இந்த உறங்குநிலை பிடிக்கவில்லை
ஆமை ஓட்டுக்குள் ஒடுங்கினாற்போல்
மரங்களின் இலையுதிர்கால உதிர்ப்பில்
வழியெங்கும் இறைந்து கிடக்கும்
சருகுகளின் சரசரப்பு
காலடிகளுடன் கடந்து போகின்றது
தெருவைக் கடக்க தலைதூக்கும்
ஒவ்வொரு தருணமும்
வெவ்வேறு ஒலிகள்
அச்சத்துடன் உள்ளிழுக்க வைக்கின்றன
காற்றில் அலையும் தாள்களை
குழந்தைகள் ஓடிஓடிப் பொறுக்கும் ஒலி
இரைச்சலாய்க் கேட்கிறது
இக்கணம் நகராது தரித்துள்ளது
எல்லாமே தாண்டிப் போகின்றன
உலகைத் தரிசிக்க முடியாது போய் விடுமோ
வெளிவந்து கடந்திடாவிடில்
கடந்தவை பல தெரியாமலே போய்விடும்
பின்னர் இலைதுளிர் காலம் வரும்
தொடர்ந்து வசந்தம் வரும்
கோடையும் கழிந்து
மீண்டும் இலையுதிர் காலம் வரும்
அதற்குள் தனியே
காலடிகள் மட்டுமே மாறிச் செல்லாது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக