ஞாயிறு, 10 ஜனவரி, 2016

அம்மா!

சொற்களைப் பொறுக்கியெடுக்கிறேன்
உன்னை ஆறுதற்படுத்த;
என்னையும்தான்.
நீயும் நானும்
எத்தனை காலம் சேர்ந்திருந்தோம்?
நான்காம் பிறை போலவேயிருக்கிறது
நான் உன்னோடிருந்த காலம்.

தாரகைகள் கூடியிருந்த நாட்களாகவும்
முற்றத்து மல்லிகையின் மணங்களாகவும்
அமாவாசை இருட்டுக் காலங்களாகவும்
மகிழ்ந்தும் இறுகுண்டும் இருந்த காலங்களை
மீட்டிக்கொண்டே இருக்கிறேன்.

எனது பிரிவு உன்னை வாட்டியிருக்கிறது
என்னைப் போலவே.
உன்னை அண்மித்திருக்கும் பயம்
வார்த்தைகளாக அவ்வப்போது
வழுகிக் கொண்டே இருக்கின்றன

என் செய்வேன் அம்மா!

என்னைப் பெற்று மகிழ்ந்தவளே
நீ என்னையும் நான் உன்னையும் தொலைத்து
வெகு நாட்களாகி விட்டன.

கடன் தீர்க்கவாவது
இன்னொரு பிறவி வேண்டும்
ஒரு யுத்தமில்லாத பூமியில்.

வி. அல்விற்.
09.01.2016.

கருத்துகள் இல்லை: