செவ்வாய், 22 மே, 2012

மூன்றாம் மாடி


1997 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் நாங்கள்  பரிஸ் புறநகர்ப்பகு ஒன்றில்  வசித்துக் கொண்டிருந்தோம். எனது மகன் பிறந்திருந்த சமையம் அதுநாங்கள் வீட்டின் நான்காவது மாடியில் குடியிருந்தோம். மிக விசாலமான நகர் அது. அதிகாலையில் எனது கணவர்  வேலைக்குப் போனதும் நானும் மகனுமாக மெதுவாக எழுந்து குளியல் முடித்து, சாப்பிட்டு, விளையாடி பின்னர் வெளியே சற்று உலாவி திரும்பி வந்து மீண்டும் மதியம் சாப்பிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு மாலை நகர் வலம் காணப்  புறப்பட்டு விடுவோம். எமது வீட்டிலிருந்து ஐந்து நிமிட  நடை  தூரத்தில் ஒரு மிகப் பெரிய பூங்கா இருந்தது. (இன்னும் இருக்கிறது).

மாலையில் அநேகமாக அந்தப் பூங்காவுக்குப் போய் விடுவேன் எனது மகனுடன். வேலை முடிந்த பின்னர் எனது கணவர் நேராக பூங்காவுக்கு வந்து விடுவார். பின்னர் அங்கிருந்து எல்லோருமாக வீட்டுக்குத் திரும்புவோம். இப்படி கவலையில்லாமல் கழிந்த  மிக்க மகிழ்ச்சியான தருணங்கள் அவை.

இந்த நேரத்தில் எமது குடியிருப்பில் மூன்றாவது மாடியில் எமது வீட்டுக்கு கீழே ஒரு தமிழ்க் குடும்பம் வந்து சேர்ந்தது. கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் என்று அழகான அளவான குடும்பம். அந்தப்  பெண் மிக இளமையாகவும் அழகாகவும் இருந்தாள். அந்தப் பெண்ணின் கணவன் கணவன் மிக இலகுவாக யாருடனும் பழகும் சுபாவமுடையவராய்த்  தெரிந்தார். கண்களின் சிவப்பும் வீக்கமும் அவருடைய பழக்க வழக்கங்களை அப்பட்டமாகக் காட்டினநான் இலகுவில் யாருடனும் பழகும் குணமுடையவள் அல்ல. முகத்தை நிமிர்ந்து பார்த்துச் சிரிப்பதுடன் சரிஅதற்கு மேலே என்றால் "எப்பிடி சுகமாக இருக்கிறீங்களா?"அவ்வளவுதான். அதற்கு மேலே பேச்சை வளர்க்க விரும்புவது இல்லை. எனக்கு அவர்களை இதற்கு முன்னர் எங்கேயும் பார்த்ததாக ஞாபகம் இல்லை. ஆனால் அவர்களுக்கு எங்களை நன்றாகத் தெரிந்திருந்தது. அவர்கள் நகரின் இன்னொரு பகுதியில்  வசித்துக் கொண்டிருந்து விட்டு இப்போது இங்கே வந்துள்ளார்கள் என்று அந்தப் பெண்ணின் பேச்சிலிருந்து தெரிய வந்தது.
நான் பெரிதாக அடுத்தவர் விடையங்களைக் கவனிப்பது கிடையாது என்கின்ற படியால் எனக்கு அவர்களைப் பற்றி அறிய வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால் எனது கணவர் ஒரு நாள் சொன்னார் அந்த ஆண் வேலை செய்வதில்லை என்று. "ம்ம்" என்று சொல்லித் தலையை ஆட்டி விட்டு இருந்து விட்டேன்.

நான் பெரிதாக அடுத்தவர் விடையங்களைக் கவனிப்பது கிடையாது என்கின்ற படியால் எனக்கு அவர்களைப் பற்றி அறிய வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால் எனது கணவர் ஒரு நாள் சொன்னார் அந்த ஆண் வேலை செய்வதில்லை என்று. "ம்ம்சொல்லித் தலையை ஆட்டி விட்டு இருந்து விட்டேன். அதன் பின்னர் அந்த ஆள்  காணும்போது கதைப்பதாக எனது கணவர் இடைக்கிடையே சொல்லுவார். அந்தப் பெண்ணும் என்னைக் காணும்போது சிரித்தபடியே ஏதாவது கேட்பாள் அல்லது சொல்லுவாள். என்னைப் பொறுத்தவரை பிரச்சனை இல்லாத சாதாரணமான குடும்பம் போலவே  தெரிந்தது. இது சில வாரங்களுக்கு மட்டுமே என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.

ஒரு நாள் ஏதோ பயங்கரமாக விழுந்து உடைவது போன்ற  சத்தம் எங்களைத் திடுக்கிட்டு எழுப்ப வைத்தது. நித்திரைக் கலக்கம் தெளிந்து என்ன நடந்தது என்று யோசிக்க கொஞ்ச நேரம் எடுத்தது. சத்தம் கீழ் வீட்டிலிருந்து வந்தது. எதோ அலுமாரி, கட்டில் போன்ற பாரமான பொருட்கள் விழுந்து உடையும் சத்தம் போன்றிருந்தது. வீட்டிலுள்ளவர்களின் குரல் எதுவும் கேட்கவில்லை. நான் தொட்டிலுக்குள் தூங்கிக் கொண்டிருந்த எனது மகனை எட்டிப் பார்த்தேன். நல்ல வேலை நித்திரை குழம்பியிருக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் நாங்கள் திரும்பவும் படுத்து விட்டோம்.

அடுத்த நாள் இரவும் ஏறக்குறைய அதே நேரம் அதே சத்தம் எங்களைக் குழப்பியது. தொடர்ந்து வந்த அடுத்தடுத்த இரவுகள் எமது மகனது நித்திரையையும் குழப்ப  எங்களுக்கு யோசனையாக இருந்தது. இப்போது சத்தத்துடன் அந்தப் பெண்ணின் " ஐயோ " என்ற அலறலும் கேட்கத் தொடங்க நிலைமை ஓரளவு வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியது. ஒரு நாள் இரவு அந்தப் பெண் நீண்ட நேரமாக "ஐயோ ஐயோ" என்று கத்திக் கொண்டே இருக்க நான் எனது கணவரை எழுப்பினேன். "பாவமப்பா, ஒருக்காப் போய் என்னெண்டு கேட்டுக் கொண்டு வாங்கோவன்; அந்தப்பிள்ளை அடி வாங்கியே சாகப் போகுது " என்று சொன்னேன். எனது கணவர் சொன்னார் "நீங்கள் பேசாமல் படுங்கோ, அவன் ஒரு உதவாத ஆள். நான் இப்ப அவன்ர வீட்டுக் கதவைத் தட்டினால் நீர் ஆர்? எண்டு என்னை அவன் கேட்பான். இது எங்களுக்குத் தேவையா?"
"அப்ப பொலிசில கம்ப்ளைன் செய்வோமே"? எனது கணவர் என்னை முறைத்துப் பார்த்தார். "நாளைக்கு நான் வேலைக்குப் போய் விடுவேன். நீங்கள் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு வெளியிலை போகேக்குள்ள அவன் அவன்ர சிநேகிதங்களோடை நிண்டு ஏதாவது சொல்லுவான் பரவாயில்லையா?" நான் பதில் சொல்ல முடியாமல் படுத்து விட்டேன். எனது கணவர் அவனைப் பற்றி நன்றாக அறிந்து விட்டார் என்பது தெரிந்தது.

ஒரு நாள் நான் எனது மகனுடன் படியேறிக் கொண்டிருந்தேன். மூன்றாவது மாடியினைக் கடக்கும்போது அந்தத் தமிழ்க் குடும்பத்தின் வீட்டுக்கு வலது பக்க வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு அங்கு வசிக்கும் பிரெஞ்சு பெண்மணி வெளியே வந்து எனது கையைப் பிடித்துக் கொண்டார் . "இந்த வீட்டில் என்ன நடக்கிறது? அந்த ஆள் அவருடைய மனைவியை போட்டு அடித்துச் சித்திரவதை செய்கிறார்; உங்களுடைய ஆட்கள் தானே. நீங்கள் பேசக் கூடாதா?" என்று கேட்டார். தாங்கள்  காவல் துறைக்கு அறிவிக்கப் போவதாகச் சொன்னார். "அது உங்களுடைய விருப்பம்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர்களுடைய கதவு திறபடும் சத்தம் கேட்டது. அந்தப் பிரெஞ்சு பெண்மணி பயத்தில் துள்ளிப் பாய்ந்து தன்னுடைய வீட்டுக்குள்ளே போய்க் கதவைச் சாத்திக் கொண்டாள். எனக்கு சிரிப்பாக வந்தது. திரும்பிப் பார்த்த போது அந்தத் தமிழ்ப் பெண் வெளியே வந்தாள். முகம் வீங்கியிருந்தது. எனக்கு என்ன கதைப்பது என்று தெரியவில்லை. வணக்கம் சொன்னாள். நானும் வணக்கம் சொல்லி விட்டு மேலே ஏறிப் போய் விட்டேன்.  

அதற்கு அடுத்து வந்த சில நாட்களில் நான் பூங்காவுக்கு  மகனுடன் செல்லும் போது  அந்தப் பெண்ணும் தனது குழந்தைகளுடன் வந்தாள். தனது உள்ளங்கையை திறந்து காட்டினாள்பயந்து போனேன். வாயு அடுப்பின் நெருப்பிலே வெந்த உள்ளங்கை வட்டமாக பொங்கியிருந்தது. எனக்கு அடி வயிற்றிலிருந்து நோவு மேலெழுந்ததுபிள்ளைகளை விளையாட விட்டு விட்டு நாங்கள் ஒரு மர நிழலில் இருந்தோம். தன்னை பற்றிய சில விடையங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்தாள். நான் பேசாமல் அவள் சொன்னதை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தேன்அவள் தமிழ்ப் பெண் ;ஆனால் இலங்கைப் பெண் அல்ல. இதைக் கேட்டவுடன் எனக்கு கொஞ்சம் அவமானமாக இருந்தது. அவன் முகவராக அவளுடைய நாட்டில் இருந்த போது, அவளுடைய ஏழ்மையைப் பயன்படுத்தி தன்னுடைய மிகைப்படுத்தப் பட்ட ஆடம்பர வாழ்க்கையைக் காட்டி அப்பெண்ணை இங்குவரை கூட்டி வந்து விட்டான். இங்கு வந்ததும் தான் தெரிந்தது அவனுடைய சுய ரூபம். அவனுடைய முதல் சிக்கல் குடி; இரண்டாவது மோசமான சிநேகிதர் கூட்டம்.

வாழ்க்கை அடி உதை ஏளனப் பேச்சு என்று நரகமாகப் போய்க் கொண்டிருக்கிறது . தனது ஊரிலுள்ளவர்களுடன் பேசவும் முடியாது; தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிப் போகவும் முடியாது. இதை விட இங்குள்ளவர்களுடன் பேசக் கூட பயந்து கொண்டிருந்தாள். ஏனென்றால்  அவர்கள் தனது கணவன் சார்பாகவே பேசுவார்கள் என்று எண்ணி கொண்டாள். அவள் அப்படி எண்ணியதற்கு காரணம் அவனது மோசமான நண்பர்கள். தனது குடும்ப விடையங்கள் அனைத்தையும் அந்தரங்கங்கள் உட்பட தனது நண்பர்களுடன் அவன் தினமும் பகிர்ந்து  கொள்ள அவர்கள் குடும்பம் நடத்துவது எப்படி என்று அவனுக்கு ஆலோசனை சொல்ல எல்லாமே தாறுமாறாக நடந்து கொண்டிருந்தது. அந்தப் பெண் அவமானத்தில் குறுகிப் போய் நின்று கொண்டிருந்தாள்.

எனக்கோ என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. "நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்" என்று கேட்டேன். உங்களுக்கு தமிழ் ஆட்களின் உதவியில் நம்பிக்கை இல்லை என்றால்  சட்டப்படியான சமூக சேவை அமைப்புக்கள் இருக்கின்றன அங்கு உதவி பெறலாம் என்று சொன்னேன். அதற்குப் பின்னர் தான் சொன்னாள் தான் ஏற்கனவே நகரசபை உதவியுடன் தனது கணவனை விட்டு விட்டு அவர்கள் தங்கச் சொன்ன இடத்தில் தங்கியதாகவும் அந்த நேரத்தில் அவன் போய் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு திருப்பி அழைத்து வந்ததாகவும் சொன்னாள். ஆனால் அவன் திருந்தும் ஆளாகத் தெரியவில்லை. திரும்பத் திரும்ப அதே சிக்கல் தொடர்ந்தது. எனக்கு ஆலோசனை சொல்ல லேசாகப்  பயமாக இருந்தது. தவறான ஆலோசனைகளால் பாழாகிப் போனவர்களையும்  பார்த்திருக்கிறோமல்லவா? எது எப்படியாயினும் என்ன செய்வது என்று முடிவு எடுக்க வேண்டியது அந்தப் பெண் தான். அதன் பிறகு என்ன உதவி செய்யலாம் என்று பார்க்கலாம்  எண்ணிக் கொண்டேன். ஆனால் ஏற்கனவே அவளது சிக்கல் நகரசபைப் பதிவில் இருந்ததால் அதற்கும் தேவையில்லைப் போலிருந்தது.

நானும் அந்தப் பெண்ணும் பேசிக் கொண்டிருந்தபோது அவளது கணவன் வந்தான் அவர்களை அழைத்துப் போக. அந்தப் பெண்ணுக்கோ வீடு திரும்ப மனமில்லை. அவனுக்கோ அந்தப் பெண் என்னிடம் தன்னைப் பற்றி ஏதாவது சொல்லி விடுவாளோ என்ற யோசனை போல. இரண்டு தடவை "வாங்கோ நேரம் போய் விட்டது" என்று சொல்லி அந்தப் பெண்ணைக் கூப்பிட்டான். அவள் கேட்காதது போல்  இருக்க, என்னைப் பார்த்து  "நேரம் போய் விட்டுது நீங்க வீட்டை போங்கோவன் அக்கா" என்று சொன்னான். எனக்கு கோபம் சுர்ரென்று  உச்சி வரை ஏறியது. அவனைத் திரும்பிப் பார்த்துச் சொன்னேன் " நீர் விருப்பமெண்டால் உம்முடைய மனிசியைக் கூட்டிக் கொண்டு போம்! நான் எப்ப வீட்டை  போக வேணும் எண்டு எனக்குத் தெரியும்" என்று. எனக்கு ஆத்திரம் தாங்க முடியாமல் இருந்தது. எனது கணவர் என்னிடம்  "நீ" என்ற ஒரு வார்த்தையைக் கூடப் பாவிப்பதில்லை. எனவே என்னால் அவனுடைய வார்த்தைகளை ஏற்க முடியாமல் இருந்தது. அந்தப் பெண் சடாரென்று எழுந்து பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு நடக்கத் தொடங்கினாள். பார்க்க கவலையாக இருந்தது. அவன் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான். இன்று இரவு சத்தம் அமோகமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டேன்.

இது நடந்து அடுத்த சில நாட்களாக அந்தப் பெண்ணை வெளியே பார்க்க முடியவில்லை. ஒருநாள் மாலை  அந்தப் பெண் வந்து கதவைத் தட்டி வீட்டுத் திறப்பை என்னிடம் கொடுத்துச் சொன்னாள் "அக்காஇவர் திறப்பை மறந்து போய் வெளியே போய் விட்டார். நானும் அவசரமாக வெளியிலே போக வேணும் ஒருக்கா குறை நினைக்காமல் குடுத்து விடுவீங்களா? " என்று. என்னைக்குப்  பிழையாக நினைக்கத் தோன்றவில்லை. சரி என்று சொல்லி வாங்கிக் கொண்டேன். என்னுடைய கணவர் அந்த ஆள் திரும்பி வரும் வரை பார்த்திருந்து திறப்பைக் கொடுத்தார்அவன் அதை எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது.
அதற்குப் பிறகு அந்தப் பெண்ணை நான் பார்க்கவில்லை. தன்னுடைய முடிவுடன் பிள்ளைகளுடன் வெளியேறி விட்டதாக பின்னர் அறிந்தேன். நகரசபை அவளுக்கும் குழந்தைகளுக்கும் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்திருந்தது. எனக்கு மனதுக்கு ஆறுதலாக இருந்தது. மனதாலும் உடலாலும் இனிக் காயப்பட மாட்டாள் என்று எண்ணிக் கொண்டேன். பெண் அடக்கியாளப்படவேண்டியவள் என்று நினைக்கும் முட்டாள்களுடன் முட்டிக் கொண்டிருப்பதை விட முறித்து குறைந்த பட்சம் அமைதியுடனாவது வாழ்வது மேல். காலம் கடத்தாமல் தனது வாழ்க்கையைத் திருத்திக் கொண்ட அந்தப் பெண்ணை மனதுக்குள் பாராட்டிக் கொண்டேன்.
அப்போதிலிருந்து நாங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறும் வரை மூன்றாம் மாடி சத்தம் ஓய்ந்திருந்தது.





கருத்துகள் இல்லை: