சனி, 2 பிப்ரவரி, 2013

காத்திருக்கிறேன்!


குளிர்காலம் கழிக்க
உன் இனம் தழைக்க
வலசம் போன புட்களே
என்போலில்லை நீ 
என்னூர் ஏதுவாயிருக்கும்
என்றுதானே எண்ணிப் போனாய்
நலம் எங்கும் கண்டாயா இல்லை 
நலிந்த என் இனம் பார்த்தாயா 
என்தாயின் கண்ணில் 
என்வருகை கண்டாயா 
என்சகோதரர் இடம் கண்டு 
தலை சாய்த்து மௌனித்தாயா 
சகோதரியர் அலறல் காற்றில் 
கோரமாய் கலந்திருந்தனவா
எத்தனை இருப்பிடங்கள் 
ஆவிகள் நிறைந்து கிடக்கின்றன  
காணாமல் போன சொந்தங்களுக்காய் 
கால்களால் கிளறி 
ஆறுதல் சொன்னாயா
அலைக்கழியும் உறவுகளுக்கு
குளிர்தேசத்தின் தடிப்பான 
போர்வை எடுத்துச் சென்றாயா 
தேவையில்லை என்றிருப்பார்களே
தன்னம்பிக்கையுள்ளவர்கள்
பொங்கலும் முடித்து வருகிறாய்
எத்தனை வீடுகளில் 
எரியவில்லை அடுப்புக்கள் 
ஒவ்வொன்றாய் கவனி
பொய்பேச முடியாது உன்னால்
உடல்  மெலிந்து வருவாய் 
தெரியுமெனக்கு
கண்டதை மட்டும் சொல்!
கசப்பானாலும் கேட்டு
என்னை நானே வருத்துவேன்
என் சொந்தங்களுக்காய் 
கண்டதை மட்டும் சொல்
வசந்தம் அண்மிக்கிறது 
உன்வருகைக்காய் காத்திருக்கிறேன்! 


கருத்துகள் இல்லை: