திங்கள், 28 ஏப்ரல், 2014

பந்தம்.

பந்தம்.

ஒட்டி உறவாடவும் விடாது 
விட்டு விலகவும் முடியாது 
அந்தரிக்கும் ஆத்மா போல 
என்ன பந்தம் இது?
சுமையாய்க் கழிந்த இரவுகளும் 
அதில் அலையுண்டு 
இறவாது மிச்சமிருக்கும் கனவுகளுமாக
நெடுந்தூரப் பகல்களும் யுகங்களாக 
நடக்கின்றோம்
தொலைத்து விட்ட பெறுமானம் தேடி
ஏனென்று கேட்காத பரிதவிப்பும்
கேட்டால் புகைந்தெழும் எரிச்சலும்
கூடவே இருப்பதால் வரும் சலிப்பும்
எட்டவிருந்தால் உலுப்பும் பாசமுமாய்
மனது மிதக்கிறது கலங்கியபடி
அறிவு அமைதியாய் இருந்துபார் என்கின்றது
அன்பு ஆழ்ந்திருக்கச் சொல்லுகின்றது
அவலங்களின் சாத்தானான ஆசைப் பேராழியில்
அமிழ்ந்து போகப் பார்க்கின்றன உறவுக் கப்பல்கள்
கயிறை விடவும் முடியவில்லை
அறுபட்ட பட்டமாய் ஆக மனமும் இல்லை
சமரசம் ஒன்றே சிறந்த தெரிவாயுள்ளது
சமூகத்திலிருந்து விலகி விடாதிருக்க.

வி. அல்விற்.
24.04.2014.

கருத்துகள் இல்லை: