வெள்ளி, 20 ஜூன், 2014

நீ நீயேயாய்..

உன்னால் மாற முடியாது 
மீண்டும் மீண்டும் 
உனக்கு நீயே எதிரியாகிறாய் 
கடைந்தெடுத்த காடைத்தனமும் 
கட்டின்றி மிதக்கும் வெறித்தனமும் 
உன்னிடமிருந்து பிரிக்க முடியாதவை 

ஒரு காலம் மடித்து முடிப்பதற்குள் 
இன்னொன்றைப் புதிதாக 
எழுதத் தொடங்கியுள்ளாய் 
அத்தாட்சிப் பத்திரத்தில்
காயாத குருதி ஆணியால்

மிருகவதைகள் ஆழமாக
எதிர்கொள்ளப்படும் காலத்தில்
மனிதவதைகள் இலகுவாகிறது உனக்கு
நீ நீயாக இருப்பதில்
உலகுக்கு நட்டம் ஏற்படாத வரையில்
உன் நாட்டில்
மும்மாரி பொழிந்து கொண்டுதான் இருக்கும்
பெற்றுக் கொள் அமோக விளைச்சலை!
தூற்றிக் கொள் காற்றுள்ளபோதே!

வெப்பம் எரிக்கும் காலம் ஒன்று வரும்
உன் மக்கள் வாழும் நிலம்
வெடிப்பெறிந்து போகும்
ஒரு துளி நீருக்காய்
உன் தொண்டையில்
உயிர் சிக்கிக் கொள்ளும்

அப்போது
உன் கண்களில் தோன்றும் தவிப்பில்
இரக்கப்படுவோர்
இல்லாதிருப்பர் அருகில்

காலம் எப்போதும் யாருக்கும்
காத்திருப்பதில்லை.

வி.அல்விற்.
17.06.2014.

கருத்துகள் இல்லை: