புதன், 7 ஆகஸ்ட், 2013

ஈழத் தாய்

நாட்கள் எண்ணும் வாழ்க்கை 
கண்ணில் நோயென்று 
நாள் முழுக்க ஒரு வைத்தியரிடம்
நெஞ்சில் வலியென்று
இன்னொரு நாள் வேறு வைத்தியரிடம் 
கால்கள் வீங்குதென்று
அடுத்தநாள் வரிசையில்  
பெரியாஸ்பத்திரியில்
தனியாளாய் நிற்கையில் 
கலங்கும் கண்களைத் 
துடைக்கிறாள் தன் கைகளால்
ஓர் ஈழத் தாய் 
புயலின் பின்னான
ஊமை அமைதியில் 
வரிசையாய் எல்லோரும்
வந்து இறங்கிக் கொண்டிருக்க 
இவள் மகன் மட்டும் 
மறுத்தே நிற்கிறான் 
கொழும்பு தாண்டும் பயத்தில்
ஆசையாய் உணவாக்கிப் போட
காத்திருந்த கைகள்
நடுங்கத் தொடங்கியுள்ளன 
நம்பிக்கைகள் வழுகிக் கொண்டிருக்க 
தன்னை தூக்கி நிறுத்துகிறாள் 
உட் தோன்றிய சமாதான வார்த்தைகளால்
இனி வரும் நாட்களும் 
தானும் நிழலும் தனி என்று தெரிந்தும் 

வி.அல்விற்.
12.07.2013. 

கருத்துகள் இல்லை: