நாட்கள் எண்ணும் வாழ்க்கை
கண்ணில் நோயென்று
நாள் முழுக்க ஒரு வைத்தியரிடம்
நெஞ்சில் வலியென்று
இன்னொரு நாள் வேறு வைத்தியரிடம்
கால்கள் வீங்குதென்று
அடுத்தநாள் வரிசையில்
பெரியாஸ்பத்திரியில்
தனியாளாய் நிற்கையில்
கலங்கும் கண்களைத்
துடைக்கிறாள் தன் கைகளால்
ஓர் ஈழத் தாய்
புயலின் பின்னான
ஊமை அமைதியில்
வரிசையாய் எல்லோரும்
வந்து இறங்கிக் கொண்டிருக்க
இவள் மகன் மட்டும்
மறுத்தே நிற்கிறான்
கொழும்பு தாண்டும் பயத்தில்
ஆசையாய் உணவாக்கிப் போட
காத்திருந்த கைகள்
நடுங்கத் தொடங்கியுள்ளன
நம்பிக்கைகள் வழுகிக் கொண்டிருக்க
தன்னை தூக்கி நிறுத்துகிறாள்
உட் தோன்றிய சமாதான வார்த்தைகளால்
இனி வரும் நாட்களும்
தானும் நிழலும் தனி என்று தெரிந்தும்
வி.அல்விற்.
12.07.2013.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக