கழுவும் மழை.
வெப்பம் பரவியுள்ள நிலப்பரப்பில்
ஒரு துளி நீருக்கான காத்திருப்பில்
பரிதாபப்பட்ட ஜீவன்கள்போல
முகில் கூட்டங்கள் கருமைக்கு மாற
சில்லென்று காற்று தொட்டு விலகுகிறது
மௌனமாகப் பேசிக் கொள்ள
மழை மட்டுமே போதுமாயிருக்கிறது
அவளுக்கு இப்போதைக்கு
வான் பார்த்து நிமிர்ந்த முகத்தில்
முத்தங்களாய் விழுந்த சிதறல்கள் போல
அவளின் நீண்டு செல்லும் கனவுகளில்
அவ்வப்போது துளிகளாய் வந்து விழுந்து
விலகிச் செல்லும் உயர் வரன்கள்
விலைபேசி கொதிப்பேற்றுகின்றன
வேகமெடுக்கும் மழைப்பொழிவில்
குளிர்மை ஏற்கும் வெம்மைப் பரப்பில்
புழுதி கிளம்பும் வாசனையோடு
சிலிர்த்தெழத் தயாராகின்றன விதைவெளிகள்
மழை இப்போது அவளை வென்று நிற்கின்றது
அவளோ இன்னும் வெம்மைப் பொழுதுகளைக்
கடந்துவிட முடியாத நிலையில்.........
ஆனாலும்
மழையை அவளுக்குப் பிடித்திருக்கிறது
யாரும் பார்க்காத வேளைகளில்
அதனோடு பேசும்போது
அது தரையை மட்டுமல்ல
அவள் கண்களையும் கழுவிச் செல்வதால்.
வி.அல்விற்.
26.04.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக