வெள்ளி, 24 ஜனவரி, 2014

நீயாயிரு...தீயாயிரு....

வேகமுடன் சீறியெழும் பாம்பின் நஞ்செனக் 
கொல்லும் சீரற்ற வார்த்தைப் பிளம்புகளின் முன்
கருக் கொண்ட சிந்தனை முழுமையுற - உனை   
ஏற்கும் சில மனிதருக்காகக் காத்திருக்கிறாய் 

மௌனங்களை பலவீனமாய் உருவகப்படுத்தி 
உன் பார்வைகளின் வீரியத்தை அடக்கும் 
விசித்திர மனிதர் கேலிச் சிரிப்பின் முன் - உனை 
ஏற்கும் சில மனிதருக்காகக் காத்திருக்கிறாய் 

கொள்கைக்கு ஆண் பெண் வேறுபாடுண்டோ 
பெற்ற கல்விக்கு அதிலொரு பிரிவுண்டோ
சிந்தனைக்கு இயைவாய் ஆய்ந்தொழுகும் - உனை   
ஏற்கும் சில மனிதருக்காகக் காத்திருக்கிறாய் 

ஆணியாய்  அறையும் உண்மை தாங்காது 
ஆணவம் என்று பெயர் வைத்து நசுக்குவர் 
ஆணாகவில்லையெனும் அடாத சொல்லறுக்கும் - உனை 
ஏற்கும் சில மனிதருக்காகக் காத்திருக்கிறாய் 

எத்தனை வார்த்தைகளும் உன்னைத் தீயாது
பத்திரமாய் வைத்திரு கனவுகளை உயிருக்குள் 
எத்தனை பெரிய இவ்வையகப் பரப்பிலே -  உனை 
முட்டி மோதி நீயாகக் காட்டிவிடு.

வி.அல்விற்.
20.01.2014.

2 கருத்துகள்:

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

ஆணாகப் பிறந்து மட்டும் என்ன சாதிக்க முடியும் ஆணவக்காரரிடம்... ... ... பிரான்லிருந்து வினைகெட்டு வந்த ஆணவரிடம் எங்கள் ஞாயம் எடுபடவில்லை.

Michaelpillai சொன்னது…

எல்லாவற்றிற்குமே தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.