செவ்வாய், 22 மே, 2012

ஊறணி


! என் தாய் மண்ணே!
ஒ என் பிறந்தகமே!
! எம் ஊரணியே!
என்னை ஏன் அழைக்கின்றாய்?

சத்தம் இன்றி
மணலேறும் வெண் நண்டு
சுத்திப் பார்த்து
வளை தேடிடுமே
தத்திக் கால்கள்
தொட்டோடுமலை
நித்தம் தாலாட்டும் ஆராரோ!
தத்தெடுத்து எம்மை
செல்வராக்கியே
எத் தகை வாழ்க்கை
தந்தாயே எமை
எத்துணை வாழ
வைத்த கடலம்மா (! எம் ......)

சிற்றூரின் நடுவிலே
காவலனாய்
ஒற்றுமை  தந்து
நின்ற புனிதரே
ஏற்றம் கண்ட
ஆனித் திருநாட்களும்
மாற்றம் காணும்
அலங்காரப் பவனியும்
சுற்றம் கூடி
திருத்தலம் அமைத்ததும்
சற்றும் மாறாத
நினைவலைகள்
பற்றுக் கூட்டி
வரும் எண்ணங்கள் (! எம் ......)

நிரந்தரம் என்றே நினைத்திருந்தோம்
வரம் தர காலம் மறுத்ததால்
தூர தேசம் தேடிப் போகையில்
காலத்தின் விடுதலைத் தேவையை
தாங்கித் தோள் தரச் சென்ற எம்
வீரப் புதல்வரை மறப்பதாகுமா? அவர்
நாடிச் சென்றது மீளக் கிடைக்குமா?
கண்ணீர் சொரிய அஞ்சலி
ஊரவர்களின் அஞ்சலி
அஞ்சலி அஞ்சலி
சொந்தங்களின் கண்ணீர் அஞ்சலி.  (! எம் ......)

கருத்துகள் இல்லை: