புதன், 20 பிப்ரவரி, 2013

தவறு

பாலுக்கழுத பிள்ளைக்கு முலைகொடுத்த உமையாள்
இங்கு இற ங்கி வர வேண்டும்உயிர் கொடுக்க
பாற்கடல் கண்ணன் சேர்ந்து வர வேண்டும்
ஓர் இறுதிக் குரல் கேட்டு 
கொடும் வதை தடுக்க 
திரௌபதி அலறலுக்கு செவிமடுத்த கிருஷ்ணன் 
இறங்கி வந்து புடவையல்ல 
உயிர்க்காற்றளிக்க வேண்டும் 
கேளுங்கள் தரப்படும் என்ற யேசு 
இக்கணம் தன் வாக்கை செயலாற்ற வேண்டும் 
கொல்லாமை புகட்டிய அமைதிப் புத்தர்
இந் நிமிடம் தன் சொல் அமுல்படுத்தி
இவ்வுயிர் காத்திட வேண்டும்
இது எதுவுமே நடை பெறவில்லையே
இவர்களுக்கே உயிர்ப் பெறுமதி தெரியவில்லை
படைப்பின் பொறுப்பாளன்
என்று சொல்லிக் கொள்பவனே
குலைத்துப் போடு உன் படைப்பை
உன் படைப்பில் மனிதன் தவறாயுள்ளான்
பிரித்துப் போடு அனைத்தையும்
முடிந்தால் நீதியும் நியாயமும் உள்ள
ஓர் உலகைப் படைத்துப் போடு

கருத்துகள் இல்லை: