புதன், 3 ஆகஸ்ட், 2016

திமிர்

அவர்கள் ஆண்களாயிருக்கிறார்கள்.

நீ
கொடியெனவும் செடியெனவும்
முல்லையிலும் சிறந்த மலரெனவும்
கருநாகம் போலவுன்னை
வருணிக்கின்றார்கள்.

உனது தனிமையும்
கண்ணீரும்
ஆறுதல் தேடும் கரங்களும்
இன்னும் இன்னும்…..
உனது பலவீனங்கள்
அவர்களது பலங்களாகவிருக்கின்றன.

காமப் பற்களை அழுத்தி
உன்னைச் சீரழிக்கப்
பேயாக அலைகிறார்கள்.

பெண்ணே!

உனக்கேன் புரியவில்லை
உனது பலங்கள்?

வேர் கொண்டுள்ள அன்பும்
காத்து நிற்கும் உறவுகளும்
வாள் போலறுக்கும் உனது விழிகளும்
நாவென்னும் கணையும் கொண்டு
உன் பலம் பெருக்கும் துணிவை
எங்கே ஒழித்து வைத்தாய்?

எடு பயமறுத்து! வெட்டி விடு!
கழுத்தைச் சுற்ற வருவதை.

நீ
பெண்ணாக நிமிருவாய்!

அன்றேல்,

மிதித்து நகர்ந்து போவார்கள்

ஆண் திமிருடன்.

வி. அல்விற்.
24.04.2015.

கருத்துகள் இல்லை: