சனி, 6 அக்டோபர், 2012

நிகழ்காலம்


பயணம் நீண்டதாயிருக்கிறது; மிக மிக நீண்டதாயிருக்கிறது. சேர வேண்டிய இடம் வெகு தூரத்திலிருக்கிறது . உண்மையிலேயே வெகு தூரத்திலிருக்கிறது என்று தெரிந்தே தொடங்கப் பட்டது இந்தப் பயணம். நம் பார்த்திராத இடர்க் காலங்கள் அடங்கலாக இந்தப் பயணத்தின் துன்பச் சுமை நீண்டு செல்வது வரலாற்று துரதிர்ஷ்டம். ஆனால் சேரிடம் பற்றிய கருத்தில் மாற்றுக் கருத்துக்கள்  இல்லை. பயணம் பற்றிய தெளிவு இல்லாதிருந்திருந்தால் அதிர்ச்சியாய் இருந்திருக்கக் கூடும்; ஆனால் எவ்வழியிலும் எதையும் எதிர்பார்த்ததே!
வழிகள் பலவிருந்தும் சரியானதென்று தென்பட்டதை தேர்ந்து கொண்டு அதில் பயணிப்பது உலக வழமை. ஒன்று தோன்றுவதும் அதன் வீரியம் குறைந்து இன்னொன்று அதை விடச் சிறந்ததாகத் தோன்றி பின் அதில் பயணிப்பதும், அல்லது ஒன்று இன்னொன்றை  வீழ்த்திப்பலம் கொண்டெழ அதனுடன்  தொடர்ந்து பயணிப்பதும் வரலாற்று நிகழ்வுகள்.
ஆனால் மிகப் பலமாய், முன்பை விடப் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டிய ஒரு காலப் பகுதியில் ஒருவர் நெஞ்சிலும் முதுகிலும்  ஒருவர் குத்திக் கொள்வதிலேயே காலத்தைக் கழிப்பது சரியா?  சுயநலன்களைப் பேணுவதிலேயும், பொறாமைப் போட்டியில் வெந்து சாவதிலேயும், பெரியவன் யார்? என்று முன் பின் தள்ளுவதிலேயும் கண்டு கொண்டிருக்கும் பயன் என்ன?
"மனித நாகரிகம்" பற்றிப் பேசுகின்றோம். "மனித நேயம்" பற்றிப் பேசுகிறோம். இவற்றிலே மேம்பாட்டு  நிற்கின்ற இனம் என்றும் பேசிக் கொள்ளுகின்றோம். ஆனால் செயலளவில் இவையனைத்தும் எங்கே போயிற்று? ஒருவர் இல்லாத இடத்திலே அவரைப் பற்றிப் பேசக் கூடாது என்று சொல்லுவார்கள். ஏனென்றால் அதே அவர்கள் சேர்ந்து சிறிது நேரத்தில் எம்மைப் பற்றி பேசத் தொடங்கக் கூடும். பிழையான புரிந்துணர்வுடன் இருப்பதை விட நேரிலே பேசிப் புரிந்து கொள்ளுதல் ஆரோக்கியமான விடையம் என்பதுடன் கருத்துப் பகிர்வு என்பதற்கும் அங்கே இடமிருக்கும்.
அதை விடுத்து மாறி மாறிச் சேறள்ளிப் பூசுவதால் எதிர் விளைவுகள் அனைவரையும் பாதிப்பதாகவே அமைந்து விடுகின்றது. கடந்த காலம் என்பது நிகழ்ந்து முடிந்த ஒன்று. கசப்பான ஒன்றைக் கடந்து இப்போது நின்று கொண்டிருப்பது நிகழ்காலம். நின்று கொண்டிருக்கும் காலத்திலிருந்து  நேற்று இப்படிச் செய்திருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம், இது இவர்  பிழை, அது அவர் பிழை என்று விவாதிப்பதினால் மாண்டவர் மீண்டு விளக்கம் கொடுக்கப் போவதுமில்லை; வரலாறு மீழப் போவதுமில்லை. இப்போதைய தேவை என்ன என்ற கேள்வியே இங்கே முக்கியப்படுத்தப் பட வேண்டிய ஒன்று. அதன் செயற்பாடுகளே தேவைக்குரியவையாகி  நிற்கின்றன. இது ஒரு மிகப் பெரிய பழு; எல்லோரும் சேர்ந்து தூக்க வேண்டிய பழு. தூக்கியே ஆக வேண்டிய கடமைப் பழு. இதை அலட்சியப் படுத்தினால் வரலாறு மன்னிக்காது எம்மை. சாகும்வரை குற்றவுணர்வு சூழ்ந்து மெது மெதுவாகக் கொல்லும்.
இதில் "சேர்ந்து" என்கின்ற பதம்தான் இப்போதைய சிக்கல். இந்த விடையத்தை சிறுவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய உதாரணம் இதற்குச் சொல்லலாம். ஒரு தடவை நான் கற்பித்த மாணவ, மாணவியரிடம் "இந்தத் தடவை நான் எதுவுமே எழுதித் தர மாட்டேன், நீங்களாகவே ஒரு கருவை உருவாக்கி அதை நாடகமாக்கி ஒரு நிகழ்வில் செய்ய வேண்டும் " என்றேன். தாங்களாகவே உருவாக்கி, பாத்திரப் படைப்புக்களையும் தங்களுக்குள்ளேயே பிரித்து சிறப்பாக நடித்திருந்தார்கள். எந்தவிதமான முணுமுணுப்புக்களோ, குற்றச்சாட்டுக்களோ எதுவுமே எழாமல் இணைந்திருந்தனர். பெற்றோர் வாயடைத்துப் பார்த்திருந்தனர். இதனை பெரியவர்களிடம் எதிர்பார்ப்பது கடினமாயிருக்கிறது. சேர்ந்திருந்தோம் ஒரு காலத்தில்; ஆனால் இப்போது எப்படி இப்படி ஆயிற்று?எமக்கு ஆதாயம் வரும்போது மட்டும் சேர்வோம்; இல்லையென்றால் ஆயிரம் காரணங்களை கூடவே வைத்திருப்போம் கேட்டால் எடுத்துவிட. மாறி மாறி அம்பாய்ப் பாய்ச்சக் கூடிய  குற்றச்சாட்டுக்களை  கைவசம் வைத்திருக்கிறோம். விளைவு?  மனக் கசப்புக்கள், சோர்வு, விரக்தி இவற்றுடன் சிறிய விரிசல்கள் மிகப் பெரிதாகி இன்று பாலம் பாலமாக வெடித்துக் கிடக்கின்றன பயனின்றி. சிதறிக் கிடப்பதால் பயனில்லை என்று தெரிந்தும் ஓட்ட வைக்க முயற்சிப்பாரின்றி இருப்பது வேதனையான விடையம்.
நிற்பதுவோ நிகழ்காலம்; தேவையோ பணிக்காலம்.

தனியாய் நின்றால் மரம், அதுவே சேர்ந்து நின்றால் தோப்பு. பயன்களும் அதற்கேற்றபடியே கிடைக்கும்.

"எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு"

கருத்துகள் இல்லை: