புதன், 16 மே, 2012

நாசமாய்ப் போனதே

நாசமாய்ப் போனதே என் தாய் தேசம்
கண் முன்னே சிதறி
நாசமாய்ப் போனதே என் தாய் தேசம்

யார் எம்மை வென்றனர்
அருகிருந்த இனமா?
அண்டை நாடா ?
கூட்டுத் திட்டங்களா?
யார் எம்மை வென்றனர்?
எது எம்மை வென்றது?

கூடிக் கிடந்து
காட்டிக் கொடுத்தாயே
கூட்டமாய் நின்று
காட்டிக் கெடுத்தாயே
யாரென்றும் பாராது
எதுவென்றும் நினையாது
ஏகத்துக்கும் விரைவில்
விலை போனாயே

ஒற்றுமை பேசும்போது
வேற்றுமை தேடினாய்
குற்றங்கள் கண்டெடுத்தாய்
கொலை கொலை என்றாய்
சர்வாதிகாரி என்றாய்
சரளமாய் விமர்சித்தாய்
சந்தர்ப்பம் தேடினாய்
சரித்து வீழ்த்த

என்ன நினைத்தோம்
எதைக் கனாக் கண்டோம்
நம்பிக்கை ஒன்றையே
நட்டு வைத்திருந்தோம்
பலன் தரும் நேரத்தில்
கோடரி அதனடி வைத்தாயே
தன் விரல்களால் தன்னையே
குத்திக் கொண்டதே என் இனம்

ஒன்றா இரண்டா
எத்தனை காலக் கனவுகள்
நாமெல்லாம் தூர
தேச வாசிகளாக
நமக்காக காயம் பட்டு
அடிபட்டு தேகமெலாம்
நிறம்மாறி வழிய
சிரித்து மட்டும் சிலரால் -இது?
எப்படி முடிந்தது?

மாதங்கள் வாரங்களாகி
வாரங்கள் நாட்களாகி
நாட்கள் மணித்துளிகளாகி
இறுதிக் கணங்களில்
அடங்கும் வரை
நம்பிக்கொண்டே இருந்தோம்
எல்லாமே சரியாக நடக்கும் என
பிழைத்ததை அறியாது

தேசம் எரிந்தபோது -என்
உடலெல்லாம் எரிந்தது அதன்
அனல் வந்து புயலாய்
பலமாய்த் தாக்கியது
பிண வாடை கண்டம் கடந்து
மூச்சை அடைத்தது
குறுகியே போனேன்
குற்ற வுணர்ச்சியால்

குழந்தைகளின் கூக்குரல்
குடைகின்றது மண்டையை இன்னும்
குதறப்பட்ட உடலங்கள்
கேவலமாகப் பார்த்தன எம்மை
கோர முகங்கள் இளித்துக் கிடந்தன
நாசமாய்ப் போன என் தேசமே
தவிர்த்திருக்கலாமோ??? இதனை
ஒன்றாய் இருந்திருந்தால்!!!

என் இனமே இனிமேலாவது
விழித்துக் கொள்!
அடம்பன் கொடியாயிரு
காற்றில் அறுபடும்
பருத்தி நூலாயிருக்காதே

பிண வாடையையும்
எரியுண்ட சடலங்களையும்
வீரப் பெண்களின்
மான ஓலங்களையும்
குழந்தைகளின் அலறல்களையும்
என்றும் மறக்காதே
ஆணி கொண்டெழுதி விடு

மறுபடி உன்னை உலுப்பிக் கொள்

கருத்துகள் இல்லை: