வெள்ளி, 31 ஜனவரி, 2014

என்னுடன் நீ

எப்படித் தொடருகிறாய்?
காதலில் மையலான போது
இளமையிருந்தது இரசித்திருக்க
கோபங்கள் அப்போது
கொஞ்சல்களாயிருந்தன
ஊடல்கள் எல்லாமே
விடியலுக்குள் முடிந்திருந்தன
குற்றங்களின் பார்வைகள் 
ஓருணவு நேரத்துள் களையப்பட்டிருந்தன
என்வீட்டுச் சிக்கல்கள்
உன் வீட்டினதாய்த் தீர்க்கப்பட்டன
உன் வீட்டுச் சிக்கல்கள்
என்வீட்டினதாய்த் தீர்க்கப்பட்டன
காலம் அடித்துப் போடுமோவென்ற கலக்கம்
உள்ளேயே பதுங்கியிருந்தது அப்போது
அனலாய்க் கொதிக்கும் போது
தென்றலாய் தடவுகிறாய் இன்றும்
மனமழுந்தித் தவிக்கும்போது
விடுதலையை வார்க்கிறாய் இன்றும்
உடைந்தழும் வேளைகளில் உலக
உண்மைகளை உணர்த்துகிறாய் இன்றும்
சுமைகளில் கூனும் நேரங்களில்
சுகமாய் சேர்ந்து சுமக்கின்றாய் இன்றும்
சவாலாய்த் தொடங்கிய பயணம்
சமதரையில் பயணிக்கிறது இன்றும்
காலம் புரட்டிப் போடவில்லை
கற்றுத் தந்திருக்கிறது என்றும்
காதலில் வாழும் வாழ்வை.

வி.அல்விற்.
31.01.2014.

கருத்துகள் இல்லை: