சனி, 18 அக்டோபர், 2014

படலையும் பூட்டும்

படலையும் பூட்டும் 

இரவுகளில் மட்டுமே பூட்டப்படும்
என் வீட்டுப் படலை
திறந்தே இருந்தது 
என் உறவினரின் வருகைக்காக
எந்நேரமும் பகலில்
நான் வளர்த்த சேவலும் கோழிகளும்
என் கையிலிருந்த
அரிசிக் குருனலுடன் 
என் உள்ளங்கைகளையும் 
சேர்த்துக் கொத்தி விட்டு 
பூவரச மரத்திலேறி
நித்திரை கொண்டு விட்டுக்
காலையில் தவறாது
துயிலெழுப்பி 
சத்துணவையும் 
கையில் தந்திருந்தன
நான் பால் கறந்த ஆடுகளும்
கோடிப்புறத்திலிருந்து
முற்றத்தால் மேய்ச்சலுக்கு ஓடுகையில்
என் அழகுக் குரோட்டன் செடிகளை
முன்னுணவாக கடித்து
என் திட்டுக்களுக்குப் பயந்து
பின்னங்கால்களால் உதைத்து
முன்னங்கால்களால் தாவி
பாயும் அந்த முன் வழி
அதற்கு பழக்கப்பட்டதொன்றான
காலத்தில்,
வேலிகளைப் பிய்த்துப் போட்டு
பாதை தவறி மிதித்து வந்தன
ஓநாய்க் கூட்டங்கள்
மூச்சிரைத்து ஓடினவே தவிர
என் வீட்டுப் படலையை
கண்டு கொள்ள முடியவே இல்லை
அவைகளால்
மரத்திலேறிய சேவலும் கோழிகளும்  
அதன் பின்னர் இறங்கவேயில்லை 
மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகளும்
இன்னும் திரும்பவேயில்லை
என்னைப் போலவே
என் வீட்டுப் படலைப் பூட்டு
கறள் பிடித்திருக்கும் இப்போது
திறப்புடன் யாராவது வருவார்களா
என்றும் காத்திருக்கும்
திறந்திருக்கும் பகற்பொழுதுகளில்
உறவினர்களை வரவேற்க.
வி. அல்விற்.
17.10.2014.

கருத்துகள் இல்லை: