ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

வாழ்க்கை.

எது வாழ்க்கை?
புரிந்திருக்கிறாயா அவளை?
அங்கிருந்து ஆரம்பிக்கின்றது
படரும் கொடி போன்ற அன்பு.
அது,
இன்பத்தில் சேர்ந்து களிக்கவும்
துன்பத்தில் தாங்கி நிற்பதற்குமான
ஒரு தெரிவு.
நீ மரமாயிருப்பாய் எனும்
நம்பிக்கையின் உறவு.
மரங்கள் தறிபடாது என்னும் நம்பிக்கை.
வேர்கள் பரப்பி,
கிளைகள் பெருக்கி
காலத்துக்கும் இளைப்பாறலாம் இருவரும்
என்கின்ற துணிவு கொண்ட உறவிது.
உனது செயல்களை
தனது விட்டுக் கொடுப்புக்களால்
நிரப்பிக் கொள்ளும்
அவளது அன்பைப் புரிந்தாயா?
உன்னையவள் முழுமையாக்க எண்ணுவதை
உணர்ந்தாயா?
உனது உதாசீனங்கள் வேர்களை அறுத்து விடும்.
உனது நேர்மையீனங்கள் கிளைகளை முறித்து விடும்.
உனது பொய்கள் தூரத் துரத்தி விடும்.
வாழ்க்கை அவ்வளவே!
முழுமையிலல்ல;
புரிந்து வினையாற்றுவதிலுள்ளது.

வி. அல்விற்.
05.08.2016.

கருத்துகள் இல்லை: