வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

உறங்குநிலை


இந்த உறங்குநிலை பிடிக்கவில்லை 

ஆமை ஓட்டுக்குள் ஒடுங்கினாற்போல்

மரங்களின் இலையுதிர்கால உதிர்ப்பில் 

வழியெங்கும் இறைந்து கிடக்கும்  

சருகுகளின் சரசரப்பு 

காலடிகளுடன் கடந்து போகின்றது 

தெருவைக் கடக்க தலைதூக்கும்

ஒவ்வொரு தருணமும் 

வெவ்வேறு ஒலிகள் 

அச்சத்துடன் உள்ளிழுக்க வைக்கின்றன 

காற்றில் அலையும் தாள்களை

குழந்தைகள் ஓடிஓடிப் பொறுக்கும் ஒலி 

இரைச்சலாய்க் கேட்கிறது

இக்கணம் நகராது தரித்துள்ளது 

எல்லாமே தாண்டிப் போகின்றன 

உலகைத் தரிசிக்க முடியாது போய் விடுமோ

வெளிவந்து கடந்திடாவிடில் 

கடந்தவை பல தெரியாமலே போய்விடும் 

பின்னர் இலைதுளிர் காலம் வரும் 

தொடர்ந்து வசந்தம் வரும் 

கோடையும் கழிந்து 

மீண்டும் இலையுதிர் காலம் வரும்

அதற்குள் தனியே 

காலடிகள் மட்டுமே  மாறிச் செல்லாது! 

கருத்துகள் இல்லை: