பண்ணிழந்த பறவைகள்
இன்னும் ஒட்டியிருக்கும்
ஈரலிப்பின் குளிர்மையில்
கிளைகளில் இளைப்பாற
வருவதும் போவதுமாய்
மௌனக் குருவிகள்
வலசப் பறவைகளின்
ஆச்சரியங்கள்
தலை திருப்ப வைக்கவில்லை
மிச்சமிருக்கும் உயிருக்காய்
தாழப் பறந்து கொண்டிருக்கின்றன
உணவுதேடிக் கொண்டே
இடையிடையில் மூக்குரசும்
ஓசைகள் கூட
தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமே
கல்லெறியும் குழந்தைகளும்
காலனாகத் தெரிவதில்
தெறித்துப் பறக்கின்றன
மிரண்டுபோய்
உரையாட எழுப்பும்
ஓசைகளின் அழைப்புக் கூட
பதிவுகளை மீளெழுப்புவதில்
அவலமாய் கலைந்தோடுகின்றன
செவிப்பறை கிழித்த வீச்சுக்களையும்
ஒப்பாரிகளின் சோகத்தையும்
மூளை நிரப்பிக் கொண்டதில்
தம் பண் மறந்து வெறுமனேயாகி
சுற்றிக் கொண்டேயிருக்கின்றன
வட்டமிடும் வான்பரப்பும்
கொத்திக் கிளறிய நிலப்பரப்பும்
கொலுவேற்றும் சிறு நம்பிக்கையுடன்.
வி.அல்விற்.
16.05.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக