் அதில் ஒருவன் என்று தெரியவும். "தம்பி வினோ" என்று காத்த வாயைத் திறந்தவனை அருகில் கேட்ட வார்த்தைகள் தடுத்தன. "அவங்கள் காசைக் குடுத்து எங்கடை ஆக்களைக் கொண்டே குழப்ப நிக்கிறாங்கள்; இதுகள் எங்கடையள் திருந்தாதுகள்".
அன்று விடியுமட்டும் செந்தூரன் அங்கிருந்தவர்களுடன் நின்றிருந்தான்.

கருத்துகள் இல்லை: