அதன் பின்னர் பள்ளி வாழ்க்கை ஆரம்பிக்கின்றது. முதன் முதலில் வெவ்வேறு பட்ட சூழல்களிலிருந்து வரும் தன் வயது குழந்தைகளுடன் சேர்ந்து சமூக வாழ்க்கையைக் கற்க பழகுகின்றது. அங்கே சேர்ந்து வாழ்தல், பகிர்ந்து வாழ்தல், விட்டுக் கொடுக்கப் பழகுதல், சக மனிதரை மதிக்கப் பழகுதல், கருத்துப் பகிர்ந்து அறிவைப் பெறுதல், தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளல் போன்ற பல விடயங்களைக் கற்க ஆரம்பிக்கின்றது.
இந்தவிடத்திலே விளையாட்டுக்கள் குழந்தையின் ஆழுமையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதன் நன்மைகள் அனைவரும் அறிந்த குழு விளையாடுக்களிலே குழு முயற்சியும் வெற்றியும், அதன் ஒற்றுமை, விட்டுக் கொடுப்பு, மதித்தல், உடல் ஆரோக்கியம், மன மகிழ்வு, ஒழுங்கமைப்பு, குழுவினுள்ளும் தனித்திறமையை வளர்த்தல் (தலைமைத்துவம், வழிநடத்துதல் போன்ற) என்பனவும், தனிவிளையாட்டுக்களிடையே மேற் கூறியவற்றுடன் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள தனித்திறமைகளை வளர்த்துச் செல்லுதல் என்பனவும் முக்கியத்துவம் வாய்ந்து விளங்குகின்றன.
இவையனைத்திற்கும் அடிப்படையாகவுள்ள "ஆர்வம்" ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பாதையைத் தேர்ந்தெடுக்கத் தூண்டுகின்றது. அது பெற்றோரிலிருந்து வந்ததாக்கவுமிருக்கலாம்; அல்லது தாங்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்டதாக்கவுமிருக்கலாம். எப்படியிருப்பினும் அவை அனைத்தும் நன்மை மிக்கதாகவே இருக்கின்றன. காற்பந்து போன்ற குழுவிளையாட்டுக்களில் மேற்கூறிய நன்மைகளும் , சதுரங்கம் போன்ற விளையாட்டுக்களில் சிந்தனைத்திறன்(சாதுர்யம்) போன்ற மேலதிகத் திறமைகளும் வளர்க்கப்படுகின்றன. அதே போன்றே குறி பார்த்துச் சுடுதல், அம்பெய்தல் போன்ற தனி விளையாட்டுக்களில் மனதை ஒருங்கிணைத்தல், செய்யும் காரியத்தில் மட்டுமே கவனத்தைச் செலுத்துதல் போன்ற திறமைகளும், தற்காப்புக்கலை விளையாட்டுக்களில் உடல் உறுதி, அவதானம், விரைந்து செயற்படல், மனதை ஒருநிலைப்படுத்தல் போன்றவையும் முன்னிலைப் படுத்தப்படுகின்றன. இவை தவிர குழந்தைகளின் மகிழ்ச்சி என்பது அவர்களின் மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றது என்பதும் முக்கியமான விடையமாகின்றது.
இவை அனைத்துமே போட்டிகளூடாக பரிசீலிக்கப்பட்டு, மேன்மேலும் தரம் கூட்டி வலுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்படியாக விளையாட்டுக்கள் அனைத்துமே எதிர்கால சமூக, தொழில் ரீதியான வெற்றிக்கான ஒரு பகுதி திறவுகோல்களாக அமைகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக