அகிலத்தின் ஆட்சிக் கையளிப்பில்
மமதை கொண்டு மிதக்கிறாய்
பேரழகியின் விழியில் வீழ்ந்த
காமுகன் போல கிறங்கியபடி
நிறுத்த முடியாதுள்ளது உன்னால்
உன்னைச் சுற்றிக் கட்டியுள்ள
இறுமாப்புச் சுவருள்
உன் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டதான
சிந்தனைச் சிறைக்குள்
வாழ்க்கை அழுது வடிப்பதைப்
புரியாமலேயே போகின்றாய்
வியாபித்துக் கொண்டே போகும்
உனக்குள்
அழிபட்டுப் போகிறாய்
மழையின் பின் தோன்றியழியும்
வானவில்லாய்
மீட்க முடியாமல்
காலத்தின் கடப்புக்குள்
ஆடி முடிக்கும் வெறியோடு
வாதங்களும் பிரதிவாதங்களுமாய்
வாழ்வின் நுண்ணியல்கள் துச்சமாகி விட
வெறுமனே முடுக்குதலில்
சாய்(ர்)ந்து நடக்கப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளாய்
ஒழுங்கமைக்கப்பட்ட
இயந்திர மனிதன் போல
உன் மிதப்புக்களுக்குள் நீயும் நானும்
மாண்டு போக
பிரபஞ்சம்
இன்னொரு தலைமுறையைப்
பிறப்பித்துக் கொண்டிருக்கிறது.
வி.அல்விற்.
26.06.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக