பெண்ணே!
உனது புன்னகை எங்கே போயிற்று?
கண்களின் ஒளி எப்படி மறைந்தது?
தெரு நிறைந்த மக்களிடையே
நீ மட்டும் ஏன் கரும்புள்ளியாகத் தெரிகிறாய்?
இதோ!
உனது பாதை அடைபட்ட தெருவாயுள்ளது
வழியறியாது திணறுகிறாய்.
ஒரு சிறு குழந்தையைப் போல
நீயாகவே தொலைந்து போனாயே!
சிந்திக்கக் கற்றுக்கொடுத்த வாழ்க்கையை
சிறையாக்கி உன்னையே பூட்டிக் கொண்டு விட்டாயே
முன்னொரு பொழுது மகாராணிக்குரிய
அனைத்து செல்வாக்குகளும் உன்னைச் சேர்ந்திருந்தது
பெருமிதம் மிக்க வார்த்தைகளும்
வியத்தகு பார்வைகளும் உன்னைச் சூழ்ந்திருந்தன
சாமரம் வீசுவதற்குப் பலர் காத்திருந்தனர்
உனதருகில் அமர்வதைப் பெரும் பேறாக எண்ணியிருந்தனர்
பச்சோந்திகளை ஒத்தவர்கள்.
தெளிவற்றிருந்து விட்டாய் போதையிலிருப்பவர் போல.
ஓ! பெரும் போதையல்லவா அந்தப் பெருமிதத் திமிர்.
கண்களைச் சற்று மூடி விட்டாய்
உனது ஆடை ஆபரணங்கள் பறித்தெடுக்கப்பட்டுள்ளன
உனது தலைமேல் தெரிந்த ஒளிவட்டம் நீங்கியுள்ளது
உனது வார்த்தைகள் புலம்பல்களாக வடிக்கப்படுகின்றன
இங்கே ‘நீ’ வெறும் சுட்டெழுத்தாகி நிற்கிறாய்
என் செய்வேன்?
தனிமையுற்றிருக்கும் உனதிந்தக் கொடு காலம்
என்னையும் வருத்துகின்றது.
ஆனாலும்
திருத்தப்பட முடியாதபடி
காலம் காத்திருக்காமல் கடந்திருக்கிறது.
வி. அல்விற்.
02.12.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக