திங்கள், 23 நவம்பர், 2015

என் பிரிய சிசுவே!

வழக்கமான நமது சிறு வழிப்பாதையில்
எனது விரல் தொட நானுன் முன் நடந்தேன் 
வழியெங்கும் பூத்திருந்த மலர்கள் 
தினமும் உனதும் எனதுமான
வார்த்தைப் பரிமாறல்களைக் கேட்டு மகிழ்ந்திருக்க
என் பின்னும் பக்கமும் 
அதன் பின்னர் முன்னுமாக நடந்து கொண்டிருந்தாய்
கற்பனைகள் விரியும் கண்களோடு.

பாதை புழுதி நிறைந்திருந்தும் பூக்களின் நறுமணம் 
அதனையும் மேவி இன்பம் அளித்தது
நம்மைக் கடந்து போனவர்களின் புன்முறுவல்கள் 
உன்னை மகிழ்வித்தன என்று நினைக்கிறேன் 
பெருஞ்சிறப்புடைய  நமது உரையாடல்கள் 
உனக்கு உவப்பானதாயிருந்திருக்கும்

ஓ! என் பிரிய சிசுவே!

வேகம் குறையாத இந்நடைப்பயணம் 
உன்னை மெருகூட்டியிருப்பதை உணர்கிறேன் 
உன்னைப் போலவே.

இப்போதெல்லாம் நடைப்பயணத்தைவிட
உரையாடல்கள் வேகம் கொண்டுள்ளன
என்பதும் புரிகிறது  
நான் எட்டிப் பிடிக்கப் பிரயத்தனப்படுகிறேன்
உன்னோடு சமமாக நடக்கவும்
அற்புதமான உரையாடல்களைத் தொடரவும்

இந்தப் பாதை வழியே.

வி. அல்விற்.

03.11.2015.

கருத்துகள் இல்லை: