சனி, 1 மார்ச், 2014

விட்டு விடுங்கள்!

விட்டு விடுங்கள்! 

புழுதியாய் வாரி எறியும் சொற்களை 
காலம் ஒரு பதில் சொல்லியிருக்கிறது
இயலாமையின் சோர்வுகளையும் 
முடிவிலிக் கேள்விகளின் கோர்வைகளையும் 
கொஞ்சம் ஆற்றிப் போட்டிருக்கிறது 
காற்றிலே வந்த கானமொன்று 
கடல் கொண்டு போனவனை 
நீண்ட நாட்களின் பின்
உப்பு நீரில் உப்பிப் போகாது 
அலைகள் கரை சேர்த்தது போன்று
காலம் வெளித் தள்ளியிருக்கிறது
மகிழ்ச்சியாய் நீங்கள் வாழ்ந்த நேரங்களை
ரணமாய் கழித்தவர்கள் அவர்கள்
குடும்பமாய் நீங்கள் களித்திருந்த நேரங்களில்
தனிமை அவர்களைத் தின்று தீர்த்திருக்கிறது
தன் ஆசை தீரும் வரை
உங்களைப் போன்றே அவர்களும்
உங்கள் உறவுகள் போலவே அவர்களினதும்
மீள முடியாத வலிகளுடன் என்றாலும்
தாயின் கையால் ஒரு பிடி சோறுண்டு
மனைவியின் அன்பால் அணைக்கப்பட்டு
குழந்தையுடன் ஆசையாய் பேசி மகிழ்ந்திட
விட்டு விடுங்கள்!
இதிலாவது உங்கள் விமரிசனங்களை
தூர நிறுத்தி வையுங்கள்!

வி.அல்விற்.
19.02.2014.

கருத்துகள் இல்லை: