வியாழன், 8 ஆகஸ்ட், 2013

தாழ்ச்சியின் இடம்.











ஆண்டு தோறும் இலட்சக் கணக்கான மக்கள் பயணப்பட்டு, ஒன்று கூடி தங்கள் நிறைவேறிய வேண்டுதல்களுக்காக நன்றி கூறுவதிலும், வேண்டுதல்களை முன் வைப்பதிலும் முன்னிடம் வைக்கும் இடம் பிரான்சின் தென் பகுதியில் உள்ள லூர்து திருத்தலமே ஆகும். மத வேறுபாடின்றி அன்னையைத் தரிசிக்காமல் மன நிறைவடையாதோர்  பலர். லூர்தின் வரலாறு எல்லோரும் அறிந்த ஒன்று. லூர்து திருத்தலத்தின் தொடர்ச்சியான  அறிய வேண்டிய ஓர் இடத்தின் அறிமுக நோக்காகவே இக் கட்டுரையை வரைய முனைகின்றேன்.
பதினான்கே வயதான ஒரு சிறுமிக்கு அன்னை மேரி தன்னை  வெளிப்படுத்தியதிலிருந்து, இன்று நாம் நோக்கும் திருத்தல லூர்தின் வரலாறு ஆரம்பித்தது எனலாம். வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டிலும் சரி புதிய ஏற்பாட்டிலும் சரி, கடவுள் தன்னை வெளிப்படுத்தியது  தாழ்த்தப் பட்ட நிலையில் உள்ளவர்களிடமிருந்தே. யேசுவின் பிறப்புக் கூட இவ்வாறே  அமைந்தது. 
தைத் திங்கள் ஏழாம் நாள் ஆயிரத்தெண்ணூற்றி நாற்பத்து நான்காம் ஆண்டில், ஏறத்தாழ நான்காயிரம் மக்கள் தொகையாக இருந்த  லூர்து நகரில், François Soubirous Louise தம்பதியினருக்கு மூத்த மகளாகப் பிறக்கிறாள் பெர்னதெத் (Bernadette). இக்குழந்தையை அடுத்து  Toinnette என்கின்ற பெண் குழந்தையும் Jean-Marie,Justin, Bernard-Pierre என்ற ஆண்குழந்தைகளும் பிறந்தனர். இவர்களை விட மேலும் நான்கு குழந்தைகள் பிறந்து மிகச் சிறிய வயதிலேயே இறந்து விட்டனர் என்று சொல்லப்படுகின்றது. 
துன்பங்களையும் பிரிவுகளையும் தாங்கும் பக்குவத்தைக் கடவுள் அக் குழந்தைக்குத் தாராளமாகவே அள்ளிக் கொடுக்கின்றார். பிறந்த ஒன்றரை வருடத்திற்குள் தாயைப் பிரிகின்றாள். பெற்றோரின் தொழில் கை விட்டுப் போகிறது. வறுமை பிடித்தாட்ட இருப்பிடமின்றி தவிக்கும் குடும்பத்தில் நோயும் தனது  பங்கைச் சரியாகச் செய்கின்றது. பெர்னதெத் ஆஸ்துமா நோயாளியாகிறாள். ஒரு கட்டத்தில் அக் குடும்பம் கை விடப்பட்ட சிறைக் கூடம் என்று அழைக்கப்படும் 'Le Cachot ' வில் குடியேறுகின்றது. இந்தச் சிறைக் கூடம் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், 1830 களில் கைதிகள் வேறிடம் மாற்றப்பட்டு வெறுமையாகக் கிடந்த இடம். நான்கு சதுர மீட்டர் கொண்ட இவ்விடத்தில் பெர்னதெத்தின் குடும்பம் ஏறத்தாழ இரண்டு வருடங்கள் வாழ்கின்றது.
பெர்னதெத்தின் பெற்றோர் கூலி வேலை செய்து வர, அவர்களின் வறுமைப் போராட்டத்தில் தனது பங்கைச் செலுத்த, மூன்று மாதக் கைக் குழந்தையாக இருந்த போது அவளை வளர்த்த வளர்ப்புத் தாயிடம்  வேலைக்குச் செல்லுகின்றாள் சிறுமி பெர்னதேத். ஆனாலும் முதல் நன்மை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற அவளுடைய நோக்கம் நிறைவேறாததால் அங்கிருந்து திரும்பி வந்து தனது பெற்றோருடன் இணைந்து கொண்டு அவர்களுக்கு உதவியாக இருந்து கொள்ளுகின்றாள். தங்கை தம்பிகளைக் கவனிப்பதும் சிறு வேலைகளைச் செய்வதுமாய் நாட்கள் நகருகின்றன. 
மாசித்திங்கள் பதினோராம் நாள் ஆயிரத்தெண்ணூற்று ஐம்பத்தெட்டில் வழமை போல விறகு தேடுவதற்காக  'Gave de Pau' என்று சொல்லப்படும் அருவிக்கு அருகில் உள்ள  Massabielle என்று சொல்லப்பட்டு பழைய பாறைக்கு அருகிலே தனது சகோதரி Toinette உடனும் நண்பியான Jeanne Abadie யுடனும் வந்து சேர்கிறாள் பெர்னதெத். மற்ற இருவரும் ஆற்றைக்  கடந்து விட சிறுமி பெர்னதெத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், காற்றில் இரைச்சலுடன் ஓர்  அழகான பெண் ஒளி வெள்ளத்துள் புன்முறுவலுடன் நிற்பதை முதல் முறையாகக் காண்கின்றாள். இம் முதற் காட்சியானது பயத்துடனும், 'அப்பெண்' என்று அவளால் விபரிக்கப்பட்ட பெண்ணுடன் சேர்ந்து செபிப்பதுடனும் மறைகின்றது. 
மாசித்திங்கள் பதினான்காம் நாள் ஆயிரத்தெண்ணூற்று ஐம்பத்தெட்டில் நடைபெற்ற இரண்டாவது காட்சியிலே, பெர்னதெத் தன்னுடன் எடுத்து வந்த ஆசி நீரை 'அப்பெண்'ணின் மீது தெளிக்க, அவளின் சிரிப்புடன் செபம் தொடர்ந்து அது முடிவடைந்ததும் மறந்து போகின்றாள். பெர்னதெத் மயங்கிப் போய் விடுகிறாள் என்று சொல்லப்படுகின்றது. மூன்றாவது காட்சியில் பெர்னதேத் என்னும் குழந்தை சொல்லுவதை உறுதிப் படுத்த முயற்சிக்கும்  படலம் அருகிலுள்ளவர்களால் செய்யப்படுகிறது. ஆனால் மரியன்னை அவளூடாக ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறாள் என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கவில்லை.  பெர்னதெத் மரியன்னை யார் என்று புரிந்திருக்க முடியாத நிலையில் "ஓர் அழகிய பெண்" என்றுதான் எப்போதும் சொல்லியிருக்கிறாள். அவள் தான் கண்ட அன்னை மரியிடம், அவளுடைய பெயரை எழுதித் தரும்படி கேட்கும்படி பணிக்கப் படுகின்றாள். இம்முறை மரியாள் குழந்தையுடன் உரையாடுகின்றாள். ஆனால் "உங்களுக்கு இவ்வுலக மகிழ்வான வாழ்க்கையை அருளமாட்டேன்" என்று கூறுகின்றாள். 
தொடர்ந்து நடை பெற்று வரும் காட்சிகளுக்கிடையில் திருச்சபையைச் சேர்ந்தவர்களாலும் ஊரில் இரண்டுபட்டவர்களாலும் விமரிசனங்களுக்கும் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படுகிறாள் பெர்னதெத்.        
ஒன்பதாவது காட்சியிலே கெபியின் அடிப்பாகத்தில் உள்ள இடத்தில் பெர்னதேத்தைக் கழுவிக் கொண்டு அதில் வரும் நீரைப் பருகும் படி பணிக்கப்படுகின்றாள். அதுவே சிலதினங்களில் அவளுடைய தோழியின் கை மூட்டு நோயைக் குணமாக்கியத்தில் நோய் தீர்க்கும் மருந்தாகியது கெபியின் நீரூற்று.
பங்குனித் திங்கள் இரண்டாம் நாள் ஆயிரத்தெண்ணூற்று ஐம்பத்தெட்டில் தோன்றிய பதின்மூன்றாவது காட்சியிலே "இங்கே ஆலயம் ஒன்று எழுப்பி, மக்கள் பவனியாக வரும்படி செய்யும்படி  குருவானவரிடம் போய்ச்  சொல்" என்று  மரியன்னையால் பணிக்கப் படுகிறாள். இதனை ஒன்று கூடல் என்னும்  மக்கள் ஆலயத்தில் செபமாலைப் பவனி என்னும் கருத்திலும் கொள்ளலாம். இந்தச் செய்தியைக் குருவானவரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது சிறுமி பெர்னதெத்துக்கு இலகுவாய் இருக்கவில்லை. அவமானப்படுத்தப் படுகின்றாள். இருப்பினும் நீண்ட முயற்சியின் பின்னர் தனக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை தெரிவித்து விடுகின்றாள். அத்துடன் தனது  பணி  முடிவடைந்த திருப்தி அவளுக்குள் எழுகின்றது.
மாசித்திங்கள் இருபத்தைந்தாம் நாள் ஆயிரத்தெண்ணூற்று ஐம்பத்தெட்டில் 
நடைபெற்ற பதினாறாவது காட்சியிலே அழகிய ஒளி சூழ்ந்த பெண்ணிடம் இறைஞ்சிக் கேட்கிறாள் அவள் யாரென்று கூறும்படி. அழகான பதில் கிடைக்கிறது 'நானே அமல உற்பவம்' என்று. அதன் கருத்து அதிகம் புரியாத ஆனால் தனது கேள்விக்கான பதில் கிடைத்து விட்டது என்கின்ற மகிழ்வில், விசாரணைக்காரர்களில் ஒருவரான பங்குக் குருவிடம் சொல்கையில் அவர் அதிர்ந்து போய் விடுகின்றார். ஆனாலும் நம்புவதில் இன்னும் தயக்கம் காட்டுகின்றார். ஆனாலும் பெர்னத்தெத்துடன் மக்கள் படையெடுத்து சென்ற வண்ணம் இருக்கின்றனர். இன்னொரு பக்கத்தினால் மருத்துவ ரீதியாக அவளைப் பரிசோதிக்கவும் பதவியிலுள்ளவர்கள் தவறவில்லை.
ஆடித் திங்கள் பதினாறாம் நாள் ஆயிரத்தெண்ணூற்று ஐம்பத்தெட்டில், இறுதிக் காட்சியான பதினெட்டாவது காட்சியில் 'கெபி' இருக்கும் இடம் சுற்றிவர அடைக்கப்பட்டிருக்க, பெர்னதேத் கொஞ்சம் தொலைவில் இருந்து செபிக்கத் தொடங்குகையில் அன்னை தன்னருகே இருப்பதை உணர்ந்து கொள்ளுகின்றாள். இக்காட்சி அன்னையின் அரவணைப்பு எங்கும் இருக்கும் என்பதை உணர்த்துகின்றது.
"குருவானவரிடம் போய்ச் சொல்" என்ற பதின்மூன்றாவது காட்சியின் செய்தி மறுதலிக்க முடியாத ஒன்றாகிப் போய் விடுகின்றது. 
ஆடித் திங்கள் இருபத்தெட்டாம்  நாள் ஆயிரத்தெண்ணூற்று ஐம்பத்தெட்டில், விசாரணைக் குழு அமைக்கப் படுகின்றது. மூன்றாண்டுகள் இதற்குத் தேவைப்படுகிறது. இதனிடையில் மூன்றாவது நெப்போலியனின் மகனின் நோய் லூர்து ஊற்று நீரைக் குடித்ததினால் குணமாகியதால் கெபியைச் சுற்றிப் போடப்பட்டிருந்த தடைகளை நீக்கிவிடுகிறான் நெப்போலியன்.
விசாரணைக் குழுக்களின் ஆய்வின் முடிவில் ஆயிரத்தெண்ணூற்று அறுபத்து இரண்டில் ஆயர் லோரன்ஸ் மரியாளின் காட்சி உண்மை என்று பகிரங்க அறிக்கை விடுகிறார்.
இந்த நிலையில் Nevers என்கின்ற இடத்தைச் சேர்ந்த அருட் சகோதரிகள் லூர்தில் நோயாளர்களையும் போரில் காயம் அடைந்தவர்களையும் பராமரிக்கும் பணியில் தானும் இணைய விரும்புகின்றாள். அத்துடன் தான் அருட் சகோதரியாக விரும்புவதையும் உணர்கிறாள்.
இதன்படி ஆயிரத்தெண்ணூற்று அறுபத்தாறில் Nevers St.Gildard  மடத்திற்கு வந்து சேர்கின்றாள்.
பதின்மூன்று ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறாள். இதனிடையே தனது சகோதரன் Justin ஐயும்பெற்றோரையும் இழந்து விடுகிறாள். 
புரட்டாதித் திங்கள் முப்பதாம் நாள் ஆயிரத்தெண்ணூற்று அறுபத்தேழில் துறவியாகிறாள் பெர்னதேத்.
அங்கே தாதியாகத் தனது  பணியை தொடர்ந்தவர்,  சிறுவயதிலிருந்தே ஒட்டியிருந்த  நோய்கள்  அடிக்கடி வாட்டி வதைக்க,  ஆயிரத்தெண்ணூற்று எழுபத்தெட்டு இறுதியில் படுக்கையாகி, சித்திரைத் திங்கள் பதினாறாம் நாள் ஆயிரத்தெண்ணூற்று எழுபத்தொன்பதில் இவ்வுலக வாழ்வை நிறைவெய்துகிறார் பெர்னதெத்.
இவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட முப்பது ஆண்டுகளின் பின் இவரது கல்லறை திறக்கப்பட்டபோது உடல் அழியாமல் இருந்திருக்கிறது.
ஆனித் திங்கள் பதினான்காம் நாள் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து மூன்றில் திருத்தந்தை பதினோராம் பயஸ் அவர்களால் புனிதையாக உயர்த்தப்படுகிறார்.

பல ஆலயங்களால் சூழப்பட்டு இருக்கும் இடம் Nevers. பரிசிலிருந்து தெற்கு நோக்கி ஏறக்குறைய இருநூற்றைம்பது கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள அமைதி நிறைந்த ஆடம்பரமற்ற பகுதி. இங்கே ST. BERNADETTE. தனது வாழ்வின் இரண்டாம் பகுதியை அமைதியாய் சேவையுடன் தனித்து இருக்க விரும்பியுள்ளார் என்பதை அவர் பாதம் பட்ட இடங்கள் சாட்சி பகர்கின்றன. ஒரு சிறிய குகை போன்ற பகுதியில் நீண்ட நேரங்களை தனியே செபித்திருந்து  செலவிட்டிருப்பது  அதிசயிக்க வைக்கின்றது. அவர் தங்கியிருந்து இறந்த  அறையில் அவருடன் வேறு இரண்டு  அருட் சகோதரிகள் தங்கி இருந்திருக்கின்றனர். அந்த அறையை அப்படியே பாதுகாத்து வருகின்றனர் ஒரு செபக்கூடமாக.  யாரும் பார்த்து வரும்படி அமைந்துள்ளது. ஆலயத்தினுள்ளே அவரது உடலம் பேழையுள் வைக்கப் பட்டுள்ளது. ஆலயத்துக்கு வெளியே லூர்து கெபி போன்ற ஓர் இடத்தை இங்கே அமைத்துள்ளார்கள்.  ஒரு சிறிய அவர் பாவித்த பொருட்கள் அடங்கிய காட்சி சாலை ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது. தூர இருந்து வருபவர்கள் தங்குவதற்கேற்ப ஒரு விடுதி ஆலயத்துடன் சேர்ந்த கட்டிடத்தினுள் அருட்சகோதரிகளினால் நடாத்தப்படுகின்றது. பணியாளர்கள் எப்போதும் வெளியே அன்போடு வரவேற்று விளக்கமளித்து வருகின்றனர். இவ்விடம் ஒரு முறை சென்றால் மீண்டும் சென்று வரத் தூண்டும் அமைதிப் பூங்கா.

வி.அல்விற்.
09.08.2013.

துணை நூல்: "லூர்து நம்பிக்கை தரும் நகரம்" (அருட்திரு. செபமாலை அன்புராசா).
துணைத் தளம் : http://fr.wikipedia.org/wiki/Bernadette_Soubirous#Les_trois_premi.C3.A8res_apparitions














3 கருத்துகள்:

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

_/\_ @-}~

Calavady சொன்னது…

Arpudam.azhagana padivou. Pala varudangalukku mun en amma thangai kudumbamum lourdes vandirudargal engalukkaga prarthanai seidu vandargal.

Michaelpillai சொன்னது…

பசுபதி ஐயாவுக்கும் கலாவதி அம்மாவுக்கும் நன்றி. எல்லோருடைய வேண்டுதல்களும் நிறைவேறும் நம்பிக்கை வைத்தால்.