கல்வி
காற்றுக் கூட சுதந்திரமாக
தன்பாட்டில் அலைகிறது
உறைந்திருக்கும் குளிரில்
உயிர் காத்திருக்கும் வேர்கள்
மரங்களுக்குச் செய்தியைப்
பரிமாறிக் கொள்கின்றன
தன்காலத்திலே இதழ்விரித்து
மலர்களும் மணம் பரப்புகின்றன
மழைத்துளிகள் மேகங்களிடம்
அனுமதி வாங்கிக் கொண்டு
தரை தொட்டுப் பரவசப்படுத்துகின்றன
இயற்கை கற்றுக் கொடுக்கும்
இலவசப் பாடங்களை இரசிக்க மறந்து
இறுக்கிக் கட்டப்பட்ட
பெருச்சாளிகளின் திட்டத்தின் கீழ்
வெல்லும்படி இறக்கி விடப்பட்ட
மூச்சிரைக்க ஓடும் குதிரைகள் போல
சிரிக்க மறந்த இறுகிய முகங்களுடன்
கனவுகள் சுமக்கும் காலங்களில்
புத்தக மூட்டைகளை
சுமந்து செல்லுகின்றனர்
எம் குழந்தைகள்.
வி.அல்விற்.
26.02.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக